Sunday, April 6, 2014

புலால் உணவு உண்டால், அந்த விலங்கினப் பதிவுகள் நம் உடலில் கலந்து நமக்கும் மிருகக் குணம் வந்து விடும் என்று சொல்கிறார்களே உண்மையா ?

புலால் உணவு உண்டால், அந்த விலங்கினப் பதிவுகள் நம் உடலில் கலந்து நமக்கும் மிருகக் குணம் வந்து விடும் என்று சொல்கிறார்களே உண்மையா ? அப்படியானால் மான், ஆடு, மாடு போன்ற சாதுவான விலங்குகளை வேட்டையாடித் தின்னுகின்ற சிங்கம், புலி போன்ற விலங்குகள் ஏன் சாதுவாக மாறுவதில்லை ?
முதலில் மனிதனுக்கும், விலங்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். தொடும் உணர்வு ஓரறிவு, அதனுடன் வாய் இணைவது ஈரறிவு, தொடும் உணர்வு, வாய், மூக்கு என்ற மூன்றும் சேர்ந்தது மூன்றறிவு, தொடு உணர்வு, வாய், மூக்கு, கண் நான்கும் சேர்ந்தது நாலறிவு, இவற்றோடு செவி இருப்பது ஐந்தறிவு. இந்த ஐந்து புலன்களும் ஐந்து உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. ஆனால் மனிதன் மட்டுமே மனம் என்ற ஒன்றைப் பெற்றிருக்கிறான். அந்த கரணங்களாகிய புத்தி, அஹங்காரம், சித்தம் இந்த மூன்றும் விலங்குகளுக்கும் உண்டு. ஆனால் நான்காவது அந்த கரணமாகிய மனம் அவைகளுக்குக் கிடையாது. அந்த மனம் என்றால் என்ன என்றால் எண்ணங்களின் தொகுப்பு. அந்த எண்ணங்களுக்கு ஆதாரமாக இருப்பது சொல். அது இல்லை என்றால் எந்த எண்ணமும் எழாது. மனமும் கிடையாது. எனவே சொல்லும், சொல்லால் எழும் எண்ணமுமே மனம் என்கிற ஆறறிவாகும். இவை அனைத்தும் பெற்று சிந்திக்கும் திறன் பெற்றவன் மனிதன். "மக்கள் தாமே ஆறறிவுயிரே" (தொல்காப்பியம் - 1532).
இதனடிப்படையில் எண்ணிப் பார்க்கின்ற பொழுது மனிதன் மற்ற உயிர்களை விட எதனால் மாறுபட்டவன், உயர்ந்தவன் என்பது புலனாகிறது. ஆனால், ஆறாவது அறிவினை அனைத்து மக்களும் அறிவதில்லையே என்று அதே தொல்காப்பியர் ஓரிடத்தில் சொல்கிறார். அதற்குக் காரணம் இந்த மனமே. விலங்குகள் புலன் வழியாக உணர்வை அறிகின்றன பிறகு செயல்படுகின்றன அதோடு முடிந்து விடுகிறது. அங்கு சொல்லுமில்லை, எண்ணமும் இல்லை, எனவே எண்ணப் பதிவுகளுமில்லை. எண்ணப்பதிவுகளையே நம் முன்னோர்கள் கர்ம பீஜங்கள் என்பார்கள். விலங்குகளுக்கு உணவு, இனப் பெருக்கம், பாதுகாத்துக் கொள்ளுதல், பயப்படுதல், தவிர வேறு எந்தப் பதிவுகளும் சித்தத்தில் அல்லது கருமையத்தில் இருக்காது. அதாவது ஐந்து புலன்களின் மூலம் தொடு உணர்வு, முகர்தல், பார்ப்பது, கேட்பது, உண்ணுவது தவிர வேறு எந்தப் பதிவுகளும் அங்கே கிடையாது. இவைகளின் மூலம் நிகழும் ஒரே விதமான செயல்களே பழக்கமாகி அங்கே அழுத்தம் பெற்று இயல்பாகவே ஆகி விட்ட காரணத்தினால், உணவின் மூலம் ஏற்றுக் கொள்ளும் வலுக்குன்றிய புதிய பதிவுகள் அங்கே செயலிழந்து போகின்றன. மனிதனுக்கு மட்டுமே சொல் என்ற ஒன்று இருப்பதால் அதன் மூலம் அவன் நிறைய எண்ணங்களை உருவாக்கி அவற்றை வினைப் பதிவுகாக சித்தத்தில் ஏற்றுக் கொள்கிறான். எனவே ஒவ்வொரு வினை வித்துகளும் மீண்டும் எண்ணங்களாக முளைத்து வரும் பொழுது அதற்கேற்ற உணர்வுகளையும் அவன் நுகர்கிறான்.
