Monday, April 7, 2014

பலமுள்ள பகைவனிடம் விரோதம் கொண்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

பலமுள்ள பகைவன் விரோதமானால்...
=====================================
** தருமர் பீஷ்மரிடம் “பலமுள்ள பகைவனிடம் விரோதம் கொண்டால், எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என வினவ, பீஷ்மர், இரு இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை எடுத்துக்காட்டாக சொல்ல ஆரம்பித்தார்..
“ இமய மலையில் மிகப்பெரிய இலவ மரம் ஒன்று இருந்தது. அது பருத்த அடி மரத்தையும், நிறைந்த கிளைகளையும், தழைத்த இலைகளையும், உறுதி மிக்க வேர்களையும் கொண்டு இருந்தது. அம்மரத்தில் பூக்களும், பழங்களும் மிகுதியாக இருந்தன. அவற்றை தின்ன வரும் பறவைகளின் அழகு அனைவரையும் கவரும். வழிப்போக்கரும், வணிகரும் அதன் நிழலில் எப்போதும் தங்கி இருப்பர். ஒரு நாள் நாரதர் அங்கு வந்தார். அதன் தோற்றத்தை கண்டு மகிழ்ந்தார்.
அந்த இலவமரத்தை நோக்கி, “அனைவரையும் கவரும் இலவ மரமே! உன்னை கண்டு நான் வியப்படைகிறேன். பறவைகளும், விலங்குகளும் உன்னை நாடி வருகின்றன. பெருங்காற்றுகூட உன்னை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கிளை கூட முறிந்ததில்லையே. வாயு பகவான் உன் நண்பனா? பெரிய பெரிய மலை சிகரங்களையும் சிதற அடிக்கும் வாயு உன்னிடம் நெருங்காததற்கு காரணம் உண்டா? நீ பூத்த குலுங்கும் காலத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாய் உன்னை நாடி வருகின்றன. பல விலங்குகளுக்கு இருப்பிடமான மேரு மலை போல காணப்படுகிறாய். முற்றும் துறந்த முனிவர்களும் உன்னை நாடி வருகின்றனர். உனது இடத்தை தேவர் உலகத்துக்கு இணையாக கருதுகிறேன்” என்று கூறினார்.
நாரதர் மேலும், “உலகத்திற்கு அச்சம் தரும் வாயு பகவான் உனக்கு உறவினன் அல்லது நண்பன் என்னும் காரணத்தால் உன்னை ஒன்றும் செய்யவில்லை என்று நினைக்கிறேன். வாயுவிற்கு நீ எப்போதும் கீழ் படிந்து நடக்கிறாய் என நினைக்கிறேன். அதனால் தான் வாயு உன்னை மட்டும் ஒன்றும் செய்வதில்லை. ஓ! இலவ மரமே, ஏதோ காரணத்தால் வாயு பகவானால் நீ பாதுகாக்கப் படுகிறாய் என்பதில் ஐயமில்லை. அதனால் தான் தைரியமாக ஓங்கி நிற்கிறாய்” என்றார். அதற்கு இலவ மரம் மறுப்புத் தெரிவித்தது. “நாரதரே! வாயு என் உறவினனுமில்லை. நண்பனும் இல்லை. ஆயின் என் ஆற்றல் கண்டு வாயு அஞ்சுகிறது. எனது பலத்தில் சிறு பகுதிக்கு கூட வாயுவின் பலம் ஈடாகாது. சிறியதும், பெரியதுமான மரங்களை எல்லாம் கொடூரமாக வீழ்த்திக்கொண்டு வரும் வாயுவை நான் என் பலத்தால் அடக்கி விடுகிறேன். மாமுனிவரே. மிகவும் சினம் கொண்டால் கூட வாயுவினால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என ஆத்திரத்துடன் கூறியது.
உடனே நாரதர் இலவ மரத்தை நோக்கி “உனது கருத்துச் சரியன்று. வாயுவின் பலத்துக்கு இணையாக யாருடைய பலமும் இல்லை. எமனும் இந்திரனும் கூட ஆற்றலில் வாயுவுக்கு இணையாகார். உலகில் உள்ள எல்லா பொருள்களுக்கும் அசைவையும், உயிரையும் கொடுக்கும் மகாப்பிரபு வாயு. வாயு எங்கும் சஞ்சரித்தால் தான் உயிரினங்கள் எங்கும் உலவ முடியும். அதனால் வணங்கத்தக்க தெய்வம் வாயு. பணிந்து வணங்குவதற்கு மாறாக இழிவாக அல்லவா பேசுகிறாய். நீ வலிமை அற்றவன். பொறாமையுடையவன். உனது பேச்சு எனக்கே சினத்தை உண்டாக்குகிறது. மிகச்சிறந்த மரங்களான சந்தனம், தேக்கு, தேவதாரு போன்ற மரங்கள் கூட இப்படி வாயுவை பழித்ததில்லை. இப்போதே சென்று வாயுவிடம் உன்னைப் பற்றிக் கூறுகிறேன்” என்றார்.
