Friday, April 4, 2014

நட்புக்கு துரோக செய்ய கூடாது

நட்புக்கு துரோக செய்ய கூடாது
===================================
** “ உயிர் நண்பனுக்கு நாம் எதை செய்ய கூடாது ? ஏன் ? “ என்று தருமர் வினா எழுப்பினார். அதற்கு பிதாமகர் “ நட்புக்குத் துரோகம் செய்யக்கூடாது ” என்பதை தருமருக்கு ஒரு கதை மூலம் விளக்கினார்.
வடக்கே வேதம் அறியா அந்தணன் ஒருவன் இருந்தான். அவன் யாசகத்திற்காக பொருள் மிக்கவர் நிறைந்திருந்த ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கு ஒரு திருடன். அவனுக்கு அந்தணரிடம் பக்தி அதிகம். தானம் செய்வதில் விருப்பம் கொண்டவன். அவனிடம் யாசிக்க அந்தணன் சென்றான். உண்ண உணவும், உடுக்க உடையும் ஓராண்டு தங்க இடமும் கொடுத்தான் திருடன். வாழ்க்கை நடத்த ஒரு கணவனை இழந்த நங்கையையும் அளித்தான். இவற்றை பெற்ற அந்த அந்தணன் இன்பமாக காலம் கழித்தான். நன்றியுள்ள அந்த அந்தணன் அந்த நங்கையின் குடும்பத்தையும் காப்பாற்றி வந்தான். கௌதமன் என்னும் பெயருடைய அவன், வேடர்கள் நிறைந்த அந்த ஊரில் ஓர் ஆண்டு வாழ்ந்தான். வேடர்களோடு சேர்ந்த அந்தணன் வேட்டை தொழிலில் தேர்ச்சி பெற்றான். நாள் தோறும் காட்டு பறவைகளை கொல்வதை வழக்கமாக கொண்டான். இப்படிச் சில நாட்கள் கழிந்தன.
ஒரு நாள் அந்த ஊருக்கு வேறொரு அந்தணர் வந்தார். மரவுரி தரித்தவர். வேதம் அறிந்தவர். ஆசாரம் மிக்கவர். அவர் ஒரு பிரம்மச்சாரி. கௌதமனின் ஊர்தான் அவர் ஊரும். கௌதமரின் நண்பரும் கூட. உணவிற்காக மற்றவரிடம் செல்லாமல் ஒரு அந்தணர் வீட்டைத் தேடிக் கடைசியாக கௌதமனின் வீட்டிற்கு வந்தார். அப்போது கௌதமன் வீடு திரும்பியிருந்தான். அவனைக் கண்ட அந்தணர்க்கு ஆச்சரியமாய் இருந்தது. அவன் கையில் வில் இருந்தது. தோளில் கொல்லப்பட்ட அன்னப்பறவை இருந்தது. அவரை அப்படிக் கண்ட அந்தணர் வெட்கித் தலை குனிந்தார்.
கௌதமனை நோக்கி “ என்ன காரியம் செய்தாய்? உயிர்களை கொல்லும் வேடர் தொழிலை எவ்வாறு மேற் கொண்டாய்? நீ வேதங்களை போற்றும் அந்தணன் என்பது மறந்தாயா ? உயிர்களை கொல்லும் கீழான செயலை செய்யலாமா? நீ உடனே இங்கிருந்து போய் விடு " என்று கூறினார்.
அந்தணரின் அறிவுரையைக் கேட்ட கௌதமன், துயரத்துடன், “ நான் ஏழை. அந்த வறுமை என்ன இந்த நிலைக்கு தள்ளிவிட்டது. இப்போது உம்மால் நான் தெளிவு பெற்றேன். ஓரிரவு மட்டும் இங்குத் தங்கி பின் வேறிடம் செல்லலாம் “ என்று கூறினான். அந்த அந்தணரும் பசியுடன் இருந்த போதும் அவனது வேண்டுகோளை ஏற்று அங்கு தங்கினார் .
