Saturday, April 12, 2014

குருக்ஷேத்திர போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகளின் பின்

குருக்ஷேத்திர போர் முடிந்து முப்பத்தாறு ஆண்டுகள் ஆயின. குரு வம்சம் அழிந்ததை போலக் கண்ணனின் விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்தது. அதனை அறிவிப்பது போல மோசமான சில அறிகுறிகள் தோன்றின. புழுதி காற்று உலகையே மூடிவிட்டது போல தோற்றம் அளித்தது. ஆங்காங்கே இயற்க்கை சீற்றங்களும், இயற்க்கை அழிவையை அரங்கேற்றி கொண்டிருந்தது. விண்ணிலிருந்து நட்சத்திரங்கள் கரிக்கட்டையாய் விழுந்தன. சூரியன் ஒளி குறைந்தவனாய் காட்சியளித்தான். எங்கும் மக்களிடம் குழப்பமும், அச்சமுமாய் இருந்தது. ஆடம்பரமும் தற்பெருமையும் கொண்ட விருஷ்ணிகளின் வீழ்ச்சி நெருங்கி விட்டது. இந்த சூழலை மேலும் மோசமாக மாற்றும் படி மற்றும் ஒரு சம்பவமும் நடந்தேறியது...
ஒரு சமயம் கோபத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் பெரிதும் அறியப்பட்ட விஸ்வாமித்திரரும், தவ வலிமைக்கு அறியப்பட்ட கண்வரும், முக்காலமும் அறிந்த முனி என்று போற்றப்பட்ட நாரதரும் துவாரகைக்கு வந்தனர். விருந்தினராக வந்த அந்த முனிவர்களை பக்தி பூர்வமாக வரவேற்று உபசரித்திருக்க வேண்டும். ஆனால் ஆணவம் தலைக்கேறிய விருஷ்ணிகள் அலட்சியமாக அம்முனிவர்களிடம் நடந்துக் கொண்டனர். மரியாதையும் தர வில்லை, அவர்களின் வருகையை அங்கீகரிக்கவும் இல்லை. மாறாக கேலியும், கிண்டலுமாய் அவர்களிடம் பேசினர். அவர்களின் சக்திகளையும் திறனையும் சோதித்து விளையாடினார்கள். விதி வலியது. அவர்களின் முடிவை அவர்களே தேர்ந்தேதுத்தார்கள். ஓர் ஆடவனுக்கு அழகிய பெண் வேடமிட்டு, அம்முனிவர்களிடம் அழைத்து சென்று “இவளுக்கு ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?” என கேட்டு நகைத்தனர்.
கந்தல் துணிகளையும் இரும்பு துண்டுகளையும் சேர்த்து மூட்டையாக வயிற்றில் கட்டிக் கர்ப்பிணி பெண்ணாக காட்சி அளித்த ஆடவனை கண்ட அவர்கள் சினம் கொண்டனர். சபித்தனர். அந்த சாபம் இவர்களின் முடிவிற்கு விதையானது. “இவன் ஒரு இரும்பு உலக்கையை பெற்றெடுப்பான். அந்த உலக்கையால் கண்ணனும், பலராமனும் தவிர விருஷ்ணி குலம் முழுதும் நாசம் அடையும்” எனச் சாபம் இட்டனர். முனிவர்களின் சாபத்தை கேட்ட விருஷ்ணிகள் பயந்து பலராமனிடமும், கண்ணனிடமும் நடந்ததை கூறி காப்பாற்றும் படி முறையிட்டனர். வர்ஷிணிகள் மீது கடும் சினம் கொண்ட பலராமர், கோபத்தின் உச்சிக்கே சென்றார். தேவாதி தேவர்களும் மதித்து போற்றும் மாமுனிவர்களிடம் தன் வம்சத்து மக்கள் நடந்து கொண்ட விதத்தால் மிகவும் வேதனையுற்றார். இந்த சம்பவத்தை கேட்ட உடனே கிருஷ்ணருக்கு இனி நடக்கவிருப்பது என்ன என்று விளங்கியது. பின்னர் கிருஷ்ணரின் யோசனைப்படி, அந்த போலி கர்பிணி வேடம் தகித்த ஆண்மகனின் வயிற்றில் கட்டி வைத்திருந்த இரும்புத்துண்டுகளை நன்றாக தூள் தூளாக்கி கடலில் போடுமாறு பலராமன் அவர்களுக்கு ஆலோசனை கூறினார். விருஷ்ணி இளைஞர்களும் அப்படியேச் செய்தனர். தங்களுக்கு நேர இருந்த ஆபத்து நீங்கியதாக நினைத்தனர். ஆபத்து நீங்கிய மகிழ்ச்சியில் மீண்டும் அவர்கள் அதர்மத்தையே தொடர்ந்தனர். சிறிதளவும் பாவங்களுக்கு அஞ்சவில்லை. இனி ஆபத்து இல்லை என்று அராவரம் செய்து வந்தனர்.
