Thursday, July 3, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 43

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 43

கடமையை செய்வோம் 

‘பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குத்தானே சொன்னார்? நமக்காகவா சொன்னார்? அவனுக்குச் சொன்னது நமக்கு எப்படிப் பொருந்தும்?’ என்று சிலர் கேட்கலாம். அர்ஜுனன் என்பது பகவானுக்கு ஒரு சாக்கு. அவ்வளவே! முழுக்க முழுக்க உலக மக்களுக்காக உபதேசிக்கப்பட்டதுதான் கீதை.கீதையில் இல்லாத விஷயங்களே இல்லை. வாழ்க்கையில் நாம் சந்திக்கிற அத்தனைப் பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும், வேதனைகளுக்கும் விபரீதங்களுக்கும் கீதையில் பொருளுரைத்திருக்கிறார், கண்ணபரமாத்மா. எவர் ஒருவர் பகவத் கீதையைப் படித்து, உணர்ந்து, தெளிகிறாரோ… அவருக்குப் புத்தியில் தெளிவும், சிந்தனையில் தீட்சண்யமும் ஏற்படும் என்பது உறுதி.

அப்பேர்ப்பட்ட உன்னதமான கீதையில் இருந்து இளைஞர்கள் எடுத்துக் கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அவற்றை இன்றைய இளைஞர்கள் ஏற்றுச் செயல்பட்டால், அடுத்தடுத்த தலைமுறையில் நல்லதொரு மாற்றங்களும் ஏற்றங்களும் நிச்சயம் நிகழும்.

கல்லூரியில் படிக்கும்போது, கேம்பஸ் இன்டர்வியூ என்று வைக்கிறார்கள். அதில் தேர்வானதும் குதூகலமாகிவிடுகிறார்கள் இளைஞர்கள். பின்னே… படித்து முடிப்பதற்கு முன்பே, படித்த படிப்புக்கு ஏற்ற வேலை… அதுவும் கை நிறையச் சம்பளத்துடன் என்றால், குதூகலத்துக்குக் கேட்கவா வேண்டும்?
ஆனால் என்ன… படித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு வருடம் கழித்து வேலை நிச்சயம் என்றாகிவிட, வாழ்வில் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறார்கள். இனி வேறு எதுவும் இல்லை என்கிற தேக்க நிலைக்கு வந்துவிடுகிறார்கள்.

ஆச்சார்யர் என்கிற குருவிடம் கால்வாசியும், நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் இருந்து கால்வாசியும், காலப்போக்கில் நடக்கிற சூழல்களால் கால்வாசியும், இறைவனால் கால்வாசியும் போதனைகள் கிடைக்கப் பெறுகின்றன. அப்படியிருக்கும்போது, ஆச்சார்யர் எனும் ஆசிரியரிடம் கற்றுக்கொள்வதற்கே ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் இருக்கும்போது, போதும் என்கிற நினைப்பு வரலாமா இளைஞர்களுக்கு?

‘கற்றுக்கொள்வதற்கு வயதோ, நேரம் காலமோ தேவையில்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்; எப்போதும் எவரிடம் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்’ என்று வலியுறுத்துகிறது கீதை.
அதேபோல், அர்ஜுனனிடம்… ‘நான் சொன்ன விஷயங்களை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தால் போதாது, அர்ஜுனா! நல்ல விஷயங்களை எவரிடம் இருந்தும் பெறலாம். நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்; தெளிவு பெறுவாய். கேட்பதும், கேட்டதைக் கொண்டு செயல்படுவதும் மட்டுமே உன்னுடைய வேலை!’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். உடனே அர்ஜுனன், ‘அப்படியென்றால் பலன்?’ என்று கேட்க… ‘அதை என்னிடம் கொடுத்துவிடு’ என்கிறார் பகவான். அதைக் கேட்டுக் குழம்பிப் போனான் அர்ஜுனன். ‘செயலைச் செய்த எனக்குத்தானே பலன் கிடைக்கவேண்டும்?’ என்று மெள்ளக் கேட்டான்.