பொழுது விடிந்து, அவ்விருவரும் ஊரை விட்டு புறப்பட்டனர். பின் அந்தணரிடம் விடை பெற்று சென்ற கௌதமன் வழியில், கடல் யாத்திரை செய்யும் வணிகரை சந்தித்தான். அப்போது மத யானையால் வணிக கூட்டம் தாக்கப்பட்டது. கௌதமன் வட திசை நோக்கி பயந்தபடியே ஓடினான். யாருடைய உதவியும் இல்லாததால் காட்டில் தனியாக சென்றான். மரங்கள் நிறைந்த காடு அழகு மிக்கதாய் இருந்தது. பறவைகள் ஒலியெழுப்பி கொண்டிருந்தன. அந்த இனிய ஒலிகளை கேட்டுக்கொண்டே இங்கும் அங்கும் திரிந்து கொண்டிருந்தான்.
மணல் கடல் போல் விசாலமாக காட்சி அளித்தது. ஓரிடத்தில் பெரிய ஆலமரம் கண்ணில் பட்டது. குடை கவிழ்த்தது போல் அதன் கிளைகள் தாழ்ந்து நிழல் கொடுத்தன. மகிழ்ச்சியுடன் கௌதமன் அம்மர நிழலில் அமர்ந்தான். மிகவும் களைப்புடன் இருந்தவன், சற்று கண்ணயர்ந்தான். சூரியன் மறைய, அப்போது பிரம்ம லோகத்தில் இருந்து ஒரு பெரிய கொக்கு அங்கு வந்தடைந்தது. அது பிரம்மாவிற்கு நண்பன். காசியப்பருக்கு புதல்வன். கொக்குகளுக்கு அரசன். அதன் பெயர் நாடீஜங்கன். அந்த கொக்கின் இருப்பிடம் அந்த ஆலமரம். அது தேவ கன்னியரிடம் பிறந்ததால் அழகுடன் திகழ்ந்தது. அதன் உடலிலிருந்து எங்கும் ஒளி வீசியது. அந்தக் கொக்கு ராஜ தர்மா என்னும் பெயரையும் பெற்றிருந்தது.
கௌதமன், ஒளி வீசும் அக்கொக்கைக் கண்டு வியப்புற்றான். பசியுடன் இருந்த அவன் அதை கொல்ல நினைத்தான். ஆனால் அந்தக் கொக்கோ அவனை அன்றிரவு தன் விருந்தினராக இருக்க வேண்டி கொண்டது. அந்த கொக்கு அவனிடம் “ ஐயா, நான் காசியப்பரின் புதல்வன். என் தாய் தாட்சாயணி. என்று கூரி நல்ல உணவுகளை கொடுத்து உபசரித்தது. களைப்பை போக்க தன் சிறகால் விசிறிற்று. இலைகளால் ஆன படுக்கையையும் அளித்தது. பின் அவன் வருகைக்கான காரணத்தை கேட்டு அறிந்தது. பின், “ கவலை வேண்டாம். திரண்ட செல்வத்துடன் நீ திரும்புவாய் என்று சொல்லி, “ செல்வம் சேர்க்கும் வழிகள் “ என பிரகஸ்பதி சில வழிகளை சொல்லியிருக்கிறார். அவற்றில் நண்பன் மூலம் சேர்த்தல் சிறந்த வழியாகும். இப்போது உன் நண்பன் நான். உனக்குத் தேவையான வழியை கூறுகிறேன்' “ என உரைத்தது. “ அழகு மிக்கவனே, இவ்வழியே சென்றால் விருபாட்சன் என்னும் என் நண்பனை காண்பாய். அவன் அசுரர்க்கு அதிபதி. மிகவும் பலம் வாய்ந்தவன். என் சொல்லை கேட்டுப் பெரும் செல்வத்தை உனக்கு தருவான் “ என்றும் உரைத்தது.
கௌதமன் பின், அக்கொக்கு சொன்ன வழி சென்றான். இயற்கை காட்சிகளை கண்டு களித்தபடியே மனுவ்ரஜம் என்னும் நகரை அடந்தான். அந்நகரம் கற்களால் ஆன தோரணங்கலை கொண்டு கம்பீரமாகக் காட்சியளித்தது. அந்த அந்தணன் தன் நண்பனால் அனுப்பப்பட்டவன் என்பதை உணர்ந்த அசுரன் அவனை விருந்தினனாக உபசரித்தான். அந்தணனை விருந்தினராக ஏற்றுக் கொண்ட அசுரன் அவனது குலம், கோத்திரம் பற்றி விசாரித்தான். அந்தணன் கூறினான். நான் மத்திய நாட்டை சேர்ந்தவன். தற்போது ஒரு வேடன் வீட்டில் தங்கியிருக்கிறேன். ஏற்கனவே திருமணமான ஒருத்தியை மணந்து வாழ்கிறேன் என்றும், தன் கடந்த ஓர் ஆண்டின் தொழில் மற்றும் வாழ்வை பற்றி கூறினான்.
