Saturday, April 5, 2014

பறவை அரசன் பெற்ற பேறு

பறவை அரசன் பெற்ற பேறு
(ஜடாயு தெரியும்,சம்பாதி கதை தெரியுமா?)சக்கரவர்த்தி திருமகனாம் ஸ்ரீராமபிரானின் வனவாசத்தின்போது அவருக்கு மானிட வர்க்கம் மட்டுமில்லாமல் விலங்கினங்களும், பட்சிகளும், அணில் போன்ற சிறிய ஜந்துக்களும், மலை, சமுத்திரங்களும்கூட ராம கைங்கர்யம் செய்து பெறும் பேறு பெற்றதாகப் புராணங்கள் இயம்புகின்றன. அவ்வரிசையில் கழுகு அரசர்களான ஜடாயும் அவரது அண்ணன் சம்பாதியும் செய்த பேருதவி மறக்க முடியாததாக உள்ளது.
இதில் ராமபிரானுக்காக இன்னுயிர் நீத்த ஜடாயுவின் செயலை பக்தி மார்க்கத்தில் "ஆத்ம நிவேதனம்' என்ற வகையைச் சார்ந்தது என்று ஆன்றோர்கள் உரைப்பர். ராவணனுடன் போர்புரிந்து சீதாப்பிராட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் ஜடாயு தன் இறக்கைகளை இழந்து உயிர் துறக்க நேரிட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், சம்பாதி எவ்வாறு உதவிபுரிந்து, நற்கதியடைந்தான் என்பதைப் பார்ப்போம்:
ராமபிரான் வனவாசத்தில் கிஷ்கிந்தையில் சுக்ரீவனை நண்பனாக ஏற்று அவன் மூலம் சீதையைத் தேட முயன்றார். அப்போது சுக்ரீவனின் ஆணைப்படி தென்திசை நோக்கி அங்கதன், ஜாம்பவான், ஹனுமான் மற்றும் வானரக் கூட்டங்கள் சென்றபோது பல இடங்களில் தேடியும் சீதாப்பிராட்டி கிடைக்கவில்லையே என்று மஹேந்திர மலையடிவாரத்தில் தங்கி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும்போது அம்மலையின் குகையில் வயதானகழுகு ஒன்றினைச் சந்தித்தனர்.
அதுதான் சம்பாதி. வானரர்கள் மூலம் ஜடாயுவின் இறப்பைப்பற்றி அறிந்த சம்பாதி மிகவும் வருத்தப்பட்டு தனது அண்ணனுக்குச் செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளைச் செய்தான். பிறகு அங்கதனிடம் ராமபிரானைப் பற்றிய தகவல்களையும், சீதாப்பிராட்டியைத் தேடி வானர வீரர்கள் வந்ததையும் தெரிந்து கொண்டான். அங்கதனிடம் தானும் தன்னுடைய சகோதரனும் சூரியனை நோக்கி தங்கள் பலத்தை பரீட்சை செய்யச் சென்றபோது கதிரவனின் வெப்பம் தாங்காமல் ஜடாயுவைக் காப்பாற்றிய நேரத்தில் தன்னுடைய இறக்கைகள் எரிக்கப்பட்டு தான் விந்திய மலையில் விழுந்தது பற்றிக் கூறினான் சம்பாதி.
அங்கதன் அத்தருணத்தில் சீதாதேவியை யார் அபகரித்தார்கள் என்பது தெரியுமா? எனக் கேட்டதற்கு "ராமா' என்று கத்திக்கொண்டு செல்லும் இளம்பெண்ணை ராவணன் எடுத்துச் சென்றதைப் பார்த்ததாகவும், அவள் சீதையாகத்தான் இருக்க வேண்டும் என்று சம்பாதி கூறினான். அவன் மேலும் கூறுகையில் தன்னுடைய கூரிய பார்வையால் 800 மைல் தூரத்தில் இருக்கும் இலங்கையையும், சீதையின் இருப்பிடத்தையும் காண முடிகிறது என்றும், நிச்சயமாக சீதையைக் கண்டு மீண்டும் திரும்பி வருவீர்கள் என்றான்.
வானரர்களுக்கு உதவியதால் நிசாசரர் என்ற துறவி சொன்ன வாக்கின்படி சம்பாதி தன் இறகுகளைப் பெற்று பொலிவுற்றான். இவ்வாறு சம்பாதி ""கண்டேன் சீதையை'' என்ற சொல்லை ஹனுமான் தன் திருவாக்கினால் ராமபிரானுக்குச் சொல்வதற்கு ஏதுவாக தன் தூரப்பார்வையில் சீதாப்பிராட்டியின் இருப்பிடத்தைக் கண்டுகொண்டு ஹனுமனுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தான். இந்த ராம கைங்கர்யத்திற்காக நற்கதியடைந்தான்.

No comments:

Post a Comment