Friday, April 4, 2014

சித்திர புத்திர நாயனார்

சித்திர புத்திர நாயனார்
அண்ட புவனங்களெங்கும் பாவபுண்ணியம் பலன் தெரியவேண்டிப் பரமசிவன் உமையம்மையார் மூலம் திருவிளையாடல் புரிய நினைத்தார்.
சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் இணைந்த ஒருநாளில் அன்னை பார்வதிதேவி தன் கைதிறமையால் அழகான குழந்தை ஒவியத்தை வரைந்தார். அந்த ஓவியம் சாதராண ஓவியமாக இல்லாமல் நிஜ குழந்தை போல தத்ரூபமாக இருந்ததை கண்ட சிவபெருமான், பார்வதியிடம், “நீ வரைந்த இந்த ஓவியத்திற்கு உயிர் கொடுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்.” என்று கூறி கொண்டே தன் கைகளால் அந்த ஓவியத்தை எடுத்து தன்னுடைய மூச்சிகாற்றை அந்த ஒவியத்தின் மேல் பதித்தார். ஈசனின் மூச்சி காற்று காற்று சில்லென்று ஓவியத்தில் பட்டஉடன், அந்த ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர் பெற்று சிரிக்க ஆரம்பித்து ஒரு அழகான குழந்தையாக வெளிவந்தது..
இந்த அற்புதத்தை கண்ட பார்வதிதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்து, “நான் வரைந்த குழந்தை ஒவியம், ஒரு நிஜ குழந்தையாக மாறியதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் வரைந்த சித்திரம் குழந்தையாக மாறியதால் இந்த குழந்தைக்கு சித்திர குப்தன் என்றும், சித்திரபுத்திரன் என்றும் அழைக்கபடட்டும்” என்று ஆசி வழங்கினார். சித்திரகுப்தன் தோன்றிய ஒவ்வொரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி அன்று சித்ரா பவுர்ணமி விழா எடுத்து சித்திரகுப்தரை வணங்குவது சிறப்பு.
சித்திர குப்தனுக்கு பதவி: ஒருநாள் யமதர்ம ராஜன் சிவபெருமானிடம் “இறக்கும் ஜீவராசிகளை அழைத்துவரும் போது அவர்கள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நல்ல பலன்களையும், தண்டனைகளையும் தர வேண்டும் என்பது நீங்களும் விஷ்ணுபகவானும் எமக்கு கட்டளையிட்டீர்கள். ஆனால் யார் எவ்வளவு பாவ புண்ணியங்கள் செய்தார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?” என்று தன் மன கவலையை தெரிவித்தார் யமதர்மராஜன். அதற்கு சிவன் இதற்கான தீர்வை பிரம்மனிடம் சென்று கேள் என்றார். உடனே பிரம்மா! சக்திதேவியின் திருக்கரங்களால் வரையபட்ட ஒரு சித்திரம், சிவபெருமானின் அருளால் உயிர் பெற்று ஒரு ஆண் குழந்தையாக வளர்கிறது. அவன் பெயர் சித்திர குப்தன்.
சித்திர குப்தனை உன் யமலோகத்தில் முக்கிய பதவியில் அமர்த்துகிறேன். அவன் உனக்கு உறுதுணையாக இருந்து, யார் எந்த அளவுக்கு பாவ-பண்ணியங்கள் செய்கிறார்கள் என்பதை சித்திர குப்தன் கவனித்து கணக்கு எழுதுவான். அதனால் உன் மனகவலையை ஒழித்து உன் தர்மபடி பணி செய்.” என்று ஆலோசனை வழங்கினார் பிரம்மன் தேவர்.
அதன்படி சித்திர குப்தனை உடனே அழைத்து, யமதர்மராஜனிடம் அறிமுகப்படுத்தினார் பிரம்ம தேவன். பிரம்மனின் உத்தரவை ஏற்ற சித்திர குப்தன், தன்னுடைய ஒரு கையில் எழுதுபோலும், மறுகையில் எழுதுகோலுக்கு தேவையான மை நிறைந்த கிண்ணமும் ஏந்தி காட்சி தந்தார். அன்றிலிருந்து இன்றுவரை பூலோகத்தில் இருக்கும் அனைத்து ஜீவராசிகள் செய்யும் ஒவ்வொரு பாவ-புண்ணிய கணக்கை சித்திரகுப்தர் எழுதி வருகிறார்.
நமது பாவ-புண்ணியங்களை பொறுத்து, சித்திர குப்தன் எழுதும் கணக்கின் அடிபடையில்தான் ஒவ்வொரு பிறவியிலும் நாம் அனுபவிக்கும் இன்பமும் – துன்பமும் நிகழ்கிறது. அதனால் பாவம் செய்வதை கனவில் நினைக்காமல், இந்த பிறவியில் மட்டுமல்லாமல் எந்த பிறவியிலும் புண்ணியங்களை மட்டுமே செய்து, “இது புண்ணிய ஆத்மா” என்று சித்திர குப்தன், அவரின் கணக்கு புத்தகத்தில் நம்மை பற்றி குறிப்பு எழுதிவிட்டால், அடுத்த பிறவி இல்லை, அல்லது எந்த பிறவியிலும் துன்ப நிலை இல்லாமல் இறைவன் துணை இருப்பார். சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வில்வஇலைகளை அர்ச்சனை செய்தால் நம்முடைய புண்ணிய கணக்கு இரண்டு இரட்டிப்பாகும்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்திர குப்தரை ஆலயம் சென்று வணங்க முடியாதவர்கள், அவருடைய படத்தை இல்லத்தில் வைத்து, சர்க்கரை பொங்கல் படைத்து வணங்கி, அத்துடன் அவருடைய கதைளை படித்து, அன்னதானம், விசிறி, குடை, செருப்பு போன்ற உங்களால் முடிந்த தான-தர்மங்களை செய்தால் சித்திரகுப்தர் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த பாவங்களை குறைத்து, புண்ணியங்களை அதிகப்படுத்துவார். தர்மதேவதையின் அருட்பார்வையை உங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பார். தர்மதேவைதை நம்மை பார்த்தாலே நாம் செய்யும் தான-தர்மங்கள் பலமடங்கு பெருகும். நோய்நொடி இல்லாமல், எந்த பிறவியும் வளமாகும். வாழ்வே இனிதாகும்.

No comments:

Post a Comment