Thursday, April 3, 2014

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து

(தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)

1. சுவாமிக்கு நகைகளை அணிவித்து அழகு பார்க்கிறோம். இப்படி செய்வது வெறும் அழகு உணர்ச்சிக்காக மட்டுமா? அன்றி வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா?

பழங்காலத்து மன்னர்கள் தாங்களும் தங்கள் ...
மனைவிமார்களும் அணிந்திருந்த நவரத்தின அணிகலன்களைப் பொதுவுடைமையாகச் செய்தார்கள். தனியுடைமை என்றைக்கும் அழிந்து போகும். பொதுவுடைமை என்றைக்கும் இருக்கும். நளச் சக்கரவர்த்தி தான் அணிந்திருந்த அணிகலனை கொல்லூர் மூகாம்பிகைக்கு அணிவித்து இருக்கிறான்.

நளச் சக்கரவர்த்தி எந்த காலத்தில் வாழ்ந்தானோ! அவன் இன்று இல்லை. ஆனால் அவன் இட்ட அணிகலன்கள் இன்றும் இருக்கின்றன. ஆகவே, மன்னர்கள் தமக்குச் சொந்தமாய் இருந்த தனிவுடமையை பொது உடைமைகளாக செய்தவைகள் தான் அணிகலன்கள்.

மேலும், ஒருவன் தன் மனைவி, அணிகலன்களை அணிந்து இருந்தால் ஒருவரும் பார்க்க இசைய மாட்டான். இறைவிக்கு அணிவித்து இருந்தால் யாரும் தரிசித்து மகிழலாம் அல்லவா ?

2. இறைவனுக்கு வேர்ப்பதில்லை. ஆனால் வெண் சாமரம் வீசுகிறோம். அவனுக்கு எந்த அழுக்கும் சேர்வதில்லை. ஆனால் அவனுக்கு அபிஷேகம் செய்கிறோம். அனைத்து உயிரினங்களுக்கும் உணவு அளிப்பவன் இறைவன். அவனுக்கு நிவேதனம் புரிகிறோம். இவை எல்லாம் தேவை தானா சுவாமி?

வேரிலே தண்ணீர் விட்டால் மரங்களுக்கெல்லாம் போகும். அப்படி இறைவன் எல்லாவற்றிலும் உறைகிறான்.

"உரைசேரும் எண்பத்து நான்கு நூறு
ஆயிரமாம் யோனி பேத
நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்கு உயிராய்
அங்கங்கே நின்றான்" என்பார் ஞான சம்பந்தப் பெருமான்.

எனவே, இலைகளுக்கு தண்ணீர் விட்டால் வேருக்குப் போகாது. வேருக்குத் தண்ணீர் விட்டால் விருட்சம் முழுதும் பரவும். அவ்வாறு இறைவனுக்கு நாம் ஒரு பொருளை அபிஷேகம் செய்கிற பொழுது அகில உலகிற்கும் அந்த பலன்போய் நன்மை செய்கிறது.

ஆகவே, இறைவனுக்குச் செய்வதெல்லாம் உயிர்களுக்குச் செய்வது போல். அதனால் தான் அபிஷேக ஆராதனைகளை எல்லாம் நம் முன்னோர்கள் வைத்தனர்.

No comments:

Post a Comment