சொன்னபடியே வாயு பகவானிடம் “இமய மலையில் மிக பிரம்மாண்டமான இலவ மரம் இருக்கிறது. அது தங்களை கேவலமாகப் பேசுகிறது. அது சொன்னதை சொல்லக் கூட நா கூசுகிறது. தங்களை விட சிறந்தவர் யாருமில்லை. நீர் சினத்தில் யமனுக்கு இணையாவர். இதனை நான் அறிந்துள்ளேன். ஆயினும் இலவ மரம் தங்களை இழிவாக பேசுவதை நினைக்கும் போதுதான் வருத்தமாக இருக்கிறது” என்று கூறினார். இதனை கேட்ட வாயு பகவான் கோபமடைந்தார். விரைந்து இலவ மரத்திடம் சென்று, “இலவமரமே..!!. என்னை யாரென்று நினைத்தாய். நாரதரிடம் என்னை பற்றி இழித்து பழித்தும் பேசினாயாமே? உன்னை நான் நன்கு அறிவேன். நான்முகன் உலகை படைத்ததும் உன்னிடம் இளைப்பாறினார். அதனால் உன்னை அழிக்காமல் விட்டு விட்டேன். இதோ என் வலிமையை காட்டுகிறேன் பார்” என்றார்.
இதை கேட்டு மரம் ஏளனமாக சிரித்தது. “வாயுவே..!!! உன் சினத்தை காட்டில் காட்டு. என்னிடம் உன் கோபம் செல்லாது. உன்னைவிட பலம் வாய்ந்த நான் ஏன் உன்னை கண்டு அஞ்ச வேண்டும்? புத்திமான் பலவானாவான் என்பது பழமொழி. கேவலம் உடல் பலம் உள்ளவர்களை யாரும் போற்றுவதில்லை” என்றது. வாயுபகவான், “உடல் வலைமையை நாளை காண்பாய்" என்று கூறி சென்றார். நேரம் ஆக ஆக இலவ மரத்திற்கு பயம் உண்டாயிற்று. நாரதரிடம் நான் உரைத்தவை அத்தனையும் பொய். மற்ற மரங்களை விட நான் ஒன்றும் அதிக பலம் உள்ளவன் அல்ல. புத்தியில் மற்றவரை விட சிறந்து விளங்குகிறேன். இதே புத்தியை கொண்டு வாயுவிடம் இருந்து தப்பித்து கொள்வேன்” என்று கருதிற்று. அதன்படி தன் கிளைகளையும், இலைகளையும் கீழே உதிர்த்துவிட்டது. வாயு எப்போது வரும் என எதிர் நோக்கியிருந்தது.
இந்நிலையில் வாயு பகவான் பேரிரைச்சலுடன் எல்லா மரங்களையும் வீழ்த்தி கொண்டு இலவ மரம் இருக்கும் இடத்தை அடைந்தார். இலவ மரத்தின் அவல நிலையை கண்டு அதனை நோக்கி, “நான் செய்ய நினைத்ததையெல்லாம் நீயே செய்து கொண்டாய். என்னே உன் அறிவீனம்” என்று எள்ளி நகையாடினார். இது கேட்டு இலவ மரம் நாணித் தலை குனிந்து நின்றது.
பலம் வாய்ந்த பகைவனிடம் மூடத்தனமாக சவால் விட்டது மட்டும் அல்லாமல், புத்தியால் வென்று விடுவேன் என்று எண்ணி தன் அழிவை தானே தேடி கொண்டது இலவ மரம். புத்திசாலித்தனம் என்று நினைத்து தன்னை தானே அளித்து கொள்ளும் மூடத்தனமான காரியத்தை செய்தது. தருமரே! இது போலவே பலமற்றவர்கள் பலசாலிகளை எதிர்த்தால் இலவ மரத்தின் கதிதான் ஏற்படும். எனவே தருமா நம்மை விட பலசாலியாக ஒருவன் இருப்பின் அவனை பகைத்துக்கொள்ளாமல் நண்பனாக மாற்றுவது தான் சிறந்தது. நமது பலவீனத்தை காட்டிக்கொள்ளாமல் அவனிடம் சமாதானமாக செல்வது தான் சிறந்த செயலாகும்.” என்றார் பீஷ்மர்.
சுவர்க்க நரகங்களில் தொடர்வது...
