Saturday, July 12, 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 8-----9



ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 8

கிரிக்கெட் ஆடுபவன் பந்தை மட்டுமே பார்க்க வேண்டும். அதில் மட்டுமே கவனம் கொள்ள வேண்டும். வெளியே ரசிகர்கள் ஆரவாரம் செய்வது பற்றியோ, வாத்தியம் இசைப்பது பற்றியோ, ஆரஞ்சுதோல், அம்பு வீசுபவனையோ பற்றி கவலைப்படக்கூடாது. ஆசிரியருக்கு மாணவர்கள் ஆயிரம் புனைப்பெயரை வைப்பார்கள். அதுபற்றி அவர் கவலைப்படக்கூடாது. பாடம் நடத்துவதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். 

ஒருவன் வண்டி ஓட்டி பழகுகிறான். "நான் வண்டி ஓட்டி பழகப்போகிறேன், ஊருக்குள் போக்குவரத்தை தடை செய்யுங்கள்' என்றால் நடக்கிற காரியமா! பழகுபவன் தான் போக்குவரத்தை அனுசரித்துப் போக வேண்டும். இதுபோல் தான் கோயில்களில் நடக்கும் சம்பவங்களும். ஒருவன் மணியடிப்பான், ஒருவன் பல கதைகளைப் பேசிக்கொண்டிருப்பான், ஓரிடத்தில் காலை மிதித்து விட்டதாக சண்டை நடக்கும், இதுபற்றி வழிபடுகிற நமக்கு கவலை இல்லை. நம் மனம் பகவானிடம் லயித்து விட வேண்டும். 

வியாதி என்று வந்து விட்டால் மருந்து சாப்பிட்டாக வேண்டும். அதில் ஒன்றிரண்டு பக்கவிளைவு இருக்கத்தான் செய்யும். பக்கவிளைவு ஏற்படுமே என்பதற்காக மருந்தே சாப்பிடமால் விட்டுவிட்டால் முக்கியமான வியாதி எப்படி குணமாகும்? அதற்காக கோயில்களில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு ஓடி ஒளிய வேண்டும் என்று சொல்லவில்லை. அதையும் தடுக்க முயற்சி எடுக்கத்தான் வேண்டும்.

திருமங்கையாழ்வார் அப்படித்தான் செய்தார். பகவானுக்கு விரோதமாக யாராவது பேசினால், என் கையில் சக்தி இருந்தால் தவறுகளை அறுத்துவிடுவேன்,'' என்கிறார். நீ செய்யும் வினையைச் செய், பலனைப் பற்றிக் கவலைப்படாதே.

நான் பல இடங்களில் உபன்யாசம் செய்கிறேன். செல்லுமிடங்களில் உண்மையை எடுத்துக்கூறுவது என் பொறுப்பு. 

அதையெல்லாம் எல்லாரும் கேட்டு அப்படியே நடக்க வேண்டுமென நான் எதிர்பார்க்க முடியுமா! ஏன்..சிலர் உபன்யாசம் முடிந்து செல்லும் போதே திருட்டுத்தனமான காரியம் ஒன்றைக்கூட செய்யலாம். அதற்காக, நான் வருத்தப்பட முடியுமா! 

சொல்வது என் பொறுப்பு. கேட்பது அவர்கள் முடிவு. பகவானால் தான் அவர்களைத் திருத்த முடியும். அவர்களைத் தண்டிக்க நான் யார்? தவறு செய்யும் மனிதனைத் தண்டிக்கும் அதிகாரம் இன்னொரு மனிதனுக்கு இல்லை. அந்த உரிமை பகவானுக்கு மட்டுமே உண்டு. 

நம் பிள்ளைகள், பெண்களிடம் நாம் நல்லதைச் சொல்ல வேண்டியது கடமை. அதை அவர்கள் கேட்பார்களா என்றால் தெரியாது. அதிலும் 16 வயதில் புத்திமதி சொன்னால் காதிலேயே ஏறாது. ஆனாலும், புத்திமதியை தொடர வேண்டும். பொதுவாக 16 முதல் 30 வரை திமிரும் வயது. ஏனெனில், நாமும் அப்படித்தான் இருந்தோம். நம் பிள்ளைகளின் வயதில், நாம் நம் பெற்றவர்களின் சொல்லைக் கேட்டோமா என்றால் இல்லை. நாம் சத்தியசந்தனாகவோ, துருவனாகவோ இருந்தோமா...நிச்சயம் இல்லை!

