Saturday, April 5, 2014

தூது சென்ற "இலை'!

பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யபிரபந்தத்தை நமக்கு தொகுத்துத் தந்தவர் நாதமுனிகள். இவரது பேரன் ஆளவந்தார். வைணவ ஆச்சாரியர் பரம்பரையில் தோன்றிய இவர், அரசு அதிகாரியாக, மன்னனின் அவையில் இருந்தார். அரசன் சொன்ன பணிகளைச் செய்தாரே தவிர, வைதீகப் பணிகளை அவர் கவனிக்கவில்லை.
மணக்கால் நம்பி என்னும் ஆச்சாரியார், தனக்குப் பின் ஆளவந்தாரையே ஆச்சாரிய பீடத்தில் அமர்த்த வேண்டும் என்று விரும்பினார். ஆனால், அவரைச் சந்திப்பது சாமான்யமில்லை என்பது புரிந்து விட்டது.
எப்படியாவது ஆளவந்தாரைச் சந்தித்து, தன் எண்ணத்தை அவரிடம் தெரியப்படுத்த ஆவல் கொண்டார்.
தூதுவளைக் கீரையை ஆளவந்தார் விரும்பி உண்பார் என்பதை ஆச்சாரியார் அறிந்தார். அப்போது, நல்லவழி ஒன்று அவருக்குத் தோன்றியது. தினமும் தூதுவளைக் கீரையை ஆளவந்தாரின் சமையல்காரனிடம் தந்து வந்தார். அவனும், அதை ஆளவந்தாருக்கு சமைத்து வைத்தான்.
தினமும் தூதுவளையை விரும்பி சாப்பிட்டார் ஆளவந்தார். ஒருநாள், மணக்கால் நம்பி, சமையல்காரனிடம் கீரையைக் கொடுக்காமல் நிறுத்தி விட்டார். அன்று உணவுக்கு அமர்ந்த ஆளவந்தார், இலையில் தூதுவளை கறி இல்லாததைக் கண்டு, சமையல்காரனிடம் ""ஏன் தூதுவளை சமைக்கவில்லை?'' என்று கேட்டார்.
""தினமும் ஒருவர் காலையில் தூதுவளைக் கீரை கொண்டு வருவார். இன்று ஏனோ வரவில்லை. அதனால் சமைக்கவில்லை.'' என்றார் சமையல்காரர்.
""மீண்டும் அவர் வந்தால் அழைத்து வா,'' என்றார் ஆளவந்தார்.
மறுநாள் கீரை கொண்டு வந்த நம்பியை, ஆளவந்தாரிடம் அழைத்துச் சென்றார் சமையல்காரர். அவரை வணங்கிய ஆளவந்தார், ""எதற்காக இத்தனை நாள் தூதுவளை கொண்டு வந்து தந்தீர்? உமக்கு வேண்டியது எதுவானாலும் தயங்காமல் கேளும். உமக்கு உடனே தருகிறேன்.'' என்று வாக்குறுதி அளித்தார்.
அதற்கு மணக்கால் நம்பி, ""எமக்கு வேண்டியது ஒன்றும் இல்லை. உம் முன்னோர்கள் தேடி வைத்த பெருஞ்செல்வம் இருக்கும் இடத்தை, நான் அறிவேன். அது உம் கைக்குக் கிடைக்கும்வரை நான் உம்மைப் பலமுறை சந்திக்க வேண்டியிருக்கும். அதற்கு அனுமதி வேண்டும்.'' என்றார்.
தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று ஆளவந்தார் அனுமதி தந்தார். தினமும் ஆளவந்தாரைச் சந்திக்க வந்த மணக்கால் நம்பி, பகவத்கீதையை அவருக்கு போதித்து வந்தார்.
இதைக் கேட்ட ஆளவந்தாரின் உள்ளம் படிப்படியாக உலகியலை விடுத்து, ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டது. பசுவைத் தேடிய கன்றினைப் போல, தத்துவங்களைப் போதித்து வந்த மணக்கால் நம்பியின் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கலானார். ஒரு நன்னாளில் ஆளவந்தாரை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றார் மணக்கால்நம்பி. பரந்தாமனின் மெய்யழகைக் கண்களால் பருகிய ஆளவந்தார், தன்னையே மறந்து பக்தியில் ஈடுபட்டார்.
பெருமாளின் திருமேனியைக் காட்டிய மணக்கால் நம்பி, ஆளவந்தாரிடம், ""உம் முன்னோர் தேடிய பெருஞ் செல்வம் இதுதான்!'' என்றார். பெருமாளின் அன்பில் கட்டுண்ட ஆளவந்தாருக்கு, கோயிலை விட்டுச் செல்ல மனமில்லை.
பெருமாளைப் பார்க்காவிட்டால் பித்துப் பிடித்தது போலாகும் நிலைமை ஏற்பட்டது. எனவே, ஸ்ரீரங்கத்திலேயே தங்கி, தொண்டு புரிந்து, ஆச்சார்யர்களில் ஒருவரானார். தூதுவளைக் கீரையைத் தூதாக அனுப்பிய மணக்கால் நம்பியின் எண்ணம் ஈடேறியது.
"தூது' சென்று ஆளவந்தாரை "வளைத்து' பிடித்ததால், இந்தக் கீரைக்கு "தூதுவளை' என்ற பெயர் ஏற்பட்டது பொருத்தம் தானோ!

No comments:

Post a Comment