================================
** தருமர் பீஷ்மரை நோக்கி “எத்தகைய உயிர் சுவர்க்கத்தை அடைகிறது? எத்தகைய உயிர் நரகத்தை அடைகிறது? உடலை கட்டை போல போட்டுவிட்டு போகும் உயிரை தொடர்வது எது? எனக்கு இவற்றைப் பற்றி விளக்க வேண்டும்” என கேட்க. அந்நேரத்தில் பிரகஸ்பதி அங்கு வர, பீஷ்மர் தருமரை நோக்கி “இந்தக் கடினமான கேள்விக்கு பிரகஸ்பதி விடையளிப்பார். உலகில் இவரை விட சிறந்த அறிவாளி யார் இருக்கிறார்?" என்று சொன்னார்.
உடனே தருமர் பிரகஸ்பதியை வணங்கி “எல்லாம் தெரிந்தவரே! உயிருக்கு துணை யார்? தந்தையா, தாயா, தாரமா, பிள்ளையா, ஆசாரியரா, சுற்றமா? கட்டை போல உடலை போட்டுவிட்டு உயிர் பிரியும் போது அதற்கு துணை யார்?” என்று கேட்டார். பிரகஸ்பதி, “மனிதன் ஒருவனாகவே இறக்கிறான். சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ போகிறான். தந்தை, தாய் சுற்றத்தார் யாரும் அவனை பின் தொடர்வதில்லை. தருமம் ஒன்றுதான் அவனுடன் செல்ல கூடியது. ஆகையால் எப்போதும் ஒருவன் தருமத்தில் நாட்டம் உள்ளவனாக இருக்க வேண்டும்" என்றார்.
சாதலும், பிறத்தலும் இயற்கை
=============================
** பீஷ்மர் தருமருக்கு உற்றார், உறவினர் இறப்பின் போது ஆற்றியிருத்தல் எப்படி என்பதை விளக்க எடுத்துக்காட்டாக ஓர் அந்தணனுக்கும், சேனஜித் என்னும் மன்னனுக்கும் நடைபெற்ற உரையாடலை கூறினார்....
“முன்னொரு காலத்தில் சேனஜித் என்றொரு மன்னன் இருந்தான். திடீரென அவன் மகன் இறந்ததால் தாங்க முடியாத துயரத்தில் மூழ்கி இருந்தான். செய்வதறியாது திகைத்து யாரிடமும் ஒன்றும் பேசாது செயலற்று இருந்தான். அப்போது அவனது நண்பனான ஒரு அந்தணன் அவனை காண வந்தான். “மன்னனே, ஏன் இப்படி துயரப்படுகிறாய்?
உண்மையில் உனக்காக தான் நீ வருத்தப்பட வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் செத்து கொண்டு தான் இருக்கிறோம். உண்மை இவ்வாறிருக்க இன்னொருத்தர் மரணத்திற்காக ஏன் துயரப் பட வேண்டும்? எல்லோரும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே போக விரும்புகிறோம். பிறப்பு எனில் இறப்பு யார்க்கும் உண்டே!” என்று கூறினான்.
உடன் மன்னன், “நீர் துயரமின்றி இருக்கக் காரணம் என்ன? சாத்திர ஞானமா? தவமா?” என்று வினவினான். அந்தணன், “மன்னனே..!!! இந்த உலகத்தில் ஒழுக்கத்தில் உயர்ந்தவரோ, குறைந்தவரோ, மிகவும் தாழ்ந்தவரோ எந்த நிலையினராயினும் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிப்பர். இந்த உலகத்து பொருள்களில் எதுவும் என்னுடையதன்று. அப்படியே பிறருக்கும் உரியவை அல்ல. இந்த தெளிந்த ஞானம் ஏற்பட்டதால், எனக்கு துன்பமும் இல்லை. இன்பமும் இல்லை. கடலில் எங்கெங்கோ இருக்கும் கட்டைகள் ஒன்று கூடி பிரிவது போன்றது பிறப்பும், இறப்பும். தாய், தந்தை, மனைவி, மக்கள் எல்லாரும் இப்படித்தான் ஒன்று கூடுகின்றனர். பிரிகின்றனர். எப்படி உன் மகன் பிரிந்தானோ அப்படியே இறந்து விட்டான். துன்பத்தின் இறுதியில் இன்பமும், இன்பம் மாறித் துன்பமும் இயற்கையாக ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. தற்போது துன்பத்தில் இருக்கும் நீ பிறகு இன்பத்தை அடைவாய். பின் துன்பம். பின்னர் இன்பம் இப்படி வண்டி சக்கரம் போல இன்ப துன்பங்கள் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும்.