இதை கேட்டு அசுரன் சிந்தனையில் மூழ்கினான். “ இவன் பிறப்பால் அந்தணனாக இருந்தும் ஒழுக்கத்தில் அப்படியில்லை. ஆயினும் என் நண்பன் ராஜதர்மா என்னும் பறவையால் அனுப்பப்பட்டவன். ஆகவே, இவனுக்கு வேண்டியவற்றை தருவேன். மற்ற அந்தணருடன் உணவை இவனும் அருந்தட்டும். இனி சிந்திக்க ஏதுமில்லை. மிக்க செல்வத்தை இவனுக்கு அளிப்பேன்' “ என்னும் முடிவுக்கு வந்தான்.
அந்த நேரத்தில் ஏராளமான அந்தணர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் விரும்பியபடி அசுரன் பொன்னையும், பொருளையும் வாரி வழங்கினான். மற்றவர்களை போல கௌதமனும் நிறைந்த செல்வத்தை பெற்று கொண்டு பெரும் பாரத்தைச் சுமப்பது போல சுமந்துக்கொண்டு ஆலமரத்தை அடைந்தான். அவன் பசியாலும் வழி நடந்த களைப்பாலும் சோர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் ராஜதர்மா அந்தணனை வரவேற்று, தன் சிறகுகளால் வீசி அவன் களைப்பை போக்கியது. அப்போது “ இந்த பெருஞ்சுமையை தூக்கி கொண்டு நெடுந்தூரம் செல்ல வேண்டுமே, வழியில் உண்பதற்கு உணவு ஏதும் இல்லையே' “ என சிந்தித்தான்.
நன்றி கெட்ட கௌதமன், இந்தப் பறவை அதிகம் சதைப்பற்றுள்ளதாய் இருக்கிறது. இதனை கொன்று இதன் மாமிசத்தை எடுத்து சென்றால் தேவைக்கு அதிகமாகவே உணவு கிடைக்கும் என்னும் முடிவுக்கு வந்தான். தேவ பக்ஷிகளில் சிறந்த பறவையான ராஜதர்மா அதிக ஒளியுள்ள தீயை மூட்டி, கௌதமனின் அருகில் தூங்கலாயிற்று. கௌதமன், தூங்கி கொண்டிருந்த பறவையை தீயில் இட்டு பக்குவப்படுத்தி, செல்வங்களையும், பறவையின் மாமிசத்தையும் எடுத்து கொண்டு கிளம்பினான்.
பறவை அன்று வராததால் அசுரன் கவலைப் பட்டான். இரண்டு நாட்கள் பொறுத்திருந்து பின் தன் மகனை அழைத்து, “ பறவையைக் காணாது மனம் அஞ்சுகிறது. எனக்கு சந்தேகம் வருகிறது. அதன் வீட்டில் தங்கியுள்ள அந்தணன் ஒழுக்கம் கெட்டவன். இரக்கம் இல்லாதவன். நீ விரைந்து சென்று ராஜதர்மா உயிருடன் உள்ளதா என பார்த்து வா “ என்றான்.
மகனும் உடன் பறவை வசித்த ஆலமரத்தை நோக்கி சென்றான். அங்கே ராஜதர்மா கொல்லப்பட்டு, அதன் எலும்புகள் மரத்தடியில் இருப்பதை கண்டான். கோபம் கொண்டு கௌதமனை பிடித்துவர ஆட்களை அனுப்பினான். அந்த ஆட்கள் கௌதமனை பிடித்து இழுத்து வர, பறவையின் எலும்புகளையும் எடுத்து கொண்டு அசுரனிடம் வந்தான். அதுகண்டு அசுரன் கதறி அழுதான்.