""உன் வயசுப்பிள்ளைகள் எப்படியெல்லாம் ஆயிட்டாங்க தெரியுமா!'' என்று பெற்றவர் பிள்ளைக்கு புத்திமதி சொன்னால், ""உன் வயசுக்கு எத்தனை பேர் ஜனாதிபதி ஆயிட்டாங்க! நீ அப்படியா ஆனே!'' என்று பிள்ளை பெற்றவரிடம் எதிர்க்கேள்வி கேட்பான். நம் பெண்கள், பிள்ளைகள் உள்ளத்தில் நம்மால் உட்கார முடியாது. ஆனால், பகவான் அவர்கள் உள்ளத்தில் அமர்ந்திருக்கிறான். அவர்கள் திருந்துவார்கள் என காத்திருக்கிறான். 
நம் பிள்ளைகளுக்கும் ஒருநாள் 40 வயது ஆகும். அப்போது, அவன் குழந்தை அவனை இதே மாதிரி கேட்பான். அப்போது தான் அவனுக்கு நல்லது கெட்டது புரியும். நாமும் இதே போல நம் பெற்றவர்களைக் கேட்டோமோ என்று எண்ணிப்பார்ப்பான். அப்போது தான், அவனது பெற்றோர் அவனது சிறுவயதில்...அவனது உள்ளத்துக்குள் போட்டாரே நல்ல விதை! அது அப்போது தான் கனிந்து பலனளிக்கும். ஆக, நம்மைக் கட்டுப்படுத்தும் சக்தி மனிதர்களிடம் இல்லை. பகவானிடம் மட்டுமே இருக்கிறது.

அரிவாள்மனை தானாக வெண்டைக்காயைத் திருத்தாது. நாம் தான் திருத்த வேண்டும். அதுபோல் தான் பெற்றவர்களும், நல்லதை பிள்ளைகளிடம் சொல்ல வேண்டும். கோயிலுக்குப் போகும் போது, பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும். இப்படி இப்படி வணங்க வேண்டும் என்று கற்றுத்தர வேண்டும். அவர்கள் வர மறுக்கத்தான் செய்வார்கள். 

எப்படியோ எடுத்துச் சொல்லி அழைத்துச்செல்ல வேண்டும். ஒருவேளை அறவே மறுத்து விட்டாலும், அவர்களுக்கு குறிப்பிட்ட வயது வந்ததும், நாம் சொன்ன அறிவுரையை அவர்கள் கடைபிடிக்க ஆரம்பித்து விடுவார்கள். 

இன்று போடுகிற விதை அன்று முளைத்து விடும்.கோயிலுக்குப் போய் பகவானைப் பார்க்க பார்க்க அவனுக்குரிய சத்வகுணம் (சாந்தகுணம்) அவனையறியமாலேயே வந்து விடும். இன்று புதுமை, அறிவியல் என்ற பெயரால் தான் இளையவர்கள் பகவானின் அருகில் வர மறுக்கிறார்கள். அவர்களிடம், "ஒரு ஸ்லோகமாவது படி, காலாவது படி' என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். கால், அரைக்கால் ஸ்லோகத்தில் கூட பகவான் இருப்பார். 

சொல்லியும் கேட்கவில்லை என்பதற்காக, அவர்கள் விஷயத்தில் பதட்டமே கூடாது. பதட்டம் என்பதே பாவத்தின் பலன் தான். இவர்களுக்கு தான் நீரிழிவு, ரத்தக்கொதிப்பு வரும். புண்ணியம் செய்திருந்தால் பதட்டமே வராது. 

இதனால் தான் சொல்கிறேன். நாம் நமது பழையமுறைக்கு கொஞ்சம் கொஞ்சமாக வர வேண்டும். கடைசிகாலத்தில் இன்றைய எந்த நவீனமும் நம் கூட வராது. நாம் சொல்கிற கேசவ, நாராயண, கோவிந்த நாமங்கள் தான் கூட வரும்.

""சரி...பகவானை நெருங்குவதற்கு நமக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும். ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்கிறீர்களே! இதெல்லாம் எனக்கு தெரியாதே! நான் அந்தளவுக்கு புத்திசாலி இல்லையே! என்னால் பகவானை அடைய முடியுமா!'' என ஒருவர் கேட்கலாம்.









ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 9

புத்திசாலிகள் மட்டுமே தன்னிடம் வரவேண்டுமென பகவான் எந்த இடத்திலும் சொல்லவில்லை. ஈடுபாடு உள்ளவன் வந்தால் போதும் என்கிறான். உடலுக்குரிய சட்டதிட்டம் அளவுக்கு உட்பட்டது. ஆத்மாவுக்குரிய சட்டதிட்டம் அளவில்லாதது. பகவான் ஒரு உருவத்துடன் பிறக்கிறான். அதை "அப்ராக்ருதம்' என்பார்கள். நமது உருவமோ "ப்ராக்ருதம்'. அதாவது, நமது புலன்கள் கட்டுப்பாட்டை இழக்க வைக்கும். பகவானிடம் கொள்ளும் ஈடுபாடு, புலன்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

நமது உடல் ரஜோ, தமோ, சத்வம் என்னும் மூன்று வகை குணங்களால் பிசைந்து செய்யப்பட்டுள்ளது. பெருமானின் குணம் சத்வம் மட்டுமே. எப்பொழுது எந்தக்கலரில் தோய்க்கிறோமோ அந்த வகையான கலரில் நாம் மாறி விடுவோம். அதுபோல, பகவானைப் பார்த்துப் பார்த்து அவனது சத்வகுணம் தோயத்தோய நாமும் மாறி விடுவோம். 