இன்ப, துன்பங்களுக்கு உடம்பே காரணமாகும். ஓர் உயிர் எந்த உடலை சார்ந்து வினையை செய்ததோ அந்த வினையை அடுத்த பிறப்பில் அனுபவித்தே ஆக வேண்டும். இந்த உயிர் ஓர் உடலை சார்ந்து பிறக்கிறது. சுற்றம் என்றும், நட்பு என்றும் சில காலம் சிலரோடு உறவு கொள்கிறது. பொருளாசையில் சிக்கி அந்த ஆசை நிறைவேறாமல் துன்பப்படுகிறது. உயிர் பல விதமான உறவு முறைகளில் சிக்கி தவிக்கிறது. செக்கில் இடப்பட்ட பொருள் பிழியப்படுவது போல பிறவிச்சுழியில் அகப்பட்டு துன்புறுகிறது உயிர். மனிதன் தன் உற்றார், உறவினரை காப்பாற்றத் தகாத காரியங்களிலும் ஈடுபட்டு கர்மத்தைப் பெருக்கி கொள்கிறான். அதற்குரிய பயனை அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.
அவனது துன்பத்தை எப்படி பிறர் ஏற்க முடிய வில்லையோ அப்படியே அவன் கர்மத்தையும் பிறரால் ஏற்க முடியாது. அதை அவன் மட்டுமே அனுபவிக்க வேண்டும். ஞானிகள் இதை தெளிவாக உணர்ந்து உணர்த்தியிருக்கிறார்கள். உணராத அஞ்ஞானிகள் சம்சாரம் என்னும் சேற்றில் சிக்கி கொண்டு கரையேற முடியாமல் அல்லல் படுகின்றனர். ஒவ்வொருவரும் புதிதாக கர்மங்களைச் சேர்க்காமலும், உயிரில் கலந்த கர்மத்தை உதிர்த்தும் இன்பம் காண வேண்டும். சிறந்த அறிஞன் உலக படைப்பின் ரகசியத்தை அறிகிறான். அறிவீனர்கள் இதனை அறிய மாட்டார்கள். இன்பமானது அறிஞன், அறிவிலி, வீரன், கோழை, ஆற்றல் மிக்கவன், ஆற்றல் அற்றவன் என்ற பாகுபாடு அறிந்து ஒருவனை அடைவதில்லை. அவரவர் கர்ம வினைக்கு ஏற்ப வினைப்பயனை அடைகின்றனர். முக்தியை அடைய விரும்புவோர் நன்மை ஒன்றையே செய்து இன்பம் அடைகின்றனர். முக்திப்பாதையில் நாட்டம் இல்லாதவர் வேறு கர்மங்களை செய்து துன்புறுகின்றனர். பொருள் மீது கொள்ளும் ஆசை துன்பத்திற்குக் காரணம் ஆகிறது. ஆசை அற்றவர்க்கு துன்பம் இல்லை. மனிதப்பிறப்பில் அடையும் இன்பமும், சுவர்க்கத்தில் பெறும் இன்பமும் ஆசையற்றவன் பெறும் இன்பத்திற்கு ஈடாகா.
முற்பிறப்பில் செய்யப்பட்ட கர்மமானது தீமையோ நன்மையோ எதுவாயினும் செய்தவன் அறிவுள்ளவனோ, அறிவீனனோ எவராயினும் அதன் பயனை நுகர்ந்தே ஆக வேண்டும். ஆதலால் பொருள் மீது பற்று பாசங்களை துறத்தல் வேண்டும். இல்லையேல் ஆசை பேராசை ஆகி, சினமாகி, பொறாமையாகி கடுஞ்சொல்லை தோற்றுவித்து, தீய செயலுக்கும் காரணமாகிறது. ஒரு பொருள் எனது என்னும் எண்ணத்தோடு இருக்கும் போது, அது பிரிய நேர்ந்தால் துன்பம் ஏற்படுகிறது. அதுபோலவே உறவினர் பிரிந்தாலும் தாங்க இயலாத துன்பம் தோன்றுகிறது. நம் உயிர்க்கும் மற்ற பொருள்களுக்கும் தொடர்பில்லை. நாம் செய்யும் தர்மமே நம்மை (உயிரை) தொடர்ந்து வரும். அதுவே நாம் செல்லும் தேயத்திற்கு உறுதுணையாகும் என்ற தெளிவு பெற்றவர் பிறர் மரணத்திற்காக வருந்த மாட்டார்கள். சாதலும், பிறத்தலும் இயற்கை என்ற தெளிவு கொண்டு துயரத்தை விடுவாயாக” என்று அந்தணன் கூறினான்.
அதனை கேட்ட சேனஜித் மன்னன் அறிவு தெளிவு பெற்று உண்மை மார்க்கத்தை நாடி அமைதி அடைந்தான்" என்றார் பீஷ்மர். இவ்வாறு பிறத்தலும் சாதலும் சமமான நிகழ்சிகள் எனவும், அவை இரண்டும் இயற்கையின் நீதி என்றும் தருமருக்கு எடுத்துரைத்தார் கங்கை மைந்தர்....

No comments:

Post a Comment