Saturday, April 5, 2014

சரணம் அடைந்தவரைக காப்பாற்றுவது தருமம்

சரணம் அடைந்தவரைக காப்பாற்றுவது - புறாவின் கதை
** தருமர் பீஷ்மரிடம் “ காப்பவனுக்கு எது தருமம்?' “ என வினவ பீஷ்மர் சொல்கிறார்... “தருமா..!!!! சரணம்/அடைக்கலம் என வந்தவரை பாதுகாப்பது உத்தமமான தருமம் ஆகும். சிபி முதலான மன்னர்கள் அபயம் என வந்தவரை காத்ததன் மூலம் உத்தம கதியை அடைந்தார்கள். பறவைகளுக்கு பகைவனான வேடன் ஒருவன் புறாவிடம் சரணடைந்தான். அதனால் நன்கு உபசரிக்க பட்டான். அது தனது மாமிசத்தையே அவனுக்கு அளித்து மேன்மை அடைந்தது “ என்ற பீஷ்மர், முன்னர் பரசுராமரால் முகுந்த மன்னனுக்கு இந்த கதை சொல்லப்பட்டது. பாவங்கள் அனைத்தையும் போக்க வல்ல அந்த கதையை இப்போது உனக்கு கூறுகிறேன் கேள்..!!” என கதையை கூற துவங்கினார்.
முன்னொரு காலத்தில் வேடன் ஒருவன் கொடிய மனதுடன் காட்டில் அலைந்து திரிந்தான். பறவைகளை பிடிக்க இங்கும் அங்கும் வலைகளை விரித்தான். வேட்டையாடுவதும், பெண் இன்பமும் தான் அவன் வாழ்வாக இருந்தது. நாட்கள் பல சென்ற பிறகும் தனது அதர்மத்தை அவன் உணரவில்லை. ஒருநாள் பெரும் சுழல் காற்றில் சிக்கி கொண்டான். காட்டில் இருந்த மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் பேரொலியுடன் வீழ்ந்தன. எங்கும் பெரு மழை. வெள்ளக்காடு. கடுங்குளிரில் வேடன் நடுங்கினான். வீடு செல்ல வழி தெரியவில்லை. பறவைகள் பெரு மழையால் வெளிவர இயலாது மர பொந்துகளில் பதுங்கிக் கிடந்தன. காட்டு விலங்குகளான சிங்கங்களும், புலிகளும் மழையால் துன்புற்று தரையில் வீழ்ந்தன. செல்லவும் முடியாமல், நிற்கவும் இயலாது தவித்து கொண்டிருந்த வேடனின் கண்ணில் பட்டது ஒரு பெண் புறா. பாவியான அந்த வேடன் அப்புறாவை எடுத்து தனது கூண்டில் போட்டு கொண்டு, ஒரு பெரிய மரத்தை அடைந்தான். பறவைகளின் சரணாலயம் போல அம்மரம் தோற்றம் அளித்தது.
சிறிது நேரத்தில் மழை நின்றது. நீலவானம், நட்சத்திரங்களுடன் பளீச்சென தோற்றமளித்தது. குளிரால் நடுங்கிய வேடன் நேரத்தை யூகித்து அறிந்தான். வீடு செல்வதற்குரிய நேரம் அல்ல அது. எனவே எஞ்சிய இரவு பொழுதை அம்மரத்தடியிலேயே கழிக்க எண்ணினான். அம் மரத்திற்கு வணக்கம் செலுத்தி விட்டு, இலைகளை பாயாக பரப்பினான். ஒரு கல்லையே தலையணையாக கொண்டு படுத்தான். தூக்கம் வந்தது. அம்மரத்தின் கிளையில் ஆண்புறா ஒன்று தன் இணையுடன் வாழ்ந்து வந்தது. காலையில் இரை தேட சென்ற அப்பெண் புறா இன்னும் திரும்பவில்லை. ஆண் புறா வருத்தத்துடன், பெருமழையில் என் பெண் புறாவிற்கு என்ன ஆயிற்றோ எனத் துன்புற்றது. என் மனைவி இல்லா வீடு சுடுகாடு போல தோன்றுகிறது, மகன், மகள், பேரன், பேத்தி இப்படி வீட்டில் யார் இருந்து என்ன பயன்? மனைவியில்லையெனில் வாழ்க்கை ஏது? என புலம்பி அழுதது ஆண் புறா.
