Saturday, April 5, 2014

திறமையில்லாதவர்கள் வீட்டுக் கதவைக் கூட அதிர்ஷ்டம் எப்படியோ தட்டி விடுகிறது

அந்தணர் ஒருவருக்கு, அவரது தொழிலில் அதிக வருமானம் வரவில்லை. எப்போதாவது யாராவது ஒருவர் தான் கோயில், பூஜை என அழைத்தார்கள். அவருக்கோ மூன்று மகள்கள். அவர்களை குறைந்த வருமானத்தில் எப்படி கட்டிக் கொடுப்பார்?
ஒரு சிலர் அவரிடம், ""நீர் வேதம் படித்ததற்கு பதில் இசை படித்திருக்கலாம். இசை ஞானிகளுக்கு தான் இப்போது வருமானம் அதிகம்,'' என்றனர். இவரும் ஆசையில், ஒரு மரத்தடியில் அமர்ந்து பாட ஆரம்பித்தார். குரல் வளம் இல்லாததால், பாட்டு கரகரப்பாக வந்தது. அந்த மரத்தில் இருந்த ஒரு பேய்,""சுவாமி! நான் சங்கீத வித்வானாக இருந்து இறந்து போனவன். உம் அபஸ்வரம் தாங்க முடியவில்லை. வேறு எங்காவது போய் பாடும்,'' என்றது.
அந்தணர் மறுத்தார். ""எனக்கு பணத்தேவை அதிகம். பாட்டு கற்றால் தான், வருமானம் வரும்,'' என்றார்.
உடனே பேய்,""உமக்கு பணம் தானே வேண்டும். நான் இந்நாட்டு இளவரசியைப் பிடித்துக் கொள்கிறேன். நீர் ராஜாவிடம் போய், பேயை விரட்டுவதாகச் சொல்லி, இந்த பாட்டைப் பாடும். உம் பாட்டுக்கு பயந்து நான் அவளை விட்டு ஓடி விடுகிறேன். ராஜா உனக்கு நிறைய பரிசளிப்பார்,'' என்றது. அந்தணரும் அவ்வாறே செய்ய அவருக்கு ராஜா நிறைய பணம் கொடுத்தார். அந்தணரும் தன் மகள்களின் திருமணத்தை சிறப்பாக முடித்தார்.
திறமையில்லாதவர்கள் வீட்டுக் கதவைக் கூட அதிர்ஷ்டம் எப்படியோ தட்டி விடுகிறது. எல்லாம் கடவுளின் லீலை...புரிந்து கொள்ள நம்மிடம் சக்தியில்லை.

No comments:

Post a Comment