Saturday, April 5, 2014

நல்லதை மனதில் நினைப்போம். நல்லதே நடக்கும்.

திருடன் ஒருவன், ஒரு மண்டபத்திற்கு வந்தான். அங்கு துறவி ஒருவர் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரிடம் சலனம் சிறிதும் இல்லை. "நம்மைப் போல இவனும் ஒரு திருடன் போல, அதனால் தான் யாருக்கும் தெரியாமல் இக்காட்டில் ஒளித்திருக்கிறான்' என்று நினைத்தான். இவன் இருக்கும் இடத்தில் தங்கினால், தான் திருடிய பொருளுக்கு ஆபத்து வந்துவிடும் என்று எண்ணி, உடனே மண்டபத்தை விட்டு வெளியேறினான்.
சிறிது நேரம் கழித்து அவ்வழியே ஒரு குடிகாரன் வந்தான். தான் எவ்வளவு குடித்தாலும் சுய நினைவை இழப்பதில்லை என்பதில் அவனுக்கு அலாதியான நம்பிக்கை. அந்த மண்டபத்தைக் கடந்தான் குடிகாரன். சமாதி நிலையில் இருந்த துறவியைக் கண்டதும், ""இவன் மொடாக்குடியன் போல. அசையாமல் தூங்குகிறான். என்னைப் போல எல்லாராலும் தெளிவாக இருக்க முடியுமா என்ன? '' என்று பிதற்றியபடியே அவ்விடத்தைக் கடந்தான். ஆனால், இவர்கள் இருவரும் வந்து சென்றதை அறியாத துறவியோ "சிவனே' என கண்மூடி இருந்தார்.
திருடன் உலகத்தில் தான் பார்ப்பதை எல்லாம் திருட்டு எண்ணத்துடனே பார்க்கிறான். குடிகாரனின் எண்ணங்கள் குடிப்பழக்கத்தைச் சுற்றியே அமைகின்றன.
நாம் எதை மனதில் எண்ணுகிறோமோ, அதைக் கொண்டே உலகத்தை அளக்கிறோம். எனவே, நல்லதை மனதில் நினைப்போம். நல்லதே நடக்கும்.

No comments:

Post a Comment