Friday, April 4, 2014

நண்பர், பகைவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ?

பூனை..எலி கதை
** தருமர் பீஷ்மரை நோக்கி “ நண்பர், பகைவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ? “ என கேட்க, “ ஆபத்துக் காலத்தில் நண்பர் பகைவர் இவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என சொல்கிறேன் கேள் “ என்றார் பிதாமகர்.
பகைவனாய் இருப்பவன் சில சமயம் நண்பன் ஆவான். அதுபோல நண்பனும் சில சமயங்களில் பகைவன் ஆகலாம். மக்களிடம் பகை, நட்பு ஆகியவை ஒரே மாதிரி இருப்பதில்லை. இடத்திற்கேற்ப, காலத்திற்கு ஏற்ப செய்ய வேண்டியவை, செய்ய வேண்டாதவை ஆகியவற்றை புரிந்து கொண்டு நம்பவும் வேண்டும், நம்பாது இருக்கவும் வேண்டும். நம் நலனில் அக்கறை கொண்டவரிடம் எப்போதும் நட்புடன் மனம் மாறாமல் இருக்க வேண்டும். உயிரை பாதுகாத்து கொள்ளப் பகைவரிடம் சமாதானம் செய்து கொள்ளவும் வேண்டும். எந்த சமயத்திலும் சமாதானத்தை விரும்பாதவன் அறிவாளி அல்லன். மேலும் அவன் எந்த நன்மையும் பெற மாட்டான். காரியத்தின் பயனை புரிந்து கொண்டு பகைவனிடம் நட்பாகலாம். நண்பனிடம் பகை கொள்ளலாம். இது தொடர்பாக ஒரு ஆலமரத்தில் பூனைக்கும், எலிக்கும் நடந்த உரையாடலைக் காண்போம்..... என்று கூறி பூனை எலியின் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு காட்டில் ஒரு ஆலமரம் இருந்தது. அதில் பலவிதமான பறவைகள் வசித்து வந்தன. அந்த மரத்தடியில் நூறு துவாரங்கள் உள்ள வளையில் “பலிதம்” என்னும் புத்திசாலி எலி ஒன்று வசித்து வந்தது. அந்த ஆலமரத்தில் இருக்கும் பறவைகளை தின்று வாழும் ஒரு பூனையும் அங்கிருந்தது. அதன் பெயர் “லோமசம்”.
அந்த காட்டில் இருந்த வேடன் ஒருவன் நாள்தோறும் மரத்தடியில் பொறி வைத்து பறவைகளை பிடித்து தின்று வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த பொறி நரம்புகளால் ஆன சுருக்குக் கயிறுகளை கொண்டது. ஒருநாள் அந்த பூனை அந்த பொறியில் மாட்டி கொண்டு தவித்தது. அதை கண்ட எலி பயமின்றி இங்கும் அங்கும் ஆனந்தமாக ஓட தொடங்கியது. ஒரு மாமிச துண்டு பூனை சிக்கியிருந்த பொறியின் மீது இருந்ததை எலி பார்த்தது, அதை எடுத்து தின்று கொண்டிருந்த போது “அரினா” என்னும் கீரி ஒன்று தன்னை நோக்கி ஓடி வருவதை கண்டது. அதே சமயம் ஆலமரத்தின் மீது “சந்திராகா” என்னும் கோட்டானையும் பார்த்து பயப்பட தொடங்கியது.
என்ன செய்யலாம் என சிந்தித்த எலிக்கு ஒரு யோசனை தோன்றியது. “ அறிவுள்ளவன் ஆபத்தை கண்டு அஞ்சமாட்டான் “ அதிலிருந்து தப்ப வழியை பார்ப்பான். எனவே பகைவனானாலும் பூனையின் உதவியை நாடி தப்பிக்கலாம், பூனையும் ஆபத்தில் சிக்கியுள்ளது, அதனால் அதுவும் சமாதானத்திற்கு சம்மதிக்கும். ஆகவே அதனுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டு உயிரை காக்கலாம் என எண்ணியது. மேலும், ஆபத்து காலத்தில் உதவி செய்பவனே நண்பன். உதவி செய்யாதவன் பகைவன். சில சமயம் நண்பன் நழுவி விடுவான்.ஆனால் ஆபத்தில் உதவி செய்தால் பகைவன் உதவி செய்வான். பகைவனாயிருந்தாலும், பூனை என்னால் விடுவிக்கப்படுமானால் எனக்கு உதவி செய்யக்கூடும். எனவே ஒரு யுக்தியுடன் பூனையிடம் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் “ என முடிவெடுத்தது. பூனையுடன் சமாதான பேச்சை ஆரம்பித்தது.
