Sunday, April 6, 2014

ஞானம், தவம், தானம்.

ஞானம், தவம், தானம்.
=====================
** தருமர் பீஷ்மரிடம் “ ஞானம், தவம், தானம், இவற்றுள் சிறந்தது எது? என வினவ பீஷ்மர் கூறுகிறார்.
“ முன்னொரு காலத்தில் வியாசருக்கும், மைத்ரேயருக்கும் நடைபெற்ற ஒரு உரையாடலை கூறுகிறேன். ஒரு முறை வியாசர் யாருக்கும் தெரியாமல் மைத்ரேயரை சந்தித்தார். மாறுவேடத்துடன் வந்த வியாசருக்கு அறுசுவை உணவளித்தார் மைத்ரேயர். உணவு உண்டு எழுந்திருக்கும் போது வியாசர் நகைத்தார். அது கண்ட மைத்ரேயர் வியாசரை நோக்கி “ தாங்கள் நகைத்தற்குரிய காரணத்தை நான் தெரிந்து கொள்ளலாமா? உம்மிடம் தவச்செல்வம் இருக்கிறது. என்னிடம் பொருட்செல்வம் இருக்கிறது. இவற்றின் தன்மைகளை விளக்கவேண்டும் " என்றார்.
வியாசர் சொன்னார் “ தவச்செல்வத்திற்கும் பொருட்செல்வத்திற்கும் சிறிது வேறுபாடு உண்டு. தவச் செல்வம் எல்லா நன்மைகளையும் தருவதனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததாகும். நீ மிகுதியான பொருளை செலவழித்தாலும் அதிகமாக இன்சொல் கூறியதாலும் எனக்கு நகையுண்டாயிற்று. வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? பிறருக்குத் தீங்கு இழைக்க கூடாது. கொடுக்க வேண்டும். உண்மையே பேச வேண்டும் என்ற மூன்றையும் வேதம் வற்புறுத்திக் கூறுகிறது. தாகத்துடன் இருப்பவனுக்கு தன்ணீர் தருவது பெரும் கொடையாகும். தேவர்களை நீர் வழிபட்டதனால் என் தரிசனம் உமக்கு கிடைத்தது.
உமது தூய தானத்தினாலும், தவத்தினாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். உம்மிடம் இருந்து நல்ல மணம் தூரத்திலும் வீசுகிறது. இது உமது கர்ம பலன் என்றே கருதுகிறேன். சந்தன மணம் போன்றதுதான் நல்ல செயல்களால் வீசும் மணமும். தானம் தான் எல்லா புண்ணியங்களையும் விட மேலான புண்ணியம். மற்ற புண்ணியங்கள் இல்லாவிடினும் தானமே மிகச் சிறந்ததாகும். இதில் ஐயம் இல்லை. தானம் செய்பவர்கள் உயிரையும் தரத்தயாராய் இருப்பர். அவர்களிடத்தில் தான் தருமம் நிலை பெற்றிருக்கிறது.
ஆகமங்களைப் பயில்வதும், துறவு மேற்கொள்வதும், ஐம்பொறிகளை அடக்கி தவம் செய்வதும் ஆகிய அனைத்தையும் விடத் தானம் மிக உயர்ந்ததாகும்" என்றார் பீஷ்மர்.
தவத்தின் மேன்மை.
===================
** இந்த உலகமே தவத்தால் இயங்குகிறது. தவத்தை மேற்கொள்ளாதவனுக்கு ஒரு காரியமும் நடைபெறாது. தவத்தால்தான் பிரமதேவன் இவ்வுலகை படைத்தான். மாமுனிகள் ஞானத்தை பெற்றதும் தவத்தால் தான். மன அடக்கம் உள்ள சித்தர்கள் தவத்தினால் மூவுலகையும் அறிகிறார்கள். பெறுதற்கு அரியதும் தவத்தால் கூடும். பாவங்களிலிருந்து விடுபட உதவுவதும் தவம் தான்.