இந்த அழுகை ஒலி வேடனின் கூட்டில் அடைபட்டிருக்கும் பெண் புறாவின் காதில் விழுந்தது. “என் கணவர் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார். நான் உண்மையில் பாக்கியசாலிதான். எந்த பெண் கணவனால் அன்புடன் நேசிக்கப் படுகிறாளோ, அவள் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விடுகிறாள். பெண்களுக்கு, எவன் அக்னி சாட்சியாய் மணக்கிறானோ அவன் தான் தெய்வம். எந்தப் பெண் கணவனால் பாராட்ட படவில்லையோ அவள் வாழ்க்கை காட்டுத் தீயால் பற்றப்பட்ட பூங்கொத்து சாம்பல் ஆவது போல சாம்பல் ஆகும்” என்று தன் கணவனின் அன்பை எண்ணி மகிழ்ந்தது. அதே நேரத்தில் கூண்டில் அடைப்பட்டு கிடப்பதால் துன்புற்றது. அப்படி வேடனால் பிடிக்கப்பட்டு துன்புறும் போதும் அந்தப் பெண் புறா தன் ஆண் புறாவை நோக்கி கூற தொடங்கியது.
“ உமது நலனுக்காக சிலவற்றைக் கூறுகிறேன். அடைக்கலம் என யார் வந்தாலும் அவர்களை நன்கு உபசரிக்க வேண்டும். வேடன் ஒருவன் உமது இடம் வந்து குளிராலும், பசியாலும் துன்புற்று படுத்திருக்கிறான். அவனுக்கு வேண்டிய உதவிகளை நீர் தர வேண்டும். புறாக்களுக்கு உரிய தருமம் நீர் அறியாததல்ல. இல்லறத்தான் ஒருவன் தன் சக்திக்கு மீறி தர்மம் செய்வான் என்றால், மறுமையில் அளவில்லாத இன்பத்தை அவன் அடைவான். நீர் உமது உடம்பின் மீது உள்ள பற்றை விட்டு விட்டு, அறத்தின் மீது பற்று கொண்டு இந்த வேடன் மகிழ்ச்சி அடையும்படி செய்யுங்கள். என்னை நினைத்து வருந்த வேண்டாம் ” என்று கூறிய பெண்புறா தலையை உயர்த்தி தன் கணவனின் செய்கையைக் கூர்ந்து கவனித்தது.
நுணுக்கமாக உபதேசம் செய்த பெண் புறாவின் சொற்களை கேட்ட ஆண் புறா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது. அந்த வேடனை வணங்கி “ உமது வரவு நல்வரவாகட்டும். நீர் இப்போது என் விருந்தினர். விருந்தினரை உபசரிப்பது கடமை. வீட்டிற்கு வந்தவன் பகைவனாய் இருந்தாலும் கூட அவனை காப்பதே கடமையாகும். பெரிய மரமானது, தன்னை வெட்டி வீழ்த்துப்வனுக்கும் நிழல் தர தவறுவதில்லை. ஆகவே உமக்கு என்ன வேண்டும் என்று சொல்லவும். அதை நிறைவேற்றுகிறேன். “ என்றது. வேடனும் “ என்னால் குளிரை தாங்க முடியவில்லை. அதனைப் போக்கவும் “ என்றான்.
உடனே புறா, உலர்ந்த சுள்ளிகளையும், சரகுகளையும் கொண்டு வந்து குவித்து, தேடி அலைந்து நெருப்பையும் கொணர்ந்து தீ மூட்டியது. வேடன் குளிர் நீங்கியதும், அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது. எனக்கு பசிக்கிறது என்றான் வேடன். புறா வேடனை நோக்கி, “உன் பசியைப் போக்கத் தக்க செல்வம் என்னிடம் இல்லை. துறவிகளைப் போல நாங்களும் எதையும் சேர்த்து வைப்பதில்லை” என்று கூறி “உன் பசியை சிறிது நேரம் பொறுத்துக்கொள் என்று கூறி சுள்ளிகளை கொண்டு பெருந்தீயை உண்டாக்கியது. பின் வேடனை நோக்கி. “என்னையே உணவாக கொண்டு உன் பசியை போக்கி கொள்” என்று கூறி தீயில் வீழ்ந்து உயிர் துறந்தது. அது கண்டு வேடன் திடுக்கிட்டான். “என்ன கொடுமை செய்து விட்டேன்” என்று புலம்பி அழுதான்.