“ பூனையாரே...!!! நட்பு முறையில் ஒன்று சொல்கிறேன். நீங்கள் தப்பிக்க வேண்டும் என்பது என் எண்ணம். இதனால் எனக்கும் நன்மை உண்டாகும். பயம் வேண்டாம். இப்பேராபத்தை போக்கி விடுகிறேன். என் கூரிய பற்களால் இப்பொறியை துண்டுதுண்டாக கடித்து உங்களை வெளியே செல்ல செய்கிறேன். நீர் இம்மரத்தின் மேல் வெகுநாட்களாக வாழ்கிறீர், நான் மரத்தடியில் பல நாட்களாக வாழ்ந்து வருகிறேன். இதனால் நாம் நண்பர்கள் ஆவோம். இப்போது கீழே உள்ள கீரி என்னை இன்னும் பார்க்கவில்லை. பார்த்தால் என் கதி அவ்வளவுதான். எனக்கு பயமாக இருக்கிறது. நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொண்டு இன்பமாய் வாழலாம் என்றது.
பகையான எலியின் வார்த்தைகளில் மகிழ்ந்த பூனை எலிக்கு நன்றி கூறியது. ஆனால் பூனையும் வஞ்சனையுடையது. எனவே சாமர்த்தியமாக பேசியது. “ எலியே. உன் பேச்சு அழகாய் உள்ளது. நீ கூறியபடி என்னை சீக்கிரம் விடுதலை செய். என்னை போல நீயும் பெரிதும் துன்புறுகிறாய். இது எனக்கு வருத்தத்தை தருகிறது. நம் காரியம் நிறைவேற ஒரு உடன் பாட்டிற்கு வருவோம். நான் இதிலிருந்து விடுபட்டால் உனக்கு உதவுவேன் “ என்றது. உடன் எலி “ பூனையாரே..! இனி என் பயம் தொலைந்தது. ஆனால் தாங்கள் வலையிலிருந்து விடுபட்டதும் என்னை கொன்றுவிடக் கூடாது. தவிர்த்து கோட்டான், கீரி ஆகியவற்றிடமிருந்தும் என்னைக் காக்க வேண்டும்" என்று கேட்டது. பூனை “ என் உயிர் நண்பனே, உன்னால்தான் நான் பிழைக்க போகிறேன். இன்னும் என்னால் ஏதேனும் ஆக வேண்டுமாயின் ஆணையிடு. செய்கிறேன். இனி நான் உன் நண்பன் அல்லவா? “ என்றது. பூனையின் ஆறுதலை கேட்ட எலி, நட்புமுறையில் பூனையுடன் பழக ஆரம்பித்தது. அதன் மார்பின் மீது தவழ்ந்து விளையாட தொடங்கியது. இது கண்டு கோட்டானும், கீரியும் தம் எண்ணம் ஈடேறாததால் வேறிடம் சென்றன.
இடம், காலம் தெரிந்த எலி கயிற்றை மெதுவாக கடிக்க துவங்கியது. பூனையோ “ ஏன் வளையை தாமதமாக அறுக்கிறாய்? சீக்கிரம் அறுத்து விடு “ என்றது. உடன் எலியோ “ எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும் என நான் அறிவேன். இப்போது உம்மை விடுவித்தால், என்னை கொன்றிடுவீர். தக்க சமயத்தில், வலை விரித்தவன் வரும்போது வலையை அறுப்பேன். அப்போது உடனே நீங்கள் மரத்திற்குத் தாவி போய் விடலாம், நானும் வளைக்குள் போய் விடுவேன். அப்படிப்பட்ட அவசர நிலையில் தான் நானும் தப்பிக்க முடியும். இல்லையேல் உமக்கு பலியாகி விடுவேன். “ என்றது.