பகவான் சிரித்துக்கொண்டே, ‘உன் செயலால் விளைகிற வெற்றியாகட்டும், தோல்வியாகட்டும்; நல்லதாகட்டும் கெட்டதாகட்டும்… அந்தச் செயலால் விளையும் பலன் எதுவானாலும் அதை ஏற்றுக் கொள்கிறேன்’ என்கிறார்.

இதை இளைஞர்களும் மாணவர்களும் எப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்?

படிப்பது மட்டுமே அவர்களின் வேலை. புத்தியும் மனமும் சக்தி வாய்ந்தவை. அதற்குள் பாடப் புத்தகங்களைப் படித்துப் படித்து உருவேற்றிக் கொண்டு பதித்துக் கொள்ளவேண்டும். ஆழ்ந்த ஈடுபாட்டுடன் படிக்கவேண்டும். ‘இதைப் படிச்சுட்டோம்னா, அதிக மார்க் எடுத்துடலாம். அதிக மார்க் எடுத்தா, நாம விரும்பின காலேஜ்ல, நாம நினைச்ச படிப்பிலேயே சேரமுடியும். அந்தப் படிப்புக்குக் கை நிறையச் சம்பளம் கிடைக்கும். அப்படிச் சம்பளம் கிடைச்சா, தினமும் ஹோட்டல்ல ரவா தோசை சாப்பிடுவேன்…’ இப்படியான கனவில் இருந்தும், கற்பனையில் இருந்தும் விலகிவிடுவதே உத்தமம்.

கதை ஒன்று உண்டு. ஓர் ஆசாமிக்கு எதிரே கொஞ்சம் மாவு தயாராக இருந்தது. உடனே அவர் யோசிக்கத் துவங்கினார். ‘இந்த மாவைக் கொண்டு நான்கு சப்பாத்திகள் தயார் செய்யமுடியும். அந்தச் சப்பாத்திகளை நான்கு ரூபாய் என்று பதினாறு ரூபாய்க்கு விற்றால், இப்போது இருக்கும் மாவைவிட இரண்டு மடங்கு மாவு வாங்கலாம். அதற்கு எட்டு சப்பாத்திகள் செய்யலாம். அதில் வரும் தொகை, அதனால் கிடைக்கும் மாவு, அவற்றில் இருந்து வரும் தொகை என்று கணக்கிட்டுப் பார்த்தால், மாதம் ரூ.80,000 சம்பாதிக்க முடியும் என்னால். அப்போது வேலைக்கு நான்கு பேரை வைத்துக் கொள்வேன். அவர்களில் எந்த வேலைக்காரனாவது வேலை செய்யாமல் சோம்பேறியாக உட்கார்ந்திருந்தால், அவனை இந்தக் கோலாலேயே விளாசித் தள்ளிவிடுவேன்…’ என்று நினைத்தபடியே, தன் கையில் வைத்திருந்த கோலை வேகமாக இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் சுழற்றினான். அந்தச் சோம்பேறி வேலைக்காரனின் கால்களில் அடிப்பதாக நினைத்து, கோலால் ஒரு வீசு வீச, அவன் எதிரே மாவு வைக்கப்பட்டிருந்த மண் சட்டி மீது பட்டு, அது உடைந்து, மாவெல்லாம் மண்ணில் சிதறியது.

ஒரு செயலைச் செய்யும்போது, அந்தச் செயலை எப்படிச் செய்யலாம் என்று திட்டமிட்டுச் செய்யவேண்டும். சரியாகத் திட்டமிட்டு, நேர்த்தியாகச் செயல்படுகிற சாதுர்யத்தை இளைஞர்கள் கைக்கொள்ளவேண்டும். அந்த ஆசாமியின் மாவுக்கனவு போல் நம் வாழ்க்கை ஒருபோதும் ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.