தவம் பல வகை. எனினும் உபவாசத்தை விட உயர்ந்த தவம் இல்லை. கொல்லாமை, வாய்மை, தானம், புலனடக்கம் ஆகிய இவற்றைவிட மேலானது உண்ணாவிரதம். தாய்க்கு செய்யும் பணிவிடையை காட்டிலும் மேலான தவம் இல்லை. முற்றும் துறந்த துறவிகூட தாயை பாதுகாக்க வேண்டும் என்பது விதி என்றார் பீஷ்மர்.
கோபம் எதனால் தோன்றுகிறது.
=============================
** கோபம் முதலானவை எதனால் தோன்றுகின்றன? எப்படி அழிகின்றன? என்ற வினாவிற்கு பீஷ்மர் தந்த பதில்
கோபம், மோகம், காமம், சோகம், பிறருக்கு தீங்கு செய்ய எண்ணும் எண்ணம் ஆகியவை உயிர்களுக்கு பலமான வைரியாகும். இவை மனிதர்களை செந்நாய்கள் போல சூழ்ந்து அழிக்கும். துன்பத்திற்கு இவைதாம் காரணம் என உணர்தல் வேண்டும். இவை பற்றி விரிவாகக் கூறுகிறேன் கேட்பாயாக.. கோபம் பேராசையில் இருந்து தோன்றுகிறது. பொறுமையால் அது அழியும். புலனடக்கம் இன்மையால் காமம் உண்டாகிறது. மனிதன் அறிவு பெற்று வெறுப்பு கொள்வானாயின் அப்போது காமம் அழியும். மோகம் அறியாமையால் உண்டாகிறது. அறிஞர்களின் அறிவுரைகளை ஏற்று நடப்பதன் மூலம் அது அழியும். பொருள் மீது கொண்ட ஆசை விலகுமாயின் அப்பொருளை இழத்தலால் ஏற்படும் சோகம் விலகும். பிறருக்கு தீங்கு செய்யும் எண்ணம் கோபத்தாலும், பேராசையாலும் உண்டாகும். அவற்றுள் கோபத்தால் உண்டாவது உயிர்களிடத்து தோன்றும் அன்பால், அருளால் அழியும். பேராசையால் தோன்றுவது அறிஞரின் தத்துவ உபதேசத்தால் அழியும்” என்று தருமருக்கு எடுத்துரைத்தார் பீஷ்மர்.
பகைவரிடம் விழிப்பாய் இருக்க வேண்டும்.
** தருமர் பீஷ்மரிடம் "பிதாமகரே! யாரிடமும் நம்பிக்கை வைக்க கூடாது என கூறினீர்..அப்படி இருப்பது எப்படி சாத்தியமாகும்?” என வினவ பீஷ்மர் விளக்கினார்.
“ ஒரு காலத்தில் பிரம்மதத்தன் என்னும் அரசன் ஆட்சி செய்து வந்தான். அவனது அரண்மனையில் பூஜனி என்னும் குருவி நெடுங்காலமாக இருந்து வந்தது. அது பறவையாக இருந்த போதும் வேடனின் பண்புகளுடன் இருந்து வந்தது. எதேனும் பறவை, எங்கேனும் ஒலி எழுப்பினால், உடனே அது எந்த பறவை என்று சொல்லும் அறிவு மிக்கது அது. அந்த குருவி, அந்த இடத்திலேயே ஒரு அழகான குஞ்சை பெற்றெடுத்தது. அதே சமயம் அரசிக்கும் ஒரு ஆண் குழ்ந்தை பிறந்தது. பூஜனி என்னும் அக்குருவி இரு குழந்தைகளுக்கும் நெடுந்தூரம் சென்று வலிமை தரும் பழங்களை கொண்டு வந்து தரும். அப்பழங்களை உண்டு வளர்ந்த அரசகுமரன் வலிமையுடன் திகழ்ந்தான்.