கருமையம் என்பது ஒவ்வொரு ஜீவனுக்கும் அதன் உடலின் மையத்தில் அமைந்திருக்கும். அதுவே சித்தம். அதிதான் நம் வினைப்பதிவுகள் வித்துக்களாக இருக்கின்றன. அதிலிருந்தே ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்பாலுக்கு விந்தணுவும், பெண்பாலுக்கு முட்டையும் தோன்றி வரும். இவை கூடியே புதிய உயிர் தோன்றும். கருமையத் தொடர்பையே விஞ்ஞானம் ஜீன்கள் அதாவது மரபு என்றழைக்கிறது. அப்படிப்பட்ட கருமையத்தில் நம் ஒவ்வொரு செயலும், நுகர்ச்சியும் பதிவாகிக்கொண்டே இருக்கிறது. ஒரு பொருளைப் பார்த்தவுடன் அது மனதில் பதிந்து, பிறகு தானாகவோ அல்லது யாரேனும் சொன்னாலோ உடன் அந்தப் பொருள் நம் மனதில் தோன்றுவது இதனால்தான். நம்முடைய பல்வேறு அனுபங்களும் அலை வடிவத்தில் மாற்றம் பெற்றுச் சுருங்கி கருமையத்தில் பதிந்து விடுகிறது. எனவே மீண்டும் நாம் நினைக்கும் பொழுது அந்த உருவமோ அல்லது அனுபவமோ அதே தன்மைகளுடன் நமக்குள் உள்ளுணர்வாகத் தோன்றுகிறது. நாம் உட்கொள்கின்ற உயிரினங்களுக்கு 5 உணர்வுகள் உண்டு. அந்த உணர்வுகளையும், நுகர்ச்சிகளையும் அவற்றின் கருமைம் சேமித்து வைத்திருக்கிறது. கொல்லப்படும் உயிரினத்தின் இறுதி கட்ட மரண அவஸ்தைகளும் உணர்வுகளும் அதன் கருமையத்தில் பதிவாகி விடும். அந்த நொடியே அவற்றின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அணுக்களின் மையங்களிலும் அது பதிவாகும். அந்தப் பதிவுகள் அனைத்தும் அலைவடிவத்தில் இருக்கும். நாம் அதை உண்ணும் பொழுது அந்த பதிவுகள் நமது உதிரத்தில் கலந்து பாவப் பதிவாக நம் கருமையத்திலும் பதிவாகி விடும்.
ஏனென்றால் விலங்குகளைப் போலல்லாமல் நமக்குள் மனமும், கோடிக்கணக்கான வினைப்பதிவுகளும் இருப்பதால் இது நிகழ்கிறது.
மேலும் நாம் உண்ணும் உணவே மாறுபட்ட பல உணர்வுகளுக்குக் காரணமாக இருக்கிறது என்று விஞ்ஞானமே இன்று ஏற்றுக் கொள்கிறது. புலால் உணவு ஜீரணிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதாலும், அதன் கழிவுகள் உடலில் தங்கி விடுவதாலும் பல்வேறு மாறுபட்ட உணர்வுகளுக்குக் காரணமாக அமைந்து விடுகிறது. இப்பொழுது மீண்டும் விஞ்ஞானம் சொல்வதை நினைவுபடுத்துகிறேன், அதாவது மாறுபட்ட உணர்வுகளே நோய்களுக்குக் காரணமாக அமைகின்றன என்றும் இப்பொழுது விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே எவ்வழியிலாவது நம் செயலை நியாயப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல், தவறைத் திருத்திக் கொள்ள முயலுவதே அறிவுடைமையாகும். பிற உயிர்களின் வாழும் சுதந்திரத்தைப் பறிப்பது விலங்குகளில் இருந்து மேம்பட்ட மனிதனுக்கு ஏற்புடைய செயலாகாது என்பதே என்னுடைய தாழ்மையானக் கருத்து.

No comments:

Post a Comment