Saturday, April 5, 2014

நம் பக்தியின் ஆழம் எவ்வளவோ, அந்தளவுக்கு கடவுளின் அருள் நமக்கு விரைவில் கிடைக்கும்.

சிலர் மசமசவென வேலை செய்வார்கள். ""ஏண்டா! இந்த வேலையை சீக்கிரம் முடின்னு சொன்னேனே! நீ மசமசன்னு வேலை செய்யுறியே! விளக்கெண்ணே!'' என்று வசவு வாங்குவார்கள்.
ஆனால், சிலரோ கொடுக்கப்பட்ட நேரத்தை விட வேகமாக, முன்னதாகவே பணியை முடித்து விடுவார்கள். அவர்களை "எள்ளுன்னு சொன்னா எண்ணெய்யா நிக்கிறியே!'' என்பார்கள். சோம்பலுக்கும் எண்ணெய் தான் உதாரணம், சுறுசுறுப்புக்கும் எண்ணெய் தான் உதாரணம்.
பராசர பட்டர் என்ற மகான் ஸ்ரீரங்கத்தில் இருந்தார். அவர் சொன்ன உதாரணம் ஒன்றைக் கேளுங்கள். திரவுபதியின் உடையை துச்சாதனன் இழுத்தான். அவள் கண்ணனை 16 பெயர்கள் (÷க்ஷாடச நாமம்) சொல்லி அழைத்தாள். அவன் வந்தான், புடவையை வளரச் செய்தான். அவ்வாறு கண்ணன் வந்தது வேகம்.
அதேநேரம், கஜேந்திரன் என்ற யானை, முதலையிடம் சிக்கி "ஆதிமூலமே' என்று கதறிய போது, கணநேரத்தில் வந்தான் கண்ணன். அது அதிவேகம். இதை பராசர பட்டர்,""ரங்கநாதா! உன்னை நான் வணங்கவில்லை. அன்றைக்கு கஜேந்திரன் அழைத்ததும் ஓடிவந்தாயே! அந்த வேகத்தை வணங்குகிறேன்,'' என்கிறார்.
நம் பணிகளை வேகமாக, அதே நேரம் சரியாக முடிக்க வேண்டும் என்பதை பட்டரின் உதாரணம் மூலம் தெரிந்து கொள்கிறோம்.
இதை விட "மிக அதிவேகம்' ஒன்று இருக்கிறது. பிரகலாதன், தன் தந்தை இரணியனிடம் ""இந்த தூணிலே இருக்கிறான் என் ஹரி' என்று சொன்னபோது, உடனேயே தோன்றி விட்டான் நரசிம்மனாக.
கஜேந்திர மோட்சத்தின் போதாவது, கருடன் மேல் ஏறி வந்தார் திருமால். நரசிம்ம அவதாரத்தின் போது, கருடனைக் கூட எதிர்பாராமல் உடனேயே வந்து விட்டார். நம் பக்தியின் ஆழம் எவ்வளவோ, அந்தளவுக்கு கடவுளின் அருள் நமக்கு விரைவில் கிடைக்கும்.

No comments:

Post a Comment