வேடன் புறாவின் முடிவு கண்டு மனம் பதறினான். “கொடியவனாகிய நான் என்ன காரியம் செய்து விட்டேன். இனி நான் வாழ்ந்து என்ன பயன். தன்னைத்தானே மாய்த்து கொண்ட இப்புறா மகாத்மா ஆகிவிட்டது. நான் பாவியாகி விட்டேன். இனி உற்றார், உறவினரை விட்டு உயிர் விட தயாராகி விட்டேன். இதற்கு இந்தப்புறாவே எனக்கு வழிகாட்டி. எல்லா போகங்களையும் இன்று முதல் துறந்து விடுகிறேன். கோடை காலத்து குளம் போல என் உடல் வற்றி, துரும்பாகட்டும். பசி, தாகம், வெயில், மழை, பனி இவற்றை பொருட்படுத்தாது உபவாசம் இருப்பேன். மறுமை நோக்கி தருமம் செய்வேன். தவம் செய்வேன்.” என உறுதி பூண்டான். கையிலிருந்த வில்லையும், அம்பையும், பறவைகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டையும் தூக்கி எறிந்தான். கூண்டில் இருந்த பெண் புறாவையும் வெளியே செலுத்தினான். தானும் புறப்பட்டான்.
வேடன் சென்றதும் அந்தப் பெண் புறா தன் கணவனை நினைத்துத் துயரத்தில் வாடியது. “உம்மிடம் நான் கொண்ட அன்புக்கு குறைவு ஏது? பிள்ளைகள் பலரை பெற்ற போதும் கணவனை இழந்த மகளிர் துன்புறுவர். கணவனை இழந்தோர்க்கு யாரைக்காட்டி ஆறுதல் அளிக்க முடியும். இதுவரை இணை பிரியாது வாழ்ந்தோம். ஆறுகளிலும், மலைகளிலும், மரக்கிளைகளிலும் இன்பமாக பாடி திரிந்தோம். இனி அந்த நாட்கள் வருமா? கணவனுக்கு இணையான தெய்வமும் இல்லை, அன்பரே! நீர் இன்றி நான் வாழப்போவதில்லை. கற்பிற்சிறந்த எந்தப் பெண் தன் கணவனை இழந்த பின் உயிர் வாழ்வாளா?" என கூறிக்கொண்டே ஆண் புறா வீழ்ந்த தீயில் தானும் வீழ்ந்து உயிர் நீத்தது.
என்ன வியப்பு!!!
அழகான ஆடை அணிகலங்களை அணிந்ததும், மேலோரால் புகழப்படுவதும், விமானத்திலேறி சுவர்க்கம் செல்வதுமான தனது கணவனை அப்பெண் புறா அடைந்து சுவர்க்க இன்பத்துடன் வாழ்ந்து வந்தது. சுவர்க்க பூமியில் மகிழ்வுடன் செல்லும் இரு புறாக்களையும் கண்ட வேடன் மனமாற்றம் அடைந்தான். தானும் தவத்தை மேற்கொண்டு அந்தப் பறவைகளை போல சுவர்க்கம் செல்ல வேண்டும் என் உறுதி கொண்டு, தன் தொழிலை விட்டான். விரதங்களை மேற் கொண்டான். ஒருநாள் செல்லும் வழியில் அழகான குளத்தை கண்டான். அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தது. பறவைகளின் ஒலி எங்கும் ஒலித்துக் காதுக்கு இனிமையாக இருந்தது. வேடனுக்கு தாகம் இருந்த போதும் குளத்தை நாடவில்லை. கொடிய விலங்குகள் வாழும் காட்டை நோக்கி நடந்தான். அப்போது பெருங்காற்று வீசியது. மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்தன. தீப்பொறி கிளம்பி காடே தீப்பற்றி எரிந்தது. விலங்குகள் அஞ்சி ஓடின. ஆயினும் அந்த ஆபத்தினின்றும் தப்பி செல்ல வேண்டும் என வேடன் கருத வில்லை. தீயில் எரிந்து சுவர்க்கம் அடைந்தான்.