இதை கேட்டு அந்த பூனை வருத்தம் அடைந்தது. தாமதம் செய்த எலியை பார்த்து “ உயர்ந்தோர், நண்பர்களுக்கு உதவி செய்வதில் இவ்வளவு தாமதிக்க மாட்டார்கள். நான் எவ்வளவு விரைவாக உன் துன்பத்தை போக்கினேன். நீ மட்டும் ஏன் தயங்குகிறாய்? பழைய பகையை மனதில் கொண்டு நடக்கிராய். இது நல்லதல்ல. மேலும் நீ தாமதப் படுத்தினால் என் உயிர் பிரிந்துவிடும் “ என்றது. புத்திசாலியான எலி, வஞ்சக எண்ணம் கொண்ட பூனையை நோக்கி, “ நண்பரே! சுயநலம் மிக்க உமது எண்ணத்தை அறிந்து கொண்டேன். பாம்பின் வாயிலிருந்து தப்பிப்பது போல பகைவனிடமிருந்து தப்பிக்க வேண்டும் என்பர் பெரியோர். உலகில் இயற்கையாகவே நண்பர்களோ, பகைவர்களோ தோன்றுவதில்லை. ஒருவன் உதவி செய்யும் போது நண்பன் ஆகிரான். அவனே தீமை செய்யும் போது பகைவனாக கருதப்படுகிறான். சமயத்திற்கேற்ப பகையும், நட்பும் மாறும். காரியம் முடிந்த பின் யாரும் யாரையும் கவனிப்பதில்லை. ஆதலால் எந்த செயல் ஆனாலும் அதில் கொஞ்சம் மிச்சம் வைத்திருக்க வேண்டும். உமக்கு வலையை விரித்தவன் வந்ததும் பயந்து என்னை தின்னும் எண்ணத்தை கைவிட்டு ஓடி விடுவீர். நானும் தப்பித்து பிழைத்து விடுவேன். அதிகம் இல்லை அறுபட வேண்டியது ஒரு கயிறு தான். சற்றுப் பொறுமையுடன் இருங்கள். அதையும் அறுத்து விடுகிறேன் “ என உரைத்தது
அந்த நேரத்தில் சில நாய்களுடன் வந்தான் பொறியை வைத்தவன். பூனை அவனை கண்டு பயந்து “ இப்போது என் நிலையை பார்த்து, என்னை விடுவிப்பாயாக “ என கெஞ்ச, எலியும் தாமதமின்றி கயிற்றை துண்டித்தது. உடன் பூனை விரைவாய் ஓடி மரமேறியது. வேடனை கண்டு கோட்டானும், கீரியும் கூட ஓடி மறைந்தன. எலியும், தன் பணி முடிந்து வளையில் ஒளிந்து கொண்டது. பொறியை வைத்தவன் ஏமாற்றத்துடன் திரும்பினான். பின் பூனை எலியை நோக்கி “ ஆபத்தில் உதவி செய்தவரே..நானும் எனது உறவினர்களும் உன்னை கௌரவிக்க விரும்புகிறோம். என்னிடம் உனக்கு பயம் வேண்டாம். பயப்படாமல் வா “ என்றது.
பூனையின் நோக்கத்தை புரிந்து கொண்ட எலி “ உமது பாசமொழிகள் கேட்டு மகிழ்ச்சி. ஆனாலும் ஒன்று சொல்கிறேன். நண்பர், பகைவர் பற்றி ஆறாய்ந்து அறிந்து கொள்ள வேண்டும் என்பர் சான்றோர். நண்பர் பகைவர் போலவும், பகைவர் நண்பர் போலவும் தோற்றம் அளிக்கலாம். இந்த பகையும், நட்பும் நிலையானது அல்ல. ஏதோ ஒரு நோக்கத்தை கொண்டுதான் நட்பும், பகையும் அமைகின்றன. செயலின் நுட்பத்தை அறியாமல் நண்பர்களிடம் அளவு கடந்த நம்பிக்கை கொள்வதும், பகைவரிடம் அளவு கடந்த அவநம்பிக்கை கொள்வதும் ஆபத்தில் முடியும். என்னிடம் தாங்கள் பேசும் ஆசை வார்த்தைகளுக்கு காரணம் உண்டு. மனிதன், ஏதோ ஒரு காரணம் கொண்டே நட்புடன் திகழ்கிறான். ஒரு காரணத்தால் பகைவன் ஆகிறான். ஒரு தாய் வயிற்றில் பிறந்தோர் கூட சுயநலம் காரணமாக அன்பு செய்வர். உலகில் காரணம் இன்றி அன்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் உடன் பிறந்த சகோதரரும், மனைவியும் ஏதோ ஒரு காரணத்தால் அன்பு கொண்டாலும் நாளாவட்டத்தில், நிலையான தூய அன்பு உடையவர்களாக ஆவர். உலகில் ஏதோ காரணத்தால் தான் அன்பு ஏற்படுகிறது. அந்த காரணம் மறந்ததும் அன்பும் மறைகிறது. என்னை சாப்பிட வேண்டும் என்னும் காரணத்தால் தான் உமக்கு என் மீது அன்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே உமது பேச்சில் எனக்கு நம்பிக்கை இல்லை. இச்சமயத்தில் உம்மிடம் நட்பு கொள்வது அறிவுடைமையாகத் தோன்றவில்லை. இயற்கையாகவே தாங்கள் எங்கள் குலத்திற்கு விரோதி ஆவீர். ஏதோ ஒரு முறை ஏற்பட்ட நட்பை மறந்து விடுக. பகையை மேற்கொள்க. “
மேலும் எலி தொடர்ந்தது “ நண்பரே! உபசார வார்த்தைகளால் பயனில்லை. நெடுந்தொலைவில் இருந்தாலும் உம்மை கண்டு நான் அஞ்சுகிறேன். சுயநலமின்றி எந்த காரியமும் இல்லை. புத்தியுள்ளவன் எல்லாப்பொருள்களை இழந்தேனும் தன் உயிரை காப்பாற்றி கொள்வான். என்னதான் பகைவன் அன்பு உள்ளத்தோடு பழகினாலும் அவனை சந்தேக கண் கொண்டே காண வேண்டும்.” என்றது. பூனை எவ்வளவோ பேசியது. ஆனாலும் எலி ஏமாறவில்லை. பூனையை நோக்கி கூறியது “ நம்பத்தகாதவனை நம்ப கூடாது. நம்பத்தகுந்தவனையும் அதிகம் நம்பக்கூடாது. அதே நேரத்தில் தன் மீது நம்பிக்கை உண்டாகும் படி செய்ய வேண்டும். பூனையாரே! உம் போன்ற பகைவரிடமிருந்து எப்போதும் நான் என்னை காப்பாற்றி கொள்ள வேண்டும். நீங்களும் உங்களை பிடிக்க பொறி வைப்பவரிடமிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். “ இவ்வாறு பலம் இல்லாததாயினும் அறிவுள்ள ஒரு எலி மிக்க பலமுள்ள பகைவர்களை சாமர்த்தியமாக வென்றது.