ஒருநாள் அந்தக குழந்தை, யாரும் இல்லாத போது குருவி குஞ்சை கொன்று விட்டது. பூஜனி குருவி வழக்கம் போல பழங்கலை கொண்டு வந்தது. தன் குஞ்சு கொல்லப்பட்டு தரையில் கிடந்ததை கண்டு கதறி துடித்தது. “ தகாதவரிடத்து நட்புக் கூடாது. அவர்களிடம் அன்பு கிடையாது. நல்ல எண்ணமும் கிடையாது. காரியம் முடிந்ததும் அவர்களை கைவிட்டு விடுவர். நன்றி கொன்ற இந்த அரசகுமாரனுக்கு சரியான பாடம் புகட்டுவேன். பழி வாங்குவேன்” என்று சபதம் எடுத்துக்கொண்டது. உடனே அரச குமாரனின் கண்களை கூரிய நகங்களால் பறித்து எடுத்துக்கொண்டு விண்ணில் பறந்தது. “இவ்வுலகில் செய்கின்ற பாவம் உடனே செய்தவனை சாரும். செய்யப்பட்ட பாவத்தின் பயன் செய்தவனிடத்தில் சிறிதும் காணப்படாமல் போனாலும், அவனது சந்ததியை சார்ந்து துன்பத்தை தரும்” என்று சொல்லியது பூஜனி.
தன் மைந்தனின் கண் பார்வை குருவியால் பறிக்கப்பட்டதை உணர்ந்த அரசன், “மைந்தனின் செயலுக்கு தண்டனை கிடைத்து விட்டதாகக் கருதி, பூஜனியை நோக்கி “பூஜனி என் மகன் செய்த தீங்குக்கு நீ தக்க தண்டனை வழங்கி விட்டாய். இரண்டும் சமமாகி விட்டன. நடந்ததை மறந்து இங்கேயே தங்கி விடு” என்றான். அது கேட்ட குருவி “ஒருமுறை தவறு நேர்ந்த பிறகு அங்கு தங்கி இருப்பதை சான்றோர் ஏற்பதில்லை. எனவே நான் இந்த இடத்தை விட்டுச் செல்வதே பொருத்தமாகும். வெளிப்படையாக விரோதம் ஏற்பட்ட இடத்தில் நன்மொழிகள் கூறி பயனில்லை. இனி நம்பிக்கை ஏற்படாது. பசப்பு வார்த்தைகளால் ஒரு பயனும் இல்லை. நட்பை கெடுப்பவரிடம் நம்பிக்கை கொள்ளாது இருப்பதே இன்பமாகும். உறவினருள் தாயும், தந்தையும் உயர்ந்தவர் ஆவர். மகன் விதையை போன்றவன். நம் கையில் பணம் உள்ளவரைதான் நண்பர்கள் நம்மை நாடுவர். ஆதலால் நமது இன்ப துன்பங்களை அனுபவிப்பது ஆத்மா ஒன்றே! ஒருவருக்கொருவர் பகை கொண்டபின், அறத்தில் நாட்டமுடைய நெஞ்சம் வைராக்கியம் அடைந்தபின் சமாதானம் என்ற எண்ணமே வர கூடாது. மறுபடியும் மரியாதை கிடைத்தாலும் அந்த இடத்திற்கு போகக் கூடாது” என்று உரைத்தது.
“குருவியே! ஒருவன் செய்த தீவினைக்கு பிராயச்சித்தம் செய்வானாகில் அந்த குற்றம் அதோடு போயிற்று! எனவே இங்கு தங்கி இரு” என்று கேட்டுக்கொண்டான் அரசன். அது கேட்ட குருவி மன்னனை பார்த்து “ஒருமுறை தீங்கு நேர்ந்து, மனம் மாறிய பின் மீண்டும் ஒன்று பட வாய்ப்பில்லை. இருவர் உள்ளத்திலும் தாம் செய்த தீங்கு உறுத்திக்கொண்டே இருக்கும்” என்று கூறிற்று. பிரம்மதத்தன், ”பூஜனி, பழி வாங்கிய பிறகு பகை மாறும். சாந்தி ஏற்படும். குற்றம் செய்தவனும் அவன் பாவத்தை அனுபவிக்க நேராது. ஆதலால் இருவருக்கும் நட்பு உண்டாகலாம்” என்றான்.
