Thursday, July 3, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 39

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 39

முதலாளியிடம் சம்பள உயர்வு கேட்கவேண்டும் என்று அந்த வேலையாளுக்குத் தோன்றியது. தன் நண்பனிடம் இதுகுறித்து ஆலோசனை கேட்டான். உடனே நண்பன், ”கண்ட நேரத்துலயும் முதலாளிகிட்ட சம்பளத்தை உசத்தச் சொல்லிக் கேக்கக் கூடாது. அவர் உற்சாகமா, சந்தோஷமா சிரிக்கிற நேரமாப் பார்த்து, சம்பள உயர்வைக் கேளு!” என்று அறிவுரை வழங்கினான்.

வேலையாளும் அந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தான். ஒருநாள், கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கிவரச் சொன்னார் முதலாளி. உடனே அவன், ஒரு கோணிப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினான். ”ஏய்… என்னப்பா இது? எண்ணெய் வாங்கறதுக்குப் பாத்திரத்தைதானே எடுத்துட்டுப் போகணும்? நீ என்னடான்னா கோணிப்பையை எடுத்துட்டுக் கிளம்பிட்டியே…” என்று கலகலவெனச் சிரித்தார் முதலாளி.

‘ஆஹா… இதோ முதலாளி சிரித்துக் கொண் டிருக்கிறார்; இப்போது சம்பள உயர்வைக் கேட்டுவிடுவோம்’ என்று நினைத்தபடியே, ”முதலாளி, ஒரு நூறு ரூபா சம்பளத்தை உசத்திக் கொடுங்கய்யா!” என்று கேட்டேவிட்டான். வந்ததே கோபம் முதலாளிக்கு!

நியாயமாக, எண்ணெய் வாங்குவதற்குக் கோணிப்பையை எடுத்துச் செல்லும் மடையனை வேலையை விட்டே தூக்க வேண்டும். ஆனால், அவனோ சம்பள உயர்வு கேட்டால், எப்படி இருக்கும் முதலாளிக்கு?
இடம் அறிந்து, சூழல் புரிந்து எதையும் கேட்கவேண்டும். அது ரொம்பவே முக்கியம். பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஒவ்வொரு சூழலிலும் எப்படி நடந்துகொள்ளவேண்டும், என்ன செய்யவேண்டும், எதிராளியை எவ்விதம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அப்படி வாழ்ந்து காட்டியதன் மூலமாக நமக்கும் உணர்த்தியிருக்கிறார்.

அதுமட்டுமா? இங்கே, தந்தை மீது மகன் மரியாதை வைத்திருப்பதும், மனைவி மீது கணவன் பிரியம் கொண்டிருப்பதும், கணவன் மீது மனைவி வாஞ்சையுடன் இருப்பதும், மாணவன் ஆசிரியரிடம் பணிவு காட்டுவதும் எதன் பொருட்டு? ஏன்? எதற்காக? தந்தை நல்லவர்; மனைவி நல்லவள்; ஆசிரியர் நல்லவர்; கணவன் நல்லவன் என்பதற்காகவா?

நல்லவன் என்ற ஒரேயொரு தகுதி இருப்பதற்காக மட்டுமே ஒருவரை மதித்துவிடக் கூடாது. அவரிடம் உள்ள அந்த நல்ல குணம் ஒருநாள் மறைந்துபோகலாம். இவர் நமக்கு இன்ன உறவு என்பதைக் கொண்டும் அவரை நாம் மதிப்பிடவேண்டும்.

ஸ்ரீராமன் மிகப் பெரிய சக்கரவர்த்தி; மிக அழகானவன்; வில் வித்தைகளில் தேர்ந்தவன் என்கிற காரணத்தால் எல்லாம் சீதாதேவி அவன் மீது மரியாதையும் பணிவும் கொண்டிருக்கவில்லை. ராஜ்ஜியத்தை இழந்த நிலையிலும், வனத்துக்குச் சென்றபோதிலும் அவன் மீது மிகுந்த மரியாதையுடனும், அன்புடனும் நடந்துகொண்டாள். அவளின் நேசத்துக்கு உரிய கணவன் ஸ்ரீராமன் என்பதும் முக்கிய காரணம்!

அதேபோல், நாயகன் என்பவனுக்கு ஒரேயொரு நல்ல குணம் மட்டும் இருந்தால் போதாது. அப்படி ஒரேயொரு குணம் மட்டுமே இருந்தால், அவன் நாயகனாகப் போற்றப்படமாட்டான். நல்லவன், உறவுக்காரன், சக்கரவர்த்தி எனப் பல்லாயிரம் காரணங்கள் ஸ்ரீராமனுக்கு இருந்ததால்தான், நாயகன் எனப் போற்றப்பட்டான். அதேபோல், நற்குணங்களும், போர் வியூகங்களும், தந்திரமும், கருணையும், ஆவேசமும் எனப் பல குணங்கள் கொண்டிருந்ததால்தான், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ‘நாயகன்’ என உலகத்தாரால் போற்றப்படுகிறார்.