எனவே தருமா...!!!! பலமுள்ள பகைவனாயினும் அவனுடன் சில சமயம் சமாதானம் செய்துக் கொண்டு வெற்றி காண வேண்டும். ஒன்றொடொன்று பகையுள்ள எலியும், பூனையும் சங்கடமான நேரத்தில் நட்பு கொண்டன. அதே நேரத்தில் அவை குரோதத்துடன் இருந்தன. அவற்றில் அறிவில் சிறந்தது வென்றது. அதுபோலவே அறிவு மிக்கவனும் விழிப்புடன் இல்லையெனில், அறிவு குறைந்தவனால் வெல்லப்படுவான். பயம் அற்றவன் போல தோற்றமளிக்க வேண்டும். ஆனால் பயம் உள்ளவனாக அஞ்சி நடக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவன் போல இருக்க வேண்டும். ஆனால் நம்பிக்கை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். அதாவது எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். இல்லையேல் ஆபத்து நேரிடும் “ என்று தன் அறியுரையை முடித்தார் பீஷ்மர்..
தாய், தந்தை, குரு சிறப்பு
=======================
** தருமர், பீஷ்மரிடம் “ தருமத்தில் பல இருக்கின்றனவே? எதை, எப்படி கடைபிடிப்பது? இம்மையிலும், மறுமையிலும் எப்படிப்பட்ட தர்ம பயனை அடைவேன்? “ என வினவினார்.
பீஷ்மர் சொன்னார் “ தருமா.....!! தாய், தந்தை, குருவை வழிபடுவது மிகவும் முக்கியமாகும். நன்கு வணங்கப்படும் இவர்கள் இடும் கட்டளை எப்படியிருந்தாலும் நிறைவேற்ற வேண்டும். தருமம் இல்லாத ஒன்றை அவர்கள் கட்டளையிட்டாலும் செய்ய வேண்டும். தந்தையை வழிபட்டால் இவ்வுலகையும், தாயை வழிபட்டால் மேல் உலகையும், குருவை வழிபட்டால் பிரம்ம லோகத்தையும் வென்றுவிடுவாய். எனவே தருமா அவர்களை வழிபடு. மூன்று உலகிலும் புகழ் அடவாய். எப்போதும் அம்மூவருக்கும் சேவை செய்வதே புண்ணியமாகும். அம்மூவரை போற்றாதாரை உலகம் போற்றாது. நான் எல்லா நற்காரியங்களையும் அவர்களுக்கே அர்ப்பணித்தேன். அதனால் தான் எனது புண்ணியம் நூறு மடங்காய் உயர்ந்தது.
நல்ல ஆசாரியர், வேதம் பயின்ற பத்து அந்தணர்களைவிட உயர்ந்தவர். உபாத்தியாயர் பத்து ஆசாரியரை விட உயர்ந்தவர். தந்தையோ பத்து உபாத்தியாயரை விட உயர்ந்தவர். தாயோ தந்தையை விட பல மடங்கு உயர்ந்தவள் ஆவாள். ஆகவே தாய்க்கு நிகராக யாரையும் கூற முடியாது.
எனவே உபாத்தியாயரையும், ஆசாரியரையும், தாய் தந்தையரையும் மனத்தாலும் மாறுபட நினைக்கக்கூடாது. அவர்களை சொல்லால் நிந்திக்க கூடாது. நிந்தித்தால் பாவம் பெருகும். துன்பம் கூடும் “ என்றார் பீஷ்மர்.

No comments:

Post a Comment