குருவி “இப்படி சாந்தி ஏற்படாது. எதிரி தன்னை சமாதானப்படுத்தி விட்டான் என்று கருதி அவனை நம்பவே கூடாது. ஆகவே இனி இங்கு நான் என் முகத்தை காட்டக் கூட விரும்பவில்லை” என்று கூறிற்று. “ஓ பூஜனியே, நாயை கொன்று தின்று வாழும் கீழோன் நாயையே வளர்த்து வருகிறான். அவனிடம் நாளடைவில் நாய் நட்பாகி விடுகிறது. அதுபோலவே வைராக்கியத்துடன் இருக்கும் இருவர் இணைந்து வாழ்வாரானால் வைராக்கியம் மாறி நாளடைவில் நட்பு நிலைத்து விடும்” என்று கூறினான் பிரம்மதத்தன். இதுகேட்ட பூஜனி "ஓ..மன்னனே..வைராக்கியம் ஐந்து காரணங்களால் ஏற்படும். ஒன்று-பெண்டிர் காரணமாகத் தோன்றும். இரண்டு-நிலம், தோட்டம், வீடு முதலான பொருள்களுக்காக ஏற்படும். மூன்று-வாய்ப்பேச்சு காரணமாக எழும், நான்கு-பிறவியிலேயே தோன்றுவது. ஐந்து-எப்போதோ நேர்ந்த குற்றத்திற்காக உண்டாகும். இவற்றில் எவ்விதத்தில் வைராக்கியம் ஏற்பட்டாலும், தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் அவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது. வைராக்கியம் என்னும் தீயை நன்மொழிகளாலோ, சாத்திரத்தாலோ போக்க முடியாது. அத்தீயை யாராலும் அணைக்க முடியாது. ஆகவே இனி உன்னை நம்ப மாட்டேன்" என்றது
அதை கேட்ட பிரம்மதத்தன் பூஜனியை நோக்கி “குருவியே! எல்லாம் காலத்தின் செயல்கள் தான். நீயோ, நானோ எதற்கும் காரணமாவதில்லை. மனிதன் காலத்தால் பிறக்கிறான். காலம் முடிந்ததும் இறக்கிறான். இதுபோல தான் எல்லாம் காலாகாலத்தில் நிகழ்கின்றன. தீயானது விறகை எரிப்பது போல காலம் எல்லாவற்றையும் எரிக்கிறது. தோற்றுவிக்கிறது / மறைக்கச்செய்கிறது / மறக்கச்செய்கிறது. எனவே ஒருவருக்கு ஏற்படும் நன்மை தீமைகளுக்கு வேறு யாரும் காரணமில்லை. காலம்தான் காரணம். இதை புரிந்து கொண்டு நட்போடு இரு. நீ செய்ததை நான் பொறுத்தது போல், என் மகன் செய்ததை நீயும் பொறுத்துக்கொள்” என்றான்.
ஆனால், பூஜனி விடவில்லை. “எல்லாம் காலம்தான் என்றால், எல்லாரும் ஏன் இப்படி தவிக்கிறார்கள்? அனைத்திற்கும் காலமே காரணம் என்பது உண்மையானால் நோய் உற்றவர் ஏன் மருத்துவரை நாட வேண்டும்? காலத்தின் விளைவு என்றால் உற்றார், உறவினர் இழப்புக்கு ஏன் அழ வேண்டும்? காலமே காரணமானால் புண்ணியம் சம்பாதிக்க யாருக்கு தான் மனம் வரும்? என் குழந்தையைக் கொன்ற உன் மகனை நான் துன்புறுத்தினேன். இதற்காக என்னை நீ துன்புறுத்துவாய். கொல்வாய். மனிதர்கள் உணவுக்காகப் பறவைகளை கொல்கின்றனர். இது தவிர வேறு நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. துக்கம் பிறப்பானாலும் இறப்பானாலும் உண்டாகிறது என வேதங்கள் கூறுகின்றன. எல்லாருக்கும் உயிரின் மீது ஆசை உண்டு. அதுபோலவே மனைவி மக்கள் சுற்றத்தார் ஆகியோரிடமும் ஆசை ஏற்படுகிறது. முதுமை ஒரு துக்கம். பொருள் இழப்பு ஒரு துக்கம். வேண்டாத இடத்தில் இருப்பது ஒரு துக்கம். இதுபோலவே வைராக்கியத்தால் ஏற்படும் துக்கமும், பெண்களால் ஏற்படும் துக்கமும் உண்டு. இறந்த மகனால் உண்டாகும் துக்கத்தை மறக்கவே முடியாது. பிறருக்கு ஏற்படும் துக்கத்தை கண்டு நாமும் துக்கப்படுகிறோம். மன்னா.!! .நீ எனக்கு இழைத்த கொடுமையும் நான் உனக்கு செய்த துன்பமும் நெடுநாள் ஆன பிறகும் அழியா. வைராக்கியம் ஏற்பட்டபின் நெருங்கி வாழ நினைப்பது உடைந்த மட்கலம் ஒன்றாவது போல ஆகும். பகைவர் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்வோர் புற்களால் மூடப்பட்ட குழியில் வீழ்ந்து துன்புறுவது போல் துன்புறுவர். ஒருவனுக்கும் கெடுதி செய்யாது இருக்க வேண்டும். கெடுதி செய்த பின் நம்பிக்கை கொள்ளக்கூடாது. நம்பினால் அழிவி நிச்சயம்” என்றது பூஜனி.