ஆனால்.... பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மனநிலை வேறாக இருந்தது. முன்னொரு சமயம் குருக்ஷேத்திர போரில் தன் மக்களை பறிகொடுத்த காந்தாரி தமக்கு இட்ட சாபத்தை நினைத்தார். “நீ நினைத்திருந்தால் குருகுல நாசத்தை தடுத்திருக்கலாம். ஆனால் நீ அவ்வாறு செய்யவில்லை. எனவே குருவம்சம் அழிந்தது போல, உன் விருஷ்ணி வம்சமும் அழியட்டும்” என்று அவள் இட்ட சாபத்தை எண்ணி தமது விருஷ்ணி வம்சமும் அழியும் காலம் வந்துவிட்டதை உணர்ந்தார். பரந்தாமன் வர இருக்கும் ஆபத்தை மாற்ற விரும்பவில்லை. காலத்தின் இயல்பு அது. விருஷ்ணிகளின் ஒழுக்கக்கேடு வரம்பு மீறிச் சென்றது. ஆணவமும், ஆடம்பரமும் அளவு கடந்து சென்றன. பலராமனையும், கண்ணனையும் தவிர மற்ற எல்லாரையும் அவர்கள் அவமானப் படுத்தினர். ஐம்புல இன்பங்களில் எல்லை மீறி சென்றனர். குறிப்பாகக் காம களியாட்டத்தில் பெரிதும் ஈடுபட்டனர். கணவன் மனைவிக்கும், மனைவி கணவனுக்கும் துரோகம் செய்தனர். இறையாண்மை என்பது கேள்விக்குறியானது. பக்தி குறைந்து. கடவுள் எதிர்ப்பாளர்கள் அதிகமாகி கொண்டே சென்றனர். வேதங்களையும், வேத வல்லுனர்களையும் இகழ்ந்தனர். இவ்வாறு காலம் விரைந்து கொண்டிருக்கும்போது......