தருமா...!!! நற்செயலால் ஆண் புறாவும், பெண் புறாவும் சுவர்க்கம் அடைந்தன. தவறினைத் திருத்திக்கொண்டு நல்லொழுக்கத்துடன் வாழ்ந்த வேடனும் சுவர்க்கம் அடைந்தான். ஆகவே நல்லொழுக்கம் மேற்கொள்க" என்றார்
வியாசருக்கும் புழுவிற்கும் நடந்த உரையாடல்
============================================
** தருமர் பீஷ்மரிடம் “போரில் இறக்க மனமில்லாதவரும், மனம் உள்ளவர்களும் கொல்லப்பட்டனரே! செல்வம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்பமிருந்தாலும், துன்பம் இருந்தாலும், எந்த நிலையிலும் எந்த ஜீவனும் உயிர் விட துணியவில்லையே! எல்லாம் ஆசையோடு வாழவே விரும்புகின்றனவே ஏன்? அதன் காரணத்தைக் கூறுவீராக” என்று கேட்க பீஷ்மர் கூறலானார்.
“தருமா...!! நல்ல கேள்வி கேட்டாய். இது தொடர்பாக வியாசருக்கும், ஒரு புழுவிற்கும் நடந்த உரையாடலை உனக்கு நினைவுப்படுத்துகிறேன். ஒரு நாள் பாதையில் விரைவாக ஓடும் புழுவை பார்த்த வியாசர் “ புழுவே..நீ பயந்தவன் போல இருக்கிறாய். வேகமாகப் போகிறாய். உன் இருப்பிடம் எங்கே இருக்கிறது. யாரைக் கண்டு பயப்படுகிறாய்? சொல் “ என்று வினவினார்.
அதற்கு புழு, “பாதைகளில் இரைச்சலுடன் செல்லும் வண்டிகளின் சப்தத்தை கேட்டு எனக்கு பயம் உண்டாயிற்று. அது என்னை கொன்றுவிடும் என பயந்து விலகிச் செல்கிறேன். அதிக சுமையை இழுத்து கொண்டு சாட்டையால் அடிபட்டுப் பெருமூச்சு விட்டுத் துன்புறும் எருதுகளின் ஓசையையும் நான் உணர்கிறேன். வண்டிகளை ஒட்டுவோர் ஒலியும் கேட்க முடிகிறது. என் போன்ற புழுப் பிறப்பினர் அதை தாங்க முடியாது. அந்த பயத்தால் விலகிப்போகிறேன். யாருக்குத்தான் உயிரை விட மனம் வரும்” என பதில் அளித்தது.
அந்தப் புழு அவ்வாறு கூறியதும் வியாசர் அதைப் பார்த்து “புழுவே!! உனக்கு ஏது இன்பம்? விலங்கு பிறப்பாகிய உனது மரணமே இன்பம் பயக்கும் என நினைக்கிறேன்” என்றார். அது கேட்ட புழு, “உயிரானது, தான் எடுத்த தேகங்களில் மீது பற்றுடன் இருக்கிறது. இந்த தேகத்திலும் எனக்கு இன்பம் இருப்பதை நான் உணர்கிறேன். ஆகவே நான் உயிருடன் பிழைத்திருக்கவே விரும்புகிறேன். எந்த பிறவியிலும் உடலுக்கு ஏற்றபடி இன்பத்திற்குரிய பொருள் எல்லாம் உண்டாக்கப்பட்டுள்ளன. நான் மனித பிறவியில் மிகவும் செல்வம் உள்ளவனாகப் பிறந்திருந்தேன். எனது பேதைமையினால் உயர்ந்தோரை பகைத்து கொடியவனாக மாறினேன். விருந்தினருக்கும், ஏழைகளுக்கும் எதுவும் தராமல் சுவையானவற்றை தேர்ந்தெடுத்து நானே எல்லாவற்றையும் சாப்பிட்டேன். ஏழைகளுக்கு உணவு தரவில்லை. யாராவது கொடுத்தால் அதையும் பறித்துக்கொண்டேன். பிறருடைய ஆக்கம் கண்டு பொறாமை கொண்டேன்.
பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு பொறாமை கொண்டேன். பிறர் அனுபவிக்கும் இன்ப சுகத்தைக் கண்டு முகம் சுளித்தேன். மற்றவர் பெற்ற நன்மை கண்டு வயிறு எரிந்தேன். இப்படி முன் பிறவியில் தகாதவற்றை செய்தேன். அவற்ரையெல்லாம் இப்போது நினைத்து மகனை இழந்தவன் போல துன்புறுகிறேன். நல்வினை எதையும் செய்ததாக தெரியவில்லை. எவ்வளவு கெட்ட குணம் என்னிடம் இருந்த போதிலும் என் தாயை நான் என் கண் போல பாதுகாத்தேன். ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்த விருந்தினருக்கு உணவு அளித்து உபசரித்தேன். அந்த ஒரு நற்செய்கையால்தான் நான் இப்பிறவியில் சில இன்பங்களையாவது அனுபவித்து வருகிறேன். அதனால் முந்தைய பிறவியின் நினைவு என்னை விட்டு அகலாமல் இருக்கிறது. முக்காலமும் அறிந்த வியாசரே! நான் செய்த அந்த நல்ல செயல்களின் விளைவை பற்றி எனக்கு விளங்குமாறு மேலும் விளக்கமாகக் கூறுங்கள்" என்று கேட்டது.
வியாசர் “புழுவே..!! நீ முன் பிறவியில் செய்த சில செயல்களால் கடந்த பிறவியின் நினைவில் திளைக்கிறாய். அது ஏன் என்று உனக்கு புரிய வேண்டும் என்றால், நீ விரும்பினால் மனித பிறவி எடுத்து சிறந்த பலன்களை அடைத்து அதை தெரிந்துக்கொள். பொருளுக்காகவே அலையும் அறிவு கெட்ட மனிதனுக்கு ஒரு நன்மையும் கிடையாது. இருந்தாலும் நீ விரும்பும் குலத்தில் பிறக்கும் பேற்றினை தருகிறேன்” என்றார்.
புழு, தனது அடுத்த ஷத்திரிய பிறவியில் வியாசரை சென்று பார்த்து வணங்கியது. “மாமுனிவரே! உம் போதனையை பின்பற்றியதால் நான் க்ஷத்திரியனாக ராஜபுத்திரன் ஆனேன். இது நான் விரும்பிய பிறவிதான். என்னுடைய வைபவத்தை எண்ணி நானே வியப்படைகிறேன். எத்தனை யானைகள் என்னைத் தாங்கி செல்கின்றன. எனது தேரை உயர்ந்த காம்போஜ நாட்டு குதிரைகள் இழுத்து செல்கின்றன. மிகச் சிறந்த ஒட்டகங்களும், கோவேறு கழுதைகளும் எனக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் முன்னே செல்கின்றன. ஏராளமான பேர் என்னை வந்து துதித்து போற்றுகின்றனர். இன்னும் எனக்குப் புழு பிறவியின் நினைவு வருகிறது. உமது தவ மஹிமையால்தான் நான் அரச வாழ்வு பெற்றேன். இனி நான் என்ன செய்ய வேண்டும்? கட்டளையிடுங்கள்” என விரும்பி வேண்டியது.
அதற்கு வியாசர், “நீ புழுவாகப் பிறந்தாலும், என்னை வணங்கி போற்றியதால் அரச வம்சத்தில் பிறந்திருக்கிறாய். நீ விரும்பினால் அடுத்த பிறவியில் அறவோராக பிறக்கலாம்.” என்று ஆசி கூறினார். நல்லொழுக்கத்தினால் சிறந்த அறவோனாகப் பிறந்து பின் இறந்து தேவனாக பிறந்து தேவசுகம் அனுபவித்தது புழு. எனவே, உயர் வாழ வேண்டும் என்பது அணைத்து உயிர்களுக்கும் உரிய அடிப்படை ஆசை. இந்த ஆசையை எல்லாம் உயிர்களிடமும் திணித்தவன் இறைவன். ஏனென்றால் ஒவ்வொரு பிறவியிலும் கடந்த பிறவியை விட ஒழுக்கத்திலும், தருமத்திலும், உயர்த்து விளங்கவேண்டும் என்பதற்காக. ஆனால் இன்று யாரும் அதை கடைபிடிப்பது இல்லை.” ஆனால் நீ அதை மறக்காமல் பின்பற்றுவாயாக என்று கூறி முடித்தார்.

No comments:

Post a Comment