பிரம்மதத்தன் “நம்பிக்கையின்றி உலகில் ஒன்றும் சாதிக்க முடியாது. எந்த செயலையும் செய்ய இயலாது. பொருளையும் சேர்க்க முடியாது. ஒருவன் எப்போதும் ஒருவிதமான சந்தேகத்தோடும் பயத்தோடும் இருந்தால் அவனை உயிர் வாழ்பவனாகவே கருத முடியாது. அவனை செத்தவனாகவே உலகம் கருதும். எனவே என்னிடம் நம்பிக்கையோடு வந்திரு” என்றான். ஆயினும் பூஜனியின் மனம் மாறவில்லை. “மன்னா..!! புண்பட்ட காலுக்கு என்னதான் பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்துக்கொண்டு ஓடினாலும் கூட அக்காலுக்கு வலி உண்டாகும். துன்பம் உள்ள கண்ணால் காற்றை எதிர்த்து பார்த்தால் துன்பம் அதிகமாகும். ஒருவன் அறிவு கெட்டு தீய வழியில் சென்றால் அழிவு நிச்சயம். தெய்வமும், முயற்சியும் ஆகிய இரண்டில் ஒருவனுக்கு உதவுவது முயற்சியே! இயல்பாக முயற்சி இல்லாதவன் வாழ்க்கையில் தோல்வியையே சந்திப்பான். கல்வி, தூய்மை, திறமை, ஆளுமை, வைராக்கியம் ஆகிய ஐந்தும் ஒரு சேரக கருதத்தக்கன. மனிதனுடைய சொத்துகள் முயற்சியால் வருபவை. முயற்சியுடையவன் இவற்றை பெற்று இன்பத்தை அனுபவிக்கிறான். பிறரை கண்டு அவன் பயப்படமாட்டான். அறிவுடையவன் செல்வம் நாளாவட்டத்தில் பெருகும்.
சிலர் தம் மனைவி, பிள்ளைகள், உறவினர் ஆகியோரிடத்து மிகுந்த பாசம் கொண்டு துன்புறுவர். அறிவாளிகள் அதிகம் பாசம் கொள்ளாத காரணத்தால் துன்பமுறுவதில்லை. மேலும் அறிஞர்கள் தீய நெறியிலிருந்தும், அவமரியாதை உள்ள இடத்திலிருந்தும் விலகியே இருப்பர். ஆதலால் நான் வேறு இட செல்கிறேன். இங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை” என்று கூறி அப்பறவை மன்னனிடம் அனுமதி பெற்று பறந்து சென்றது. இந்த கதையின் மோளம் பீஷ்மர் பகைவரிடம்,, தற்செயலாக அல்லது விதி வசத்தால் பகைவராக மாரியவரைடமும் எவ்வாறு நடக்க வேண்டும் என்று தருமருக்கு தெளிவாக விளக்கினார்.

No comments:

Post a Comment