கிருஷ்ணரும் பலராமரும் தனியே கருத்துகளை பகிர்ந்து கொண்டிருந்தனர். திடீரென்று கிருஷ்ணர் மௌனம் ஆனார். ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். பலராமர் பல முறை அழைத்தும் அவரின் சிந்தனை ஓயவில்லை. தனக்கு தானே மெல்லிய புன்னகை செய்து கொண்டு அண்ணன் பலராமரை நோக்கினார்... “அண்ணா, என் ஸ்ரீ ராமர் அவதாரத்தில், எனக்கு இளையவனாக பிறந்து, எனக்கு கீழ்படிந்து, பல இன்னல்களை சந்தித்து, எனக்கு சேவை செய்தீர்கள். அதற்கு கைமாறாக தான் உங்களை எனக்கு மூத்தவனாக அவதரிக்க வைத்து, நான் உங்களுக்கு சேவை செய்து வந்தேன் என்பது நாம் இருவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். என் சேவைகளை நான் இது வரைக்கும் சரியாக செய்தேனா அண்ணா? உங்களுக்கு இது நாள் வரை நான் கொடுத்து வந்த மரியாதையிலும், பாசத்திலும் ஏதேனும் குறை கண்டீர்களா அண்ணா? அவ்வாறு ஏதேனும் குறை இருந்திருந்தால் என்னை மன்னித்து அருளுங்கள் ஆதிஷேசனே.” என்று உருகினார். இதை கேட்ட பலராமர், பாற்கடல் நாயகனை ஆரத்தழுவி, “உன்னில் குறை காண்பதா?, மாசற்ற பொருள் ஒன்று உள்ளது என்றால். மூவுலகத்திலும் அது நீ தான் கிருஷ்ணா. உன்னை குறை கூறுவதா? இனி எனக்கு எந்த பிறவியும் தேவை இல்லை. உன்னோடு சேர்ந்து அவதரித்த இந்த பிறவியே என் கடைசி பிரவியாகட்டும்.” என்று கண்ணீருடன் கூறினார்.
மேலும் கிருஷ்ணர் “யசோதை தாயும், ரோகினி தாயும் நம்மை எப்படி எல்லாம் வளர்த்தார்கள் என்பதை நினைத்து பார்கையில், நாம் மீண்டும் இவர்களுக்கு பிறக்க வேண்டும் என்றே தோன்றுகிறது அண்ணா” என்று கூறி, யசோதைக்கு நன்றிகளை தெரிவித்தார். பின்பு பாலராமரிடம், அண்ணா நம் துவாரகை நகரம் மூவுலகத்திலும் மிகவும் அழகானது என்று அறிந்திருந்தும், இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட நாம் அதை முழுமையாக சுற்றி பார்த்தது இல்லை. வாருங்கள் அண்ணா நகர உலா சென்று வருவோம்” என்று அழைத்தார். கிருஷ்ணரின் இந்த உருக்கமான உரையாடலையும், நகர உலா அழைப்பையும் பாலராமரால் அப்போது புரிந்துகொள்ள முடியவில்லை. கிருஷ்ணனின் லீலை அறிந்தவன் அவன் மட்டும் தானே...!!! இருவரும் குழந்தை கிருஷ்ணனாகவும், குழந்தை பலராமனாகவும் துவாரகையை சுற்றி திரிந்தனர். மரங்களில் இருந்து கனிகளை உண்டு மகிழ்ந்தனர். நீர் நிலைகளில் தாகம் தணித்தனர். உற்சாகத்தோடு அரண்மனை திரும்பும் போது, தங்கள் அரம்ணனை அழகில் மீண்டும் ஒரு முறை மூழ்கினார்கள். விஸ்வ கர்மாவை அழைத்து வெகு நேரம் பாராட்டி பரிசுகளை வழங்கி வழி அனுப்பினார் பரந்தாமன். பின்பு நீண்ட தியானத்தில் மூழ்கினார் பகவான்.
சாபம் பலிக்கும் காலமும் வந்தது. கடலுக்குள் போடப்பட்ட இரும்பு தூள்கள் கரையோரத்தில் ஒதுங்கி அதில் இருக்கும் கனிம வளங்களால் நாணல்களாக வளர்ந்திருந்தன. அந்த நாணல்கள் சிறிது காலத்தில் உலக்கை போன்று தடித்து, உறுதியாக மாறி இருந்தன. குடித்து விட்டு கேளிக்கைகளில் ஈடுபட்ட விருஷ்ணிகள் அக்குடிவெறியில் ஒருவரோடு ஒருவர் சர்ச்சையில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் அடிக்க தொடங்கினர். கடற்கரையில் வளர்ந்திருந்த நாணல்கள் அனைத்தும் முனிவர்கள் இட்ட சாபத்தால் உலக்கைகளாக மாறியிருந்தன. விருஷ்ணிகள் உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டனர். தந்தையென்றும், மகன் என்றும் உறவு என்றும் பாராது கடுமையாக இரும்பு உலக்கையால் அடித்து கொண்டு மாண்டனர்.