படிப்பதில் ஆழ்ந்து ஈடுபட்டால் போதும். தெளிவுடன் உள்வாங்கிக் கொள்வதே சிறந்தது. அப்படிச் செயல்பட்டால், 95 மார்க் கிடைக்காமல் போய்விடுமா என்ன? படிக்கும்போது படிப்பை மட்டுமே நினைக்க வேண்டும். படிக்கிற வேளையில், இந்தக் கேள்விக்கு பதில் சொன்னால் எவ்வளவு மதிப்பெண் கிடைக்கும் என நினைக்கவே நினைக்காதீர்கள், இளைஞர்களே!

முறம், சல்லடை இந்த இரண்டும் ஒரே விஷயத்தைத்தான் செய்கின்றன. ஆனால், அப்படிச் செய்வதில் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளைச் சல்லடையால் சலித்துப் பாருங்கள்; அதையே முறத்தால் புடைத்துப் பாருங்கள். தேவையானது எதுவோ அது கீழே போய், கசடுகள் அனைத்தும் சல்லடைக்குள் தங்கிவிடும். ஆனால், முறத்தில் ஒரு பொருளைப் போட்டுப் புடைத்தோமானால், தேவையற்ற பொருட்கள் எல்லாம் முறத்தில் இருந்து சட்சட்டென்று வெளியே தெறித்து விழுந்துவிடும். தேவையானவை எதுவோ அது அப்படியே முறத்தில் தங்கிவிடும். நல்ல விஷயங்களை உள்வாங்கிக் கொள்வதில் நாம் முறம் போல் இருக்கிறோமா, அல்லது சல்லடையாக இருந்து விட்டுவிடுகிறோமா என்பது நம் கையில்தான் இருக்கிறது.

ஒரு செயலைச் செய்து முடிப்பதில் தீவிர முயற்சியும் சரியான திட்டமிடலும், செயல்பாட்டில் நேர்த்தியும் வந்துவிட்டால், நமது காரியம் யாவிலும் துணையிருந்து வெற்றியையே தேடித் தருவான் பகவான். சந்தேகமே இல்லை.

‘செயலைச் செய்தது நான்தானே? அப்படியெனில் பலனை உனக்கு ஏன் தரவேண்டும்’ என்று அர்ஜுனன் கேட்டதற்கு பகவான் சொல்கிறார்… ‘நல்ல பலன் என்றால் எனக்குத் தந்துவிடு என்றா சொல்கிறேன். கெட்டதோ நல்லதோ… பலன் எதுவாக இருந்தாலும், அதை என்னிடம் கொடுத்துவிடு என்கிறேன். இதில் என்ன தவறு அர்ஜுனா?

தவிர, இன்னொரு விஷயம். நீ சரீரன். உன்னால் மட்டுமே விளைந்தது இல்லை இது! ஐந்து பேர் ஒன்றுகூடவேண்டும். அதாவது ஆத்மா, தேகம், பஞ்சபூதங்கள், பரம்பொருள், இந்திரியங்கள் ஆகிய ஐந்தும் இணைந்தால்தான் செயலைத் திட்டமிடவோ, முனைப்புடன் செயல்படவோ முடியும். ஆகவே, செயலைச் செய்வது மட்டுமே உன் வேலை. அதில் எப்போதும் கவனம் செலுத்துவாயாக! பலனைப் பற்றி அலட்டிக் கொள்ளாதே!’ என்கிறார் பரந்தாமன்.

அதாவது, ‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே’ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

எனவே, பலனை எதிர்பாராமல் கண்ணும் கருத்துமாக நமது கடமைகளைச் செய்துகொண்டே போவோம். அவற்றுக்கான பலன் நிச்சயம் நம்மை வந்து அடைந்தே தீரும்!

எல்லாப் புகழும் கிருஷ்ணனுக்கே!

முற்றும்.

கிருஷ்ணாய வாசுதேவாய தேவகி நன்தனாய
ந்ந்தகோப குமாராய கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 
சர்வம் கருஷ்ணார்பணம்
ஸமஸ்த லோகா சுகினோ பவந்து.

இத்தொடரை முழுமயாய் வாசித்தவர்கள் முடிந்தால் 
அவலோ, வெண்ணையோ, அவல் பாயசமோ நெய்வேதனம்
பண்ணவும்

No comments:

Post a Comment