உலகின் மிக மோசமான குணங்கள் என்று பிடிவாதத்தையும், விட்டுக் கொடுக்காத தன்மையையும் சொல்வார்கள். ஸ்ரீகிருஷ்ணர், தரும சகோதரர்களுக்காக நிறையவே விட்டுக் கொடுத்தார். அவர்களின் நலன் பொருட்டுப் பல சந்தர்ப்பங்களில் தனது பிடிவாதத்தையும் தளர்த்திக் கொண்டார்.

எதிரில் இருப்பவரிடம் ஒரு விஷயத்தை விளக்குவோம். பேசி முடித்துவிட்டு, ‘என்ன நான் சொன்னது புரிஞ்சுதா, இல்லியா?’ என்று கேள்வி கேட்போம். ஒருவேளை, அவர் புரியவில்லை என்று சொல்லிவிட்டால், ‘அட என்னப்பா நீ? சொல்லும்போது தூங்கிட்டிருந்தியா?’ என்று எரிச்சல்படுவோம். ஆனால் ஒருபோதும், ‘சரி… உனக்குப் புரியும்படியா நான் விளக்கமா சொல்லலைன்னு நினைக்கிறேன். இப்ப தெளிவா, உனக்குப் புரியும்படியா சொல்ல முயற்சிக்கிறேன்’ என்று நாம் சொல்லுவதே இல்லை. 

கண்ணபிரான் இந்த விஷயத்தில் நமக்கு நேரெதிர்! சொல்லுவதைத் தெளிவாகச் சொன்னதுடன் மட்டுமில்லாமல், ‘புரியும்படி சொல்லிவிட்டதாக நினைக்கிறேன். இல்லையெனில் கேள்; மறுபடியும் சொல்கிறேன்’ என்று எந்தக் கர்வமும் இல்லாமல் சொன்ன மிகச் சிறந்த ஆசிரியன், ஸ்ரீகண்ணன். எனவேதான் மொத்த மனிதர்களின் வாழ்க்கைக்குமான ஆதாரமாகத் திகழ்கிறது பகவத் கீதை.
ஆக, நாயகன் என்பவன், புரிதலுடன் செயல்படுகிறவனாகவும் திகழ்கிறான்.

அக்கறை எங்கு இருக்கிறதோ அங்கே புரிந்து கொள்ளுதலும் இருக்கும். புரிந்துகொள்ளுதல் இருக்கும்போது, மிக எளிதாக விட்டுக் கொடுத்துச் செல்வது நடந்தேறும். விட்டுக் கொடுக்கிற மனம் இருந்துவிட்டால், அங்கே பிடிவாதத்துக்கு வேலையே இல்லை. இந்த குணங்கள் இருந்துவிட்டால்… நம் எதிரில் இருப்பவர், ஏதேனும் தவறுகள் செய்திருந்தாலும், சட்டென்று அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்கிற பக்குவம் வந்துவிடும். ஆனால், நம்மில் பலர் எவரையும் மன்னிப்பதும் இல்லை; அவ்வளவு சீக்கிரத்தில் அவர்கள் செய்ததை மறப்பதும் கிடையாது.

‘அவன்கூட முகம் கொடுத்துப் பேசியே பத்துப் பதினஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும். பின்னே என்ன… யாரு எவன்னு தராதரம் பார்க்காம, செய்யாத தப்புக்குப் பலர் முன்னாடி அவன் என்னைக் கன்னாபின்னான்னு திட்டிட்டான். அன்னிலேருந்து அவன்கூட நான் பேசுறதே இல்லியே..?’ என்று பெருமையாகச் சொல்லிக் கொள்கிறவர்கள்தான் இங்கே அதிகம். ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பிறர் செய்த தவறுகளைப் பொறுத்துக்கொண்டு, அவர்களை மன்னித்தருளினார். அப்படி மன்னித்ததால்தான் நாயகன் எனப் போற்றப்படுகிறார்.

அதேநேரம், அவர் கம்பீரமானவரும்கூட! எல்லாச் சூழ்நிலைகளிலும் தன்னைப் பொருத்திக் கொண்டு வெற்றி வாகை சூடினார். ‘ஆயுதமே எடுக்காத நான் வேண்டுமா, என் படையினர் வேண்டுமா?’ என்று துரியோதனனிடம் கேட்டார் கிருஷ்ணர். ‘உன் படையினரே போதும்’ என்று சாமர்த்தியமாகக் கேட்டதாக நினைத்துக் கொண்டான் துரியோதனன். ‘என்ன முட்டாள்தனம் செய்துவிட்டாய்! சரி சரி… எக்காரணத்தைக் கொண்டும் ஆயுதத்தை எடுக்கக்கூடாது என்கிற வரத்தையும் கேள்’ என்று பீஷ்மர் சொல்ல… அப்படியே கேட்டான். ‘சரி, ஆயுதம் எடுக்கவில்லை’ என உறுதியளித்தார் பகவான்.
இப்படியாக, பிடித்த- பிடிக்காத விஷயங்களையெல்லாம் உள்ளே மனத்துள் வைத்துக் கொண்ட ஸ்ரீகிருஷ்ணர் எனும் பரம்பொருள், சகலத்தையும் அறிவார் அல்லவா? சர்வத்தையும் அறிந்த நாயகன் அவர்!

 

No comments:

Post a Comment