காலத்தின் போக்கை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் கண்ணன். இவை அனைத்தும் அவர் கண் முன்னே நடந்தேறியது. மண்ணுலகில் தன் வேலை முடிந்து விட்டது என எண்ணினார். பலராமன் தன் உடலை ஒழித்து விட்டு, ஆத்மாவாக சொர்கலோகத்தில் ஐக்கியமானார். கண்ணனும் தன் உடலை மாய்க்க கருதினார். காந்தாரி முன்னர் இட்ட சாபத்தை மீண்டும் நினைத்து பார்த்தார். இப்போது தமது உத்தம உலகை அடையும் நேரம் வந்துவிட்டது என உணர்ந்தார். காட்டிற்கு சென்றார். யோகத்தை மேற்கொண்டார். தவத்தில் மூழ்கினார். கண்ணன் ஐம்புலன்களையும் அடக்கி யோக நித்திரையில் ஆழ்ந்தார்.
மேக சியாமள வண்ணம் கொண்ட திருமேனியில் பட்டு வஸ்திரங்களும், மார்பில் ஸ்ரீவஸ்த மருவும், கௌஸ்துப மணியும் துலங்க, தாமரை கண்களும், புன்முறுவலாக திவ்ய மங்கள மூர்த்தியாய் யோகத்தில் அமர்ந்தார். அப்போது சரன் என்னும் வேடுவன் அங்கு வந்தான். பகவானின் பாத கமலத்தை, மானின் முகம் என்று எண்ணி, அம்பெய்தான். சரனின் குறி தவறவில்லை. மானை வீழ்த்தியதாக எண்ணி அருகில் வந்த ஜரன், அதிர்ந்தான். திகைத்து நின்ற அவன், தவறிழைத்து விட்டோம் என்று எண்ணி மனம் வருந்தினான். தன்னை மன்னிக்கும் படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்டி மன்றாடினான். அதற்க்கு ஸ்ரீ கிருஷ்ணர் ”வேடனே வருந்தாதே..!! எல்லாம் என் சித்தப்படியே நடந்தது. நீ செய்த இந்த காரியத்தால் சொர்க்கம் அடைவாய். புண்ணிய லோகம் செல்வாய்” என்று வரம் அளித்தார். இதை கேட்ட ஜரன் பரந்தாமனை வணங்கி அதே இடத்தில் தன் உயிரை மாய்த்துக்கொண்டு, சொர்க்கம் அடைந்தான்.
இதை தொடர்ந்து அங்கே ஒரு அதிசயம் நடந்தேறியது..... கருடக்கொடியுடன் எட்டு குதிரைகள் கொண்ட ஒரு ரதமும், அதை தொடர்ந்து பகவானின் திவ்ய ஆயுதங்களும் விண்ணோக்கி எழுந்து, விண்ணுலகம் அடைந்தது... இந்த நிகழ்சிகள் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த ஸ்ரீ கிருஷ்ணரின் தேரோட்டி தாருகன், வியப்பில் ஆழ்ந்தான். தன் கண் முன்னே நடந்து கொண்டிருப்பதை நம்ப முடியாமல் திணறி நின்றான். கிருஷ்ணர் “தாருகா நீ காண்பது அனைத்தும் என் யோக மாயையின் செயலே. நான் வைகுண்டம் அடைந்த செய்தியை என் உறவினர்களுக்கு சொல்... அர்ஜுனனின் உதவியோடு நாட்டு மக்கள் அனைவரும் இந்திரப்ரஸ்தம் செல்லுங்கள்” என்று பணித்தார். தாருகனும் பகவானின் கடைசி கட்டளையை நிறைவேற்ற விரைந்தான் கண்கள் ஈரமாக. தாருகன் சென்றதும், பிரம்மன், பார்வதி – பரமேஸ்வரன், இந்திராதி தேவர்களும், மஹா ரிஷிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். தேவர்கள் மலர் தூவ, விண்ணுலக கிண்ணரர்கள் பகவானின் மகிமையை கானம் செய்ய, வைகுண்டத்திற்கு எழுந்தருளினார். முனிவர்கள் தொழ..ஜோதி உலகு எங்கும் பரவி ஆகாயம் நோக்கி செல்ல தம் உலகை அடைந்தார் கண்ணன். அவரை அங்கு இந்திரனும், அஸ்வினி தேவர்களும், ருத்ரர்களும், வசுக்களும், சித்தர்களும், முனிவர்களும் தாழ்ந்து பணிந்து வரவேற்றனர்.
“யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத
அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்
பவித்ரானாய சாதூனாம் வினாஷாய சதுஷ்க்ருதாம்
தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே..!! யுகே...!!!”
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
தமிழாக்கம்:
“எப்போதெல்லாம் தர்மம் குறைந்து அதர்மம் ஓங்குகின்றதோ.. அப்போதெல்லாம் நான் ஓர் ஆன்மாவை உருபெறச்செய்கின்றேன். நல்லவர்களை பாதுகாக்கவும் தீயவர்களை அழித்திடவும் தர்மத்தை ஸ்தாபித்திடவும் யுகத்திற்கு யுகம் நான் மீண்டும் மீண்டும் அவதரிப்பேன்.”
- பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் பூலோகத்தில் புனிதமாக நிறைவடைந்தது...ஓம் நமோ பகவதே வாசுதேவாய மங்களம்...!!!
தாருகன் அஸ்தினாபுரம் சென்று விருஷ்ணிகளும், போஜர்களும், அந்தகர்களும் மாண்ட செய்தியை தெரிவித்தான். உலக்கையால் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு இறந்தனர் என்ற செய்தி அறிந்து அஸ்தினாபுரம் திடுக்கிட்டது. கண்ணனைக் காணலாம் என்று வந்த அர்ச்சுனன் ஏமாற்றம் அடைந்தான். அவன் அங்கு வரும் முன் பரமாத்மா தனது உலகமான வைகுண்டத்தை அடைந்து விட்டார். துவாரகை மயான பூமியாய் காட்சி அளித்தது.
கண்ணன் இல்லாத துவாரகையையும், கணவனை இழந்து துடிக்கும் பெண்களையும் கண்ட அர்ச்சுனன் மயங்கி வீழ்ந்தான். பார்த்தனை பார்த்த ருக்மணியும் சத்யபாமாவும் 'ஓ' வென கதறி அழுதனர். மயங்கி வீழ்ந்தவன் மயக்கம் தெளிந்ததும் யாவரும் ஒன்றும் பேசாது மௌனமாக நின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஆறுதல் கூறிய அர்ச்சுனன் அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பை தான் ஏற்று கொண்டான். பலராமர், கண்ணன் ஆகியோர் சடலங்களை கண்டெடுத்து எரியூட்டி ஈமச் சடங்குகளை முறையாக செய்து முடித்தான். அனாதைகளாகிவிட்ட பெண்களையும், குழந்தைகளையும் அழைத்து கொண்டு அர்ச்சுனன் அஸ்தினாபுரம் சென்றான். அவர்கள் துவாரகையை விட்டு சென்றதும், துவாரகை கடலில் மூழ்கியது. அர்ச்சுனனும் உடன் சென்ற மகளிரும் செல்ல செல்ல அவர்கள் நீங்கிய நகரங்களும் கிராமங்களும் கடலால் கொள்ளப்பட்டன.
அர்ச்சுனன் அத்தனை பெண்களையும், குழந்தைகளையும் அழைத்து செல்வதை கண்ட திருடர்களுக்கு பேராசை உண்டாயிற்று. அவர்கள் ஆயிர கணக்கில் அவர்களை வழிமறித்து தாக்கினர். திருடர்களின் துணிச்சலை கண்டு அர்ச்சுனன் நகைத்தான். “உயிரின் மீது உங்களுக்கு ஆசை இருக்குமாயின் ஓடி விடுங்கள். இல்லையேல் எனது அம்பினால் கொன்றுவிடுவேன்” என எச்சரிக்கை செய்தான். ஆனால் திருடர்கள் அதை பொருட்படுத்தவில்லை. பெண்களை மறித்துச் சூறையாடினர். சினம் கொண்ட அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லை எடுத்து நாண் ஏற்றி அம்பு தொடுக்க விறைந்தான். ஆனால்.....காண்டீபம் செயலிழந்துவிட்டிருந்தது. கற்ற மந்திரங்களும் நினைவுக்கு வரவில்லை. கற்ற கல்வியும் கேள்வியும் கடலில் கரைத்த காயம் போலாகின. “வில்லுக்கு விஜயன்” என்ற பெயர் போய்விட்டதோ என கலங்கினான். காண்டீபம் செயலிழந்ததும், அம்பறாத் துணியில் அம்புகளும் இல்லையாகின. யாவும் விதியின் பயன் என உணர்ந்தான். இந்நிலையில் ஏராளமான பெண்களை திருடர்கள் கவர்ந்து சென்றனர். பெரு முயற்சி செய்து எஞ்சியவர்களைக் காத்தான். அவர்களை பொருத்தமான இடத்திலிருக்க செய்தான். ருக்மணி அக்கினி பிரவேசம் செய்தாள். சத்தியபாமையும் வேறு சிலரும் வனம் சென்று தவ வாழ்க்கை மெற்கொண்டனர்.
கண்ணீரும் கம்பலையுமாய் அர்ச்சுனன் வியாசரை காண சென்றான். கண்ணனை பிரிந்தது, ஐந்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் உலக்கையால் அடித்து கொண்டு மடிந்தது எல்லாவற்ரையும் கூறி அழுது புலம்பினான். வியாசர் அர்ச்சுனனுக்கு ஆறுதல் சொன்னார், பின் "அர்ஜுனா...!! இறந்து போனவர்களைப் பற்றி கவலைப்படாதே. தெய்வ அம்சம் கொண்ட அவர்கள் கடமை முடிந்தது. அதனால் அவர்கள் ஆயுளும் முடிந்தது. இப்படி நடக்க வேண்டும் என்ற சாபம் அவர்களுக்கு இருந்தது. எல்லோரையும் ரட்சிக்கும் கண்ணன் நினைத்திருந்தால் இந்த அழிவை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். ஆனால் அவரே இந்த முடிவை அங்கீகரித்து விட்டதாகவே நினை. உன் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் உனக்கு வழிகாட்டிய பரமாத்மாவும் தமது கடமை முடிந்தது எனக் கருதி தமது உலகை அடைந்து விட்டார். நீயும் உன் சகோதரர்களும் ஆற்ற வேண்டிய அருஞ்செயலை தெய்வ சம்மதத்துடன் செய்து முடித்து விட்டீர்கள். பூமித்தாயின் பாரம் உங்களால் குறைந்தது. கடமையை நிறைவேற்றிய உங்கள் காலமும் முடிவடையும் நேரம் வந்து விட்டது. இந்த நில உலக வாழ்க்கையை துறந்து நல்ல கதியை அடைய உன் சகோதரருடன் புறப்படுவாயாக" என்றார்.
கருத்து மிக்க வியாசரின் இந்த நல்லுரையைக் கேட்ட அர்ஜுனன்.. தன் சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தான்..

No comments:

Post a Comment