பின் அவன் தன் மகனை அழைத்து “ கௌதமனை கொல்ல வேண்டும். மகாபாவியான அவன் மாமிசத்தை, மனித மாமிசம் உண்ணும் அரக்கர்கள் உண்ணட்டும் “ என்றான். ஆனால் நன்றி கெட்டவனின் மாமிசத்தை உண்ண அரக்கர்கள் விரும்பவில்லை. அவனை துண்டு துண்டாக வெட்டி மாமிசம் உண்ணும் அரக்கி கூட்டத்தாரிடம் அளிக்குமாறு கட்டளையிட்டான். அவர்களும் அவன் மாமிசத்தை உண்ண முன் வரவில்லை. நன்றி கெட்டவனின் மாமிசத்தை பறவைகளும் உண்ணவில்லை. திருடனுக்கும், குடிகாரனுக்கும் கூட பிராயசித்தம் உண்டு, ஆனால் நன்றி கெட்டவனுக்கு பிராயசித்தம் ஏதுமில்லை.
அரக்க அரசன் விருபாட்சன் தன் நண்பனான ராஜதர்மா என்ற கொக்கிற்கு தீ மூட்டித் தகனம் செய்தான். சிதை தயாரிக்கப்பட்டு ஆடை, அணிகலங்களால் அலங்கரிக்கப்பட்டது. சந்தன கட்டைகள் அடுக்கப்பட்டன. சிதைக்குத் தீ மூட்டுகையில், மேலே வந்துக் கொண்டிருந்த தாட்சாயணி சுரபியின் வாயிலிருந்து சிந்திய பாலின் நுரையானது ராஜதர்மாவின் சிதையில் விழுந்தது. அதனால் ராஜதர்மா என்னும் கொக்கு உயிர் பெற்று எழுந்தது. விருபாட்சனுடைய நகரை அடைந்தது.
அந்த நேரத்தில் தேவேந்திரன் அங்கு வந்தான். அந்த கொக்கு இந்திரனை நோக்கி “ தேவேந்திரா..என் நண்பனான கௌதமனையும் பிழைக்க செய்ய வேண்டும் “ என்றது.இந்திரனும் கௌதமனை உயிர் பிழைக்க செய்தான்.
இந்திரன் விருபாட்சனை நோக்கி, ராஜதர்மா, பிரம்மாவிடம் பெற்ற ஒரு சாப வரலாற்றை கூறினான் “ அரக்க அரசனே, முன்பு ஒரு காலத்தில் பிரம்மதேவன் மிக்க சினம் கொண்டு ராஜதர்மாவை நோக்கி " நீ எனது சபைக்கு ஒரு முறையேனும் வராத காரணத்தால் தரும குணம் உள்ளதும், பரம்பொருளை அறியத்தக்கதுமான கொக்காக பிறப்பாயாக. பாவச்செயல் புரிபவனும், நன்றி கெட்டவனுமான ஒரு அந்தணன் உனது இடம் தேடி வருவான். உன்னைக் கொல்வான். அப்போது உனக்கு விடுதலை கிடைக்கும். அந்த சாபப்படி ராஜதர்மா உத்தமமான பிரம்மாவின் சத்திய உலகத்தை அடையும். அந்த அந்தணனும் நரகத்தை அடைவான் " என்று கூறி தேவர் உலகை அடந்தான்.
பீஷ்மர் தொடர்ந்தார், “ தருமா....!!! இன் நிகழ்ச்சியை முன்னர் நாரதர் எனக்குக் கூறினார். நான் உனக்கு உரைத்தேன். நன்கு நினைவில் வைத்துக் கொள். நன்றி கெட்டவனுக்கு பிராயச்சித்தமே இல்லை. அவனுக்கு புகழும் இல்லை. இன்பமும் இல்லை. இதுபோலவே நண்பனுக்கு துரோகம் இழைத்தால் நரகம் தான் கிடைக்கும். எனவே ஒவ்வொருவரும் நன்றியுடனும், நண்பரிடம் அக்கறையுடனும் நடந்துக் கொள்ள வேண்டும் “ என்று எடுத்துரைத்தார்.
கங்கை மைந்தர் கூறிய இந்த கதையின் மூலம், நமக்கு உதவியவர்களுக்கு நாம் எக்காலத்திலும் நன்றியோடு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, நம் சுற்றத்தாருக்கும் உணர்த்துவோம்....

No comments:

Post a Comment