அதனால் தான் குழந்தைகளை கோயில்களுக்கு கூட்டிப் போக வேண்டும் என்பது! சிலர் சொல்கிறார்கள். ""என் பிள்ளை குழந்தையாக இருக்கும்போது, தீபாவளிக்கு நான் எடுத்துக்கொடுத்த துணியை அணிந்து கொண்டான். 

இப்போது 16 வயதானதும், பணத்தைக் கொடு, நானே கடைக்குப் போகிறேன் என்கிறான்,'' என்று. இப்படி சொல்பவன் கோயிலுக்கு அழைத்தால் வருவானா என்று! இதுபோன்று சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் கலங்கக்கூடாது.அவனை கோயிலுக்கு சென்றால், பகவானின் சத்வகுணம் அவன் மீது தோயத்தோய அவனும் மாறி விடுவான். 

சிலர் சாப்பிடவே மாட்டார்கள். உடல் குண்டாக இருக்கும். நன்றாக சாப்பிடுபவனின் உடலோ மாறவே மாறாது. இது அவரவர் உடல்வாகைப் பொறுத்தது. ஆனால், பகவானுக்கு இதுபோன்ற உருவ அமைப்பெல்லாம் கிடையாது. அவனது உருவம் இச்சை (விருப்பத்தின் படி அமைந்தது) என்கிறார் வேதாந்த தேசிகன். அவராக விருப்பப்பட்டு பன்றியாக, மீனாகப் பிறந்தார். அதாவது, அவர் விருப்பம் காரணமாகப் பிறந்தார். நாம் கர்மம் காரணமாக பிறக்கிறோம்.

உலகத்தில் தர்மம் தலைகுனியும் போது பகவான் பிறப்பார். இப்போது கலியுகம். 5115 ஆண்டு தான் வந்துள்ளது. இன்னும் 4லட்சத்து 27 ஆயிரம் ஆண்டுகளை கடக்க வேண்டியுள்ளது. இப்போது தர்மம் இருக்கிறதா என்றால் இல்லை என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால், அவர் பிறக்கவில்லை என்னும் போது, தர்மம் இன்னும் தலை குனியவில்லை என்று அர்த்தமாகிறது. நம் காலத்துக்குள் நாம் பகவானைப் பார்க்க மாட்டோம் என்றாலும், நம் கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன்கள் அவரைப் பார்ப்பார்கள். மனிதன் தனக்குப்பிறகு தன் பிள்ளை என்ன செய்யப்போகிறான் என்று தான் நினைக்கிறான். பகவானோ வேறு ஏதோ நினைக்கிறான். நாம் பிறப்பதற்கு காரணம் கர்மங்களைத் தொலைப்பதற்கு தான். ஏதாவது பிராயச்சித்தம் செய்து இதைத் தொலைத்தாக வேண்டும். ஆனால், எவ்வளவு பிராயச்சித்தம் செய்தாலும் அது தொலைய மாட்டேன் என்கிறது. காரணம், செய்த பாவங்களுக்கு எண்ணிக்கையே இல்லை. பிராயச்சித்தம் செய்தாலும் சுக துக்கத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும். 

கொசு கடிக்கிறது என்றால் உடலில் களிம்பு பூசலாம். வலையைப் போட்டு படுக்கலாம். இதன்மூலம் தாக்குதலைக் குறைக்கலாம். பிராயச்சித்தம் செய்வது என்பதும் இதுபோலத்தான்! இதன்மூலம் நாம் படும் துன்ப அனுபவங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.

நாம் பண்ணிய புண்ணியத்தால் பிறவி ஏற்படுகிறது. அதற்கான சுகத்தை அனுபவிக்க அனுபவிக்க புண்ணியத்தின் அளவு குறைந்து விடும். அதுபோல, செய்த பாவத்திற்கேற்ற அளவு துக்கத்தை அனுபவிப்போம். பாவக்கணக்கு குறைய வேண்டுமானால், துன்பத்தை விருப்பத்துடன் அனுபவிக்க வேண்டும். 

நம்மாழ்வார் இப்படித்தான் சொல்கிறார். அதேநேரம், