Tuesday, July 8, 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 1 --------- 5

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 1

நம் உள்ளத்தில் பல ஐயங்கள் இருக்கின்றன. ஐயம் தெளிந்தால் எல்லாவகையிலும் நல்லது. இளைய தலைமுறையினர், தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களைப் பெற்றோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். உதாரணமாக, நாம் நெற்றியில் திருமண், திலகம் ஏன் இட்டுக் கொள்கிறோம் என்பது போன்ற கேள்விகள். அந்தக் கேள்விக்கு உரிய சந்தேகங்களை ஒருவர் இன்னொருவருக்கு தெளிவுபடுத்தும் போது, அந்தச் செயல்களின் நன்மையறிந்து நாம் நம்பிச் செய்கிறோம்.

சனாதன தர்மம் (இந்து மதம்) துவக்கம் தெரியாத மதம். இங்கே உருவ வழிபாடு ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாவம், புண்ணியம், போன பிறவி, இந்தப் பிறவி, ராமன், கண்ணன் என்று எத்தனையோ அடிப்படைக் கொள்கைகள் இங்கே இருக்கின்றன. சனாதன தர்மம் வாழும் மண்ணில் பிறந்ததால் நாம் பாக்கியவான்கள்.

தெய்வ உருவங்கள் கோயில்களில் உள்ளன. ஏன் இந்த வழிபாடு? நாம் தானே கல், மண், தங்கம், வெள்ளி வாங்கிக்கொடுத்து இந்த உருவங்களை உருவாக்கச் சொன்னோம்! ஆனால், நிஜமான தெய்வம் எங்கோ உள்ளாரே! அங்கே இருக்கும் நிஜத்தை வணங்குவதை விட்டுவிட்டு, இங்கிருக்கும் உருவத்தை வணங்குவதால் என்ன பயன்? அந்த உருவங்கள் 16 அடி, ஒன்றரை அடி என்று கூடியும், குறைவாகவும் உள்ளதே! 

சரி...இதை வழிபட்டால் என்ன லாபம்! வழிபடாவிட்டால் என்ன நஷ்டம்! இவை பற்றியெல்லாம் நாம் கேட்க வேண்டும். கேட்பதை விட படிப்பது இன்னும் நல்லது. மாடு வேகமாகச் சாப்பிடும். பிறகு, வாய்க்கு திரும்பக்கொண்டு வந்து அசை போடும். அதுபோல, நீங்களும் இவற்றைப் படிக்க வேண்டும். மீண்டும் மனதிற்கு கொண்டு வந்து அசை போட வேண்டும். அப்போது தான் நம் மனதில் இந்த விஷயங்கள் ஆழமாகப் பதியும்.

நம்மாழ்வார் பிறந்த ஸ்தலம் ஆழ்வார்திருநகரி. இங்கே பெருமாள், "பொலிந்து நின்ற பிரான்' என்ற பெயரில் இருக்கிறார். உருவம் இருப்பதால் தான் பொலிவு என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடிகிறது. ஆம்...அவர் பொலிவாக, அழகாக இருக்கிறார். 

அருவத்துக்கு ஏது பொலிவு?

""நின்ற, கிடந்த, அமர்ந்த, விக்ரமனாக, மாடு மேய்க்கும் கண்ணனாக, தண்ணீரில் நடனம் புரிபவனாக...இப்படி எத்தனையோ உருவங்களில் பெருமாளைப் பார்க்கிறோம். வைகுண்டப் பெருமானுக்கு இங்குள்ள சிலை போல் மதிப்புண்டா?'' என்று ஆழ்வார் கேட்கிறார்.

நமக்கு பக்கத்தில் உள்ளவருக்கு உரிய பெருமை வைகுந்தநாதனுக்கு கூட கிடையாது. அவர் எப்பேர்பட்டவரோ? இங்குள்ள உருவத்தை எளிதாகப் பார்த்து விடலாம். ஆனால், வைகுந்த நாதனைப் பார்க்க வேண்டுமானால் முக்தியடைந்து அங்கே போக முடியுமா? கையில் இருக்கும் மோர் சாதம் பெரிதா? நெய்யும், சர்க்கரையும் கலந்து தயாரிக்கும் அக்கார அடிசில் பெரிதா? தயிர் சாதம் நம் அருகிலுள்ள பெருமாள், அக்கார அடிசில் வைகுந்தத்தில் இருக்கிற பெருமாள். இப்போது நினைத்தாலும் வீட்டில் மோர்சாதம் தயாரித்து விடலாம். அதாவது, அருகில் இருக்கிற பெருமாள் கோயிலுக்குப் போய் விடலாம். வைகுந்தத்திற்கு நினைத்த மாத்திரத்தில் செல்ல முடியுமா? அதற்காக, வைகுந்தம் என்பது உண்மையில்லை என்றில்லை. எங்கோ இருக்கிற பெருமாளைக் காட்டிலும் இங்கே இருப்பவருக்கே பெருமை.

இன்னும் சொல்லப்போனால், கோயில் பெருமாளை விட வீட்டுப்பெருமாளுக்கு மதிப்பு அதிகம் தர வேண்டும். ஆனால், நாம் அதைச் செய்வதில்லை. துவாரகை வரை போய் பெருமாள் சிலை வாங்கி வந்திருப்போம். ஆனால், வீட்டில் பூஜை சரிவர நடக்காது. வீட்டுப்பூஜை ஒழுங்காக நடக்க வேண்டும். வீட்டுப்பூஜை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைத்துள்ள வரப்பிரசாதம்.

அவர் நமக்காகவே உருவமெடுத்துள்ளார். நமது பாவங்களைத் தொலைக்க, உயர்ந்த சிந்தனை பெற, காமம், மதம், மாச்சர்யம் நீங்க உருவ வழிபாடு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது. நாம் சுகமாக வாழ உருவம். அது வேண்டாம் என்றால் அருவம். மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம் என்று ஆயிரக்கணக்கான உருவங்கள் அவனுக்கு உள்ளன அல்லவா! அதுபோல் அருவம் என்பதும் ஒரு நிலையே. 

அதற்காக அருவம் தான் நிலையானது என்று சொல்லக்கூடாது. உருவத்தோடு இருந்தால் தான், அவர் நம் புத்திக்கு எட்டுவார்.

அருவத்தை தியானிக்க நாம் ஒன்றும் யோகி இல்லை. அப்படி யாராவது தியானிப்பதாகச் சொன்னால் அது பொய்.

வால்மீகி, பரத்வாஜர் போன்ற ஞானிகளே உருவத்தை ஒப்புக்கொள்ளும்போது, நாம் சாதாரண ஆள். வேதாந்த தேசிகன், ""உருவம் இருந்தால் என்னால் அவனைப் பிடிக்க முடியும்,'' என்கிறார்.

இப்போது, கோயிலுக்கு கூட்டம் அதிகம் வருகிறது. இதற்கு காரணம் பயம் அல்லது பிரியம். கடவுளைக் கண்டு பயப்படுபவன் ஆஸ்திகன் அல்ல. அவர் மீது அன்பு கொண்டவனே நிஜமான ஆஸ்திகன். பெற்றோரைக் கண்டு பிள்ளை பயப்படுவதில்லை. அதுபோல் அவன் என் பெற்றோர் போல! 

அவனைப் பயமின்றி ராஜாவாக, குழந்தையாக, யானையாக, இளவரசனாக பல உருவங்களில் பூஜிக்க வேண்டும்.

சிலர் உருவவழிபாடு கூடாது என்கிறார்கள். இவர்களுக்கு வரும் ஐயம் என்னவென்றால், கடவுளுக்கு உருவம் உண்டு என்று வேதங்கள் கூறுகிறதா? அல்லது நாமே சொல்கிறோமா என்பது தான் அந்த சந்தேகம்.
இதற்கு என்ன பதில் தெரியுமா? உருவம் உண்டு என்றும் சொல்கிறது, இல்லை என்றும் சொல்கிறது. இதென்ன குழப்பம் என்று தோன்றுகிறது.

ஒருவர் இன்னொருவரிடம், ""பிள்ளையாண்டான் படிக்கிறானா?'' என்கிறார். அதற்கு அவர், ""எங்கே படிக்கிறான், எட்டு மணி நேரம் படிக்க வேண்டியதை மூன்று மணி நேரம் படிக்கிறான்,'' என்பார். அதாவது அவன் படிக்கிறான் என்பதும் உண்மை, ஆனால், போதுமான நேரம் படிக்கவில்லை என்பதும் உண்மை. இப்படித்தான் வேதமும், கடவுளுக்கு உருவம் உண்டு என்றும் சொல்கிறது, இல்லை என்றும் சொல்கிறது.

""அந்தக் கடவுளை அதோ அங்கு பார்த்தேன். சூரியனுக்குள் பார்த்தேன். பொன்மயமான ஒளிபடைத்த உருவத்தைப் பார்த்தேன். கண்களில் தாமரையைக் கண்டேன், கால்நகம் முதல் திருமுடி வரை பொன்மயமாய் ஒளிர்ந்ததைக் கண்டேன். குழலகராய் பார்த்தேன். மீசையோடு கண்டேன். அனைத்தும் அழகு..அழகு... இப்பேர்ப்பட்ட உருவத்தைக் கண்டேன்!'' என்று பெருமாளை வேதம் வர்ணிக்கிறது. அதாவது உருவம் உண்டு என்றும் வேதம் சொல்கிறது, இல்லை என்றும் சொல்கிறது. 

அப்படியானால் இந்த குழப்பத்திற்கு என்னதான் தீர்வு?



ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 2

பகவானுக்கு உருவம் இருக்கிறது என்றும், இல்லை என்றும் வேதம் சொன்னாலும், "இருக்கு' என்று ஒத்துக்கொண்டால் ஸனாதன தர்மம் (இந்துமதம்) பிழைத்தது. ஏனெனில், நான் 200 நாள் உங்களிடம் தொடர்ந்து பேசி, பகவானுக்கு உருவமில்லை என்றாலும், நீங்கள் ஒத்துக்கொள்ள மாட்டீர்கள். ஏன்...வேதமே சொன்னாலும் கூட நம்பமாட்டீர்கள். ஏனெனில், உருவம் என்ற ஒன்று நம் மனதில் பதிந்து போன ஒன்று.
அதனால் தான் அவனை ஆறடி, நாலடி, ஒன்றரை அடி என்றெல்லாம் சுருக்கி வைத்திருக்கிறோம். புளியோதரை, உப்பில்லாதது, கனிஞ்ச பழம், காய்ந்த பூ இதையெல்லாம் கொடுக்கிறாய். ஆனால், இதெல்லாம் அந்த பகவானுக்கு தேவையா என்றால்.. இல்லை! இவை இல்லாமலே அவன் ஆனந்தமாக இருப்பான். ஆனால், நாம் அப்படியில்லையே!

இதையெல்லாம் அவனுக்கு நைவேத்யம் செய்து சாப்பிட்டால் தான் நமக்கு ஆனந்தம். வெள்ளையடிக்க ஏணி வேண்டும். வெள்ளையடிப்பவர் வீட்டுக்கு வந்து விட்டார். பக்கத்து வீட்டுக்காரருடன் நமக்கு ஆகாது. எனவே, வெள்ளையடிப்பவரிடம், ""எனக்கென்று சொல்லாமல், உன் தேவைக்காக வாங்குவது போல் கேள், அவர் தருவார். எனக்கென்று கேட்டால் தரமாட்டார்,'' என்று எச்சரித்து அனுப்புகிறார். வெள்ளையடிக்க வந்தவரும் போய் கேட்கிறார். ""அவர் யார் வீட்டுக்காக கேட்கிறாய்?'' என்கிறார். அவரோ, இவர் வீட்டைக் கை காட்ட "இல்லை' என்று சொல்லி விடுகிறார். அப்படியானால், ஏணி இருக்கிறது. அது உனக்கு இல்லை என்று தான் அவர் சொல்கிறார். அதற்காக, உலகத்திலேயே ஏணி இல்லை என்று சொல்லி விட முடியுமா?

அதுபோல் தான், பகவானுக்கு உருவம் இருக்கிறது. அது உன்னைப் போல் இல்லை என்று வேதம் சொல்கிறது.

""மனிதனாகிய உன்னைப் போல் என்னை நினைக்காதே. உன் உருவம் போல் என்னைக் கற்பனை செய்யாதே. உன் மூக்கு, காது போல் என் மூக்கும், காதும் இல்லை. உன் கண் போல என் கண் இல்லை,'' என்ற கருத்தில் தான் பிரம்மத்து உருவமில்லை என்று வேதம் சொல்கிறது.

அதனால் தான் "பிரம்ம சொரூபம்' (பிரம்மத்து உருவம் உண்டு) என்று சொல்கிறோம். அதாவது, உருவத்தை தாங்கி கண்ணுக்கு புலப்படாமல் இருப்பது என்று அர்த்தம். இன்னொரு வகையிலும் இதைப் பார்ப்போம்.

அடியேனின் ஆத்மாவை தாங்கி நிற்பது உடல். ஆக, உடம்பு பொய்யா? ஆத்மா பொய்யா? கண்ணுக்கு தெரிந்த உடம்பும் இருக்கிறது. தெரியாத ஆத்மாவும் இருக்கிறது. ஆக, இரண்டும் உண்மையே.

இப்படித்தான் பிரம்மத்துக்கு (பகவானுக்கு) உருவம் உண்டு என்றும் ஆகிறது, இல்லை என்றும் ஆகிறது. "நான்' என்ற ஆத்மாவுக்கு ஆறடி இல்லை. அதற்கு குலகோத்ரம் இல்லை. உடம்புக்கு தான் கோத்திரம் உள்ளது. ஒருவன் நம் மீது மோதி விட்டான். உடனே நாம் அவனை "கண்ணில்லையா?' என்று கேட்கிறோம். அதற்காக, அவனுக்கு கண்ணில்லை என்று ஆகி விடுமா! இருக்கிற ஒன்றை இல்லாததாக நாம் உருவகப்படுத்தி பேசுகிறோம் இல்லையா! கண் இருக்கிறது, ஆனால், அது செய்ய வேண்டிய வேலையைச் செய்யவில்லை என்பதே நிஜம்.

நாக்கு, மூக்கு, காது, இவை சுவைக்கிறது, முகர்கிறது, கேட்கிறது. இவையெல்லாம் நமக்கு இருக்கிறது. பகவானுக்கு இவையெல்லாம் இல்லை என்றாலும், அவர் சுவைப்பார், முகர்வார், கேட்பார், ஓடுவார்...எல்லாம் செய்வார்.

நமக்கு தான் உறுப்புகள் அவசியம் வேண்டும். அவை இல்லாமலே அவர் செயல்படுவார். 

கண்ணன் ஆவணி அஷ்டமியன்று பிறந்தார். வசுதேவர் கண்ணனைக் கண்டார். 32 பல், சந்திரனை ஒத்த புன்சிரிப்பு, சங்கு, சக்கரம், கதை, வில், கேடயம், வைஜயந்திமாலையெல்லாம் அவனிடம் இருந்தன. வெறும் கண்ணனைக் கண்டதாக சாத்திரம் சொல்கிறது. ஆனால், இதிகாசம்,
புராணங்களோ உருவமிருப்பதை ஒத்துக் கொள்கிறது.

இப்போது நிறைய இடங்களில் "யோகா கற்றுத்தரப்படும்' என போர்டு மாட்டி வைத்திருக்கிறார்கள். இதற்கென்று பதஞ்சலி யோக சூத்ரம் என்ற நூலே இருக்கிறது. அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தெல்லாம் நம் யோகா பற்றி அறிந்து கொள்ள வருகிறார்கள். அதன்பிறகு தான், நாம் யோகா பற்றி சுதாரித்துக் கொண்டிருக்கிறோம். எதற்குமே வெளிநாட்டுக்காரன் முக்கியத்துவம் கொடுத்தால், நாமும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். உள்ளூர் நாயனத்தின் பெருமை உள்ளூர்க்காரனுக்கு தெரிவதில்லை. அவன் எப்போதும் வாசிப்பவவன் தானே என்று விட்டு விடுகிறோம். அவனே, வெளியூர் போய் புகழடைந்த பிறகு தான், நம் ஊர்க்காரனிடம் இவ்வளவு விஷயம் இருந்ததா என்ற விஷயம் நமக்கே புரிகிறது.

யோகா வகுப்பிற்கு நீங்கள் சென்றதும் உங்களுக்கு முதலில் என்ன கற்றுத்தரப்படுகிறது என்றால், "சூன்யத்தில் மனது நிலைக்க வேண்டும்,வெற்றிடம் பற்றி நினையுங்கள், தியானம் செய்யுங்கள்,'' என்கிறார்கள்.

நீங்கள் எதுவுமே இல்லாத சூன்யத்தில் மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும் என 400 ஆண்டுகள் முயற்சித்தால் கூட அது முடியாது. ஏன்... ஒரு யோகியால் கூட அது முடியாது. அவராலேயே முடியாது என்கிற போது, சாதாரணமானவர்களான நம்மால் அது முடியுமா! எனவே, தியானத்தின் போது கூட ஒரு உருவத்தையே தியானிக்க வேண்டும். உருவத்தை நினைத்தால் தான் அதில் மனது லயிக்கும்.

பதஞ்சலி யோக சூத்ரத்தில் அஷ்டாங்க யோகம் பற்றி சொல்லப்படுகிறது. முதலில் யோகா வகுப்புக்குச் சென்றதும், "நிமிர்ந்து உட்காருங்கள்' என்பார்கள். நான் ஓரிடத்தில் பேசுகிறேன். நீங்களெல்லாம் இரண்டு மணிநேரம் தொடர்ந்து அமர்ந்து கேட்கிறீர்கள். பேச்சு என்னவோ பகவானைப் பற்றி சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது! அதற்காக, எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருக்க முடியும்! முட்டி வலிக்க ஆரம்பிக்கும், கால் மேல் காலை தூக்கிப் போடுவீர்கள்.

அங்குமிங்கும் அசைவீர்கள். பேச்சைக் கேட்பதை விட்டு மனம் விலகும். இதற்கே இப்படி என்றால், கண்ணைப் பொத்திக்கொண்டு, உருவமே இல்லாத ஒன்றில் மனதை லயிக்க விடுவது என்றால் சாமான்யமா?

அஷ்டாங்க யோகம் என்பது பற்றி உங்களுக்கு ஒருவேளை கற்றுத் தரப்பட்டிருக்கக் கூடும். யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், காரண, தியானம், சமாதி என்பவையே அந்த எட்டு நிலைகள். இவற்றை ஏதோ வார்த்தையளவில் உங்களுக்கு கற்றுத் தந்திருந்தாலும் கூட, இதற்குரிய விளக்கத்தை யோக ஆசிரியர்கள் உங்களுக்கு கற்றுத் தந்திருப்பார்களா என்பது கேள்விக்குறி. யோகம் செய்ய என்ன தகுதி வேண்டும் என்பதை முதல் வார்த்தையாகிய "யமம்' என்பது தெரிவிக்கிறது. "யமம்' என்றால் "உண்மை பேச வேண்டும், அகிம்சை, பிரம்மச்சரியத்தை கடைபிடிக்க வேண்டும், தேவையற்றதை விட வேண்டும், திருட்டு போன்ற தீய ஒழுக்கங்களை விட வேண்டும் என்பதெல்லாம் இதில் அடக்கம். இதில் ஒன்றாவது நம்மிடம் இருக்கிறதா! இது இருந்தால் தான் யோகம் செய்யவே நாம் தகுதியானவர்கள் ஆவோம். ஆக, முதல் படியிலேயே நாம் யோகம் செய்யத் தகுதியற்றவர்கள் ஆகி விடுவோம் என்பது உண்மை. நான் சொல்வது நிஜம் தானா என்று யோகா ஆசிரியர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

இதன்படி பார்த்தால், ஒரு பிராணியைத் தொடவே கூடாது, வெட்டுவது என்பது அப்புறம்...











ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 3

யோகா வகுப்புகளில் இனி "அகிம்சாவாதியாக இருந்தால் தான் கற்றுத்தரப்படும்' என போர்டு வையுங்கள். எத்தனை பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம்.

யோகா செய்ய வேண்டுமானால், தேவையற்றதை விட வேண்டும் என்பது இன்னொரு முக்கிய தகுதி. ஆனால், எல்லாமே நமக்கு வேண்டும், பரணிலுள்ள பழைய காகிதம் கூட வேண்டும் என்ற மனநிலை தானே இருக்கிறது!

அடுத்து ஆசனம்...அதாவது அமர்கிற கோலம். படுத்தால் யோகம் வருமா! தீர்க்க யோகம் (தூக்கம்) தான் வரும்.

பிரணாயாமம் என்றால் மூச்சுப்பயிற்சி. பிரத்யாகாரம் என்றால் மனதை பிரம்மத்தை நோக்கி இழுத்துக்கொண்டு வருதல். மனசு என்பது கையில் கிடைத்தால் தேவலை! அது கண்ணுக்குத் தெரியாது. ஆனால், அதை இழுத்தாகணும்! ஆன்மிகச் சொற்பொழிவுக்கு செல்லும் நீங்கள், மணி எட்டரையாச்சே!
சமையலாச்சோ இல்லையோ! வாசலில் செருப்பை விட்டு விட்டு வந்தோமே! இருக்குதோ இல்லையோ! இப்படி அலை பாயும். இப்படி ஓடுகிற மனசை இழுப்பது தான் பிரத்யாகாரம். ஒரு கூட்டத்திற்கு வந்தவர்களுக்கே இப்படி மனம் அலைபாய்கிறதென்றால், யோகாவில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு எவ்வளவு பெரிய சிரமம்!

அடுத்து தாரணா. தாரணா என்றால் கலசுகிற எண்ணங்களை விடுத்து புலனடக்கத்துடன் இருத்தல். (அலை பாய்கிற மனதை அடக்குதல்). யோகா செய்யும் போது தான், இரண்டு வருடங்களுக்கு நமக்கு வேண்டாதவர் ஒருவர் திட்டியது நினைவுக்கு வருகிறது.

துரியோதனன் கண்ணனைத் திட்டினான் இல்லையா! அது போல மனம் குழப்பத்துடன் தியானம் செய்கிறது. எனவே, இந்த வகை சிரமங்களின்றி உருவத்தோடு உள்ள பகவானையே தியானியுங்கள். மல்லாண்ட திண்தோள் மணிவண்ணனாக அவனை நினையுங்கள். மனம் ஒரு கலங்கிய கிணறு. கலங்கிய கிணற்று நீரை தெளிவாக்க தேத்தாங்கொட்டை, நெல்லிமுள்ளி கொட்டையை கிணற்றுக்குள் போடுவார்கள். நமக்கு பெருமாள் தான் தேத்தாங்கொட்டை. கலங்கிய மனதை அவர் தெளிவாக்கி விடுவார்.

அடுத்து தியானம். "தியானம்' என்றால் "கலசாத (அலைபாயாத) எண்ணத்துடன் தியானம் செய்வது. இதன் பிறகு கடைசியாகத் தான் சமாதி நிலை. அதாவது, உருவமே இல்லாத பிரம்மத்தை அனுபவித்தல். இதுதான் எட்டாம் நிலை. எவ்வளவு நிலைகளைக் கடந்து உருவமற்றதை சிந்திக்க வேண்டியிருக்கிறது! பள்ளி, பட்டப்படிப்பு முடித்த பின் முனைவராக வேண்டும். யோகா செய்பவர்கள், ஆரம்பத்திலேயே உருவமற்றதை மனதில் நிறுத்துகிறேன் என்ற பெயரில் அஷ்டாங்க யோகத்தில் எட்டவதான சமாதியில் எப்படி ஆழ முடியும்? முனைவர் பட்டத்திலிருந்து தலை கீழாக முதல்நிலைக்கு போவது போலல்லவா இது!

விஷ்ணு புராணத்தை பராசர மகரிஷி எழுதினார். அதில்,பகவானின் திவ்ய உருவம் பற்றி வர்ணிக்கிறார். ஒரு யோகி, பகவானின் உருவத்தை சிந்திக்க சிந்திக்க உன் அழுக்கெல்லாம் போய் விடும் என்கிறார். இதை விட்டு விட்டு, யோகாவின் போது உருவமற்றதை சிந்தித்தால் மனஓட்டத்தை தடுத்து நிறுத்துவது எப்படி சாத்தியம்? யோகம் என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? "எண்ண ஓட்டத்தை தடுத்தல்'. எண்ணங்களை தடுத்தல் என்றால் எல்லாவற்றையும் தடுத்தல் என்று அர்த்தமாகாது. எண்ணத்திலுள்ள கெட்டதைத் தடுத்தல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கெட்ட வார்த்தை பேசுகிறது வாய். அதற்காக வாயையே துண்டி என சொல்ல முடியுமா? நல்லதைப் பேசு, கண்ணால் நல்லதைப் பார். மனதால்
தப்பை விலக்கு, எண்ணத்தில் கோபம், பொறாமையை வளர்க்காதே என்று அர்த்தம் எடுக்க வேண்டும்.

யோகத்தின் கடைசி நிலையான சமாதி என்றால், ஏதோ கண்ணை மூடி தன்னையே மறந்து விடுவது என்பதல்ல. நமது கற்பனைகளை எல்லாம் வெட்டி விட்டு, அந்த சொரூபத்தை நினை என்று அர்த்தம் கொள்ள வேண்டும். மனம் நிர்மலமாக இருக்க பகவானை நினைக்க வேண்டும். ஆனால், தறி கெட்டு ஓடுகிற மனதை சமாதி நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா?

சிறிய வைரம் சிலரிடம் இருக்கும். அதை மெழுகு அல்லது வெல்வெட் துணியில் வைப்பர். அதில் வைரத்தை வைக்க ஒரு ஆதாரம் வேண்டும். அதாவது சாமணம் வேண்டும். அது போல, மிக நுண்ணியது மனது. அது கையில் அகப்படாததால், அதை பகவானிடம் லயிக்கச் செய்ய வேண்டுமே தவிர, மூக்கணாங்கயிறு போட்டு இழுத்தால் முடியாது.

நம் வீட்டு பெருமாளை, குலதெய்வத்தை பார்த்துக்கொண்டே இருங்கள். பிறகு மனதை அதில் லயிக்க விடுங்கள். அதன் அபரிமித அழகை நினைக்க நினைக்க மனம் கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும்.

""சரி... கடவுளுக்கு உருவமிருப்பதால் என்ன பயன்? இல்லாவிட்டால் என்ன பயன்?''. பகவானுக்கு சுண்டல், சர்க்கரைப் பொங்கல், நைவேத்யம் செய்து சாப்பிட்டால் நம் புறஉருவம் தான் நன்றாக இருக்கும். ஆனால், முக்கியமாக நம் ஆத்மா நன்றாக இருக்க அவன் திருவுருவத்தை பார்க்க வேண்டும். எனக்கு தெரியாத இடத்தில் செல்லும் போது, யாரோ ஒரு மனிதன் வழிகாட்டுகிறான். எனக்கு பாதை பற்றிய கவலையில்லை அதுபோல், பகவானின் திருமேனியே சம்சாரக்கடலைக் கடக்க வழிகாட்டியாக உள்ளது. மனம் பகவானை நினைத்தால் கண் தப்பாய் பார்க்காது. திருநெல்வேலிக்கு நான் வந்தால், இங்கே வழிகாட்ட ஆள் கிடைக்கலாம். ஆனால், வடதுருவத்துக்குப் போனால் கை காட்டி கூட கிடையாது. பனிக்கட்டியில் நின்றால் காலே இருக்காது.

அதுபோல, உருவம் என்ற ஒன்று இருந்தால் தான் பகவானை மனதில் வைக்கலாம். ஆக, யோகா என்றதும் உருவமற்றதை தியானிக்கிறேன் என அமரக்கூடாது. மீண்டும் ஒன்றை நினைவூட்ட வேண்டியுள்ளது.

அகிம்சாவாதி தான் யோகாவுக்கு தகுதியுடையவன். எல்லா பிராணிகளும் வாய்க்குள் போக வேண்டுமென்றால் யோகாவுக்கு தகுதி கிடையாது. பிராமணர் மட்டும் என்றில்லை. எல்லாருமே சைவ உணவு தான் சாப்பிட வேண்டும். சாத்வீகமான உயர்ந்த உணவை நாமும் சாப்பிட்டு, பிறருக்கும் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், திரும்பத் திரும்ப சம்சாரத்தில் உழன்றாக வேண்டியது தான். சரி...இனி அடுத்த விஷயத்துக்குள் போவோம். நம் உருவத்துக்கும், பகவான் உருவத்துக்கும் என்ன வித்தியாசம்? நமக்கு பல், மூக்கு, காது, நாக்கு எல்லாம் உள்ளது. இவை அவனுக்கு இருக்கிறதா? ஐம்பெரும் பூதத்தால் ஆனது மனித உடம்பு. ஆனால், அவனது உடம்பு எப்படி இருக்கும்?











ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 4

பெருமானின் உடம்பில் சத்வமயம் மட்டுமே நிறைந்திருக்கும். குணங்கள் மூன்று. அவை சத்வம், ரஜஸ், தமோ. சத்வம் என்றால் தெளிவு, ஞானம்...அதாவது போதுமென்ற நிலை. ரஜஸ் என்றால் வேணும் வேணும் என்ற நிலை. கோபமும் இதில் அடங்கும். தமோ என்றால் சோம்பல், தூக்கம், மயக்கம்.

மனித உடலில் ரஜஸ், தமோ குணங்களே நிறைந்திருக்கும். அப்படியானால் பகவானைப் போல நானும் சத்வமயமாக விளங்க வேண்டும் என நினைத்தால் என்ன செய்ய வேண்டும். படிக்காரம் போட்டாக வேண்டும். என்ன படிக்காரம்? அவனது நினைவு என்னும் படிக்காரம். அவனையே ஸ்மரிக்க வேண்டும் என்ற படிக்காரம். எதை நினைக்கிறோமோ அது தானே நடக்கும்! அதுபோல, பகவானை நினைக்க நினைக்க சத்வகுணம் தானாக வந்து விடும். 

இது வெந்நீருடன் தண்ணீரைக் கலப்பது போல. வெந்நீரில் தண்ணீரைக் கலந்தால் வெந்நீர் "தண்' (குளிர்ச்சி) நீர் ஆகி விடும். சத்வகுணம் கொண்ட பகவானுடன் நம் மனது கலக்க கலக்க அந்த குணம் தானாக நமக்கு வந்துவிடும். உலக வழக்கில் கூட நமக்கு நகை, பகவானுக்கு திருவாபரணம். நமக்கு வேட்டி, புடவை. அவனுக்கு வஸ்திரம். அவனுக்குஉரிய எல்லாமே உயர்ந்ததாக உள்ளது.

""நான் எனக்கேற்ற உயர்ந்த திருமேனியை எடுத்து பூமியில் பிறக்கிறேன்,'' என பகவான் கீதையில் சொல்கிறான். 

அதனால் தான் ராமராகவும், கண்ணனாகவும் அவன் பிறந்தான். இதற்கு ஆதாரமாக ராமாயணம், மகாபாரதம் உள்ளது. 

ஆனால் மனிதன் கர்மத்தின் வழியாகப் பிறக்கிறான். நமது உடல் சுகதுக்கத்தை அனுபவிக்கும் கருவி. 
அடியார்களின் மனதை ஒடுக்கி அவர்களுக்கு உய்வைக் கொடுப்பது பெருமானின் உருவம்.

மனதை ஒடுக்க வேண்டுமானால், உடல் அதற்கேற்ற வகையில் இருக்க வேண்டும். உதாரணமாக, சாப்பிட்டு முடித்ததும் ஏதோ ஒரு மயக்கம் வரும். காரணம், மூளைக்கு போகும் ரத்தம் குறையும். பசியோடு இருந்தால் தான் நான் சொல்கிற உபன்யாசம் புரியும். அதனால் தான், பூஜையெல்லாம் முடிந்த பிறகு பிரசாதம் கொடுக்கிறார்கள். இவ்வாறு மனதையும், உடலையும் ஒடுக்கி அவனது உருவத்தை நினையுங்கள். 

அடியாரை ரட்சிக்கவே பகவான் திருமேனி எடுத்துள்ளார். நமது உடம்பு செயற்கை. பகவானின் உடம்பு இயற்கை. கர்மத்தால் நமக்கு உடம்பு வந்தது. இந்த உடம்பு பஞ்சபூதத்தால் ஆனது. பகவானோ பஞ்சசக்தி படைத்தவர். நம் உடம்பை நினைத்தால் துக்கம். அவர் உருவத்தை நினைத்தால் ஆனந்தம். நம் உடம்பு நெருப்புக்கு இரையாகப் போவது. பகவானுக்கு இப்படி இல்லை. அவர் வராஹம், நரசிம்மம், ராமன், கண்ணன் என வந்தார். அதேதிருமேனியோடு திரும்பிப் போனார். அடியாருக்கு நல்லது செய்ய வேண்டுமென நினைக்கும் போது, அவர் நினைக்கும் வடிவத்தில் இங்கே வருவார். அதையே நாம் கோயில்களில் பார்க்கிறோம். ஸ்ரீவைகுண்ட திவ்ய சம்ஸ்தானத்தைக் கூட அவர் தன்னுடன் எடுத்து வந்தார்.

சரி...பகவானுக்கு உருவம் இருக்கிறது என்றால், ஏதாவது ஒரே உருவத்துடன் வர வேண்டியது தானே! பல உருவங்கள் எதற்கு என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு உணவு பிடிக்கும். ரவை, சர்க்கரை, நெய் இது மாதிரி தனித்தனி பொருட்கள்.... ஒருவருக்கு கேசரி பிடிக்கும். இன்னொருவருக்கு மைசூர்பாகு, அடுத்தவருக்கு பாதுஷா, ஒருவருக்கு தேங்காய் பர்பி.. பொருட்கள் ஒன்று தான். ஆனால், செய்கிற பட்சணத்தின் உருவமும், சுவையும் மாறுபடுகிறது. அதுபோல, ஒருவனாகிய பகவான் ஒருவனே வைகுண்டத்தில் அமர்ந்த நிலையில் வைகுண்டநாதன், திருப்பாற்கடலில் சயன கோலம், பூலோகத்தில் இருந்தவர்களுக் காக விபவம் (அவதாரங்கள்) என பல வடிவங்கள் எடுத்தான்.

ராமனாக வந்து 11 ஆயிரம் ஆண்டுகள் இருந்தான். கண்ணனாக வந்து 100 ஆண்டுகள் இருந்தான். நரசிம்மனாக ஒரு மணி நேரமே வந்தான். நம் தேசத்தில் அன்று இருந்தவர்களுக்காக இந்த அவதாரங்கள் நிகழ்ந்தன. அதை இன்றும் நாம் பார்க்க வேண்டாமா! அதனால் தான் உருவமாக கோயில்களில் இருக்கிறான். அதையே அகோபிலம், காஞ்சிபுரம்...ஏன் நமது ஊர்களில் கூட அவன் நரசிம்மனாக இருக்கிறான்.

இதையெல்லாம் நான் நம்பமாட்டேன், எனக்கு நிஜ நரசிம்மனைப் பார்த்தாக வேண்டும் என்று யாராவது சொன்னால் அது சாத்தியமாகிற ஒன்றா! ஒருவேளை அது சாத்தியமாகிறதென்றே வைத்துக் கொள்வோம். கோயிலில் போனதும், நரசிம்மன் சந்நிதானத்தில் தன் நிஜ உருவைக் காட்டுவதாக வைத்துக் கொள்வோம். அதைப் பார்க்கிற சக்தியும், அவனது உக்ரத்தை தாங்குகிற சக்தியும் நமக்குண்டா? 

பகவான், என்ன நமக்கு சாதாரணமாக பிடிபடுகிறவரா என்ன!

அவர் அர்ச்சாவதாரமாக (சிலை வடிவம்) பல திருத்தலங்களில் இருக்கிறார் என்பது மட்டுமல்ல, நம் மனதின் உள்ளேயே இருக்கிறார். அப்படியானால், அவரை ஏன் நான் பார்க்க முடியவில்லை என்றால், அவர் கிட்டே இருக்க இருக்க நமக்கு பிடிபடவே மாட்டார். 

இன்னொரு கேள்வி..

கோயிலில் போய் தான் பகவானைத் தரிசிக்க வேண்டுமா! வீட்டில் போதாதா என்பது பலர் மனதில் எழுகிறது.
வீட்டில் குளித்து விட்டும் சமைக்கலாம். குளிக்காமலும் சமைக்கலாம். எப்படி சமைத்தாலும் உணவு தயாராகி விடும். ஆனால், குளித்து விட்டு பகவானை நினைத்தபடியே சமைத்தால் அந்த உணவு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். எங்கே தூங்கினாலும் தூங்கலாம். ஆனால், பெட்ரூமில் படுத்தால் தொந்தரவில்லாமல் நன்றாகத் தூங்கலாம். கோயில்களில் வைகானஸ அல்லது பாஞ்சராத்ர ஆகமப்படி பகவானை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள். 

அங்கே பல ஆச்சார்யார்களின் பாதம் பட்டிருக்கும். அத்தகைய இடத்தில் பகவானை வணங்குவது மிகவும் உயர்ந்தது. புண்ணியம் கிடைக்கும். வீட்டில் பிரார்த்தனை செய்யும் போது இவ்வாறு முடியுமா! பல தொந்தரவுகள் இருக்கும். இப்போது கோயிலுக்குப் போனால் கூட கைபேசி சிணுங்குகிறது என்பது வேறு விஷயம்.

கோயிலில் பகவானை வணங்குவதற்கும், வீட்டில் வணங்குவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க ஒரு சிறுசம்பவத்தை உதாரணமாக சொல்லப் போகிறேன்.









ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 5

வேத வியாசர் மகாபாரதம் எழுதிக்கொண்டிருந்தார். அப்போது சரஸ்வதி நதி பேரிரைச்சலுடன் ஓடிக்கொண்டிருந்தது. இவர் கதை சொல்வதற்கு சிரமமாக இருந்தது. "கீழே போ' என்று சொல்லி விட்டார். பத்ரிகாசிரமத்தில் கீழே போனவள், திரிவேணி சங்கமத்தில் அந்தர்வாகினியாக கலக்கிறாள். ஒரு செயலைச் செய்யும் போது, இடைஞ்சல் இருக்கக்கூடாது என்பது போலவே, கடவுள் வழிபாடும் இடையூறின்றி இருக்க கோயிலுக்குப் போக வேண்டும்.

குளம், குட்டை, ஏரி. ஆறு என எங்கு தண்ணீர் இருக்கிறதோ, அங்கு தான் தண்ணீர் எடுக்க முடியும். அதுபோல், எங்கு கோயில் உள்ளதோ அங்கு தான் "அருள்' என்னும் தண்ணீர் கிடைக்கும். பகவானுக்கு விக்ரஹநிலை மிக உயர்ந்த நிலை. எப்போது வேண்டுமானாலும் இதை வணங்கப் போகலாம். எப்போது வேண்டுமானாலும், அருளாகிய தண்ணீரைப் பெறலாம். நைமிசாரண்யம், திருவேங்கடம் (திருப்பதி), வானுமாமலை என பகவான் பல இடங்களில் விக்ரஹ நிலையில் காட்சி தருகிறான். வேறு நிலையில், அவன் காட்சி தரமாட்டானா என்றால் அதுவும் தருவான்.

அந்தணர்களுக்கெல்லாம் நெருப்பில் காட்சி தருவான். யோகிகளுக்கெல்லாம் உள்ளத்தில் காட்சியளிப்பான். இது மட்டுமல்ல... எங்கும் அவர் இருப்பார் என்று ஒரு கட்சி சொல்லும். ஆனால், நம்மைப் போன்ற சாமான்யர்களுக்கு பிரதிமை (உருவம்) வடிவில் காட்சி தருகிறான். 

சரி..."கடவுளை நீ பார்த்திருக்கிறாயா' என்று யாராவது நம்மிடம் கேட்டால், உருவத்தை மனதில் கொண்டு, "பார்த்திருக்கிறேன்' என்று சொல்லலாமா? என்றால் "ஆம்' என அடித்துச் சொல்ல வேண்டும். காரணம், அதனுள் இருப்பவன் நிஜபகவானே.

"உருவம் நிஜமென்றால், அதை யாராவது கொள்ளை அடித்து விட்டுப் போகிறார்களே! அது உயிருள்ள தெய்வம் என்றால், அவர்களைத் தண்டிக்க வேண்டியது தானே! அல்லது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டியது தானே' என்று அடுத்து சிலர் கேள்வி கேட்பார்கள். இதை கரிக்கட்டையால் சுவரில் எழுதுகிறவர்களும் உண்டு.

நம்மிடம் யாரும் கேள்வி கேட்காதவரை தெம்பாக இருப்போம். கேட்டு விட்டால் பயந்து விடுவோம். 
பகவானின் அர்ச்சா வடிவம் (உருவம்) தண்டிக்க வந்ததல்ல. தண்டனை ஏதும் இல்லாமல் கருணையோடு நம்மைக் காண வந்திருக்கிற வடிவம். அவன் நம் குற்றத்தைப் பார்ப்பதில்லை. அது நம்மைக் காக்கத்தான் வந்துள்ளதே தவிர, தன்னைத்தானே காத்துக் கொள்ளாது. ஒரு அலுவலகம் என இருந்தால் சட்டதிட்டம் வைத்துக் கொள்ளலாம். பகவானும் சட்டதிட்டம் வகுத்துக்கொண்டால் நம்மால் தாங்க முடியுமா? குற்றம் பாராமல் உள்ளார். இழுத்த இழுப்புக்கு வந்துள்ளார். அவர் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு வினாடி நினைத்தால் போதும். இங்கு யாராலும் இருக்க முடியாது.

பிரதமர் நம் ஊருக்கு வந்தால், ஜில்லா அதிகாரிகள் ஏற்பாடுகளைச் செய்வர். பரபரப்புடன் இருப்பார். அவர் வந்து நிகழ்ச்சியை முடித்து விட்டுப் போன பிறகு தான் மூச்சு விடுவர். அங்கே அவரவருக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் அவரவரும் நிற்க முடியும். மீறிப்போனால், வெளியே தூக்கிப் போட்டு விடுவர். 

பகவானும், சட்டதிட்டம் என சொல்லிக்கொண்டு இப்படி செய்தால் நம்மால் தாங்க முடியுமா! அவர் கருணையின் வடிவாக உள்ளதால் தான், நம்மால் இங்கே இருக்கவாவது முடிகிறது. அந்த தெய்வத்தை புளியோதரை, புஷ்பம் என சமர்ப்பித்து கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். பால், பழமெல்லாம் அது சாப்பிடுமா? என்றால், நிச்சயமாக சாப்பிடும். வாயால் என்ன! மூக்கால் கூட சாப்பிடும். இதற்கெல்லாம் ஆதாரமிருக்கிறது. தொண்டைமான் சக்கரவர்த்தி சீனிவாசனுடன் பேசியுள்ளார். திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் பெருமாள் ஆற்றுமணலைப் பொன்னாக்கி அளித்துள்ளார். காஞ்சிப் பெருமாள் திருக்கச்சி 
நம்பியுடன் பேசியுள்ளார். இவையெல்லாம் உருவவடிவில் பகவான் நம்மோடு உறவாடுகிறான் என்பதற்கான சான்றுகள் தானே! 

அப்படியானால், அவன் நம்முன் நேரடியாகத் தோன்ற வேண்டியது தானே என்று ஒரு கேள்வி எழுகிறது.
நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.அவன் நரசிம்மமாக நம் முன்னால் வந்தால், நிலைமை என்னாகும்? நாம் என்ன செய்தாலும், போனால் போகிறது என்று தானே விட்டு வைத்துள்ளார்! வேண்டாமென அவர் அடங்கி இருக்கிறார். அதுதான் அவரது பெருமை. "நாம் அவருக்கு பிரசாதம் செய்தாக வேண்டுமா?' என்று ஒரு கேள்வி கேட்கிறார்கள்.

அவர் பெயரை வைத்து நாம் சாப்பிடத்தான் பிரசாதம். லட்டு, சர்க்கரைப் பொங்கல் என பிரசாதம் வைப்பது என்பது அவரவர் விருப்பம். நம் விருப்பத்தைக் கூட தன் விருப்பமாக அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார். 
விதுரர் வீட்டுக்கு கண்ணன் வந்தான். அங்கே கறியமுது ஏதும் இல்லை, தாம்பூலம் இல்லை. பழம் மட்டுமே இருக்கிறது. அதையும், பகவான் முகத்தைப் பார்த்தபடியே உறித்துக் கொடுக்கிறார். எப்படி? 

பகவானைக் கண்ட பரவச பதட்டத்தில், என்ன செய்கிறோம் என்ற உணர்வின்றி, பழத்தைக் கீழே போட்டு விட்டு தோலை அவரிடம் கொடுக்கிறார். அதையும் அவன் விருப்பமாக ஏற்றுக்கொண்டான். ஆக, பகவான் தனக்கு உணவா பெரிதென நினைத்தான்! பக்தனின் பதட்டத்தையும், பக்தியையும், தூய உள்ளத்தையும் அல்லவா உணவாகக் கொண்டான்! 

தினமும் அரைமணி நேரமாவது பக்தியுடன் முறைப்படி வணங்குங்கள். பெண்கள் இதை அவசியம் செய்ய வேண்டும். விளக்கை கை ஏற்றட்டும். நாம சங்கீர்த்தனத்தை வாய் சொல்லட்டும். மனம் எப்போதும் அவனை நினைக்கட்டும். உங்கள் வீட்டிலுள்ள பகவானின் உருவத்தை உங்கள் குழந்தை போல் கவனித்துக் கொள்ளுங்கள். குகன் பகவானுக்கு தேன், தினைமாவு கொடுத்தான். சபரி கடித்த பழத்தைக் கொடுத்தாள். அன்போடு எதைக்கொடுத்தாலும் அவன் பெற்றுக் கொள்கிறான்.ஆண்டாள் என்ன கொடுத்தாள்!

"தூமலர் துவித்தொழுது' என்று பாவையில் பாடுகிறாள். அவள்அளித்தது தூயமலர்கள். சரி...உருவத்திற்கு சக்தியுண்டு என்கிறீர்களே! எத்தனையோ கோயில்கள் மூடிக்கிடக்கிறதே! அங்கே பகவானின் சாந்நித்யம் குறைந்து போகுமா?







No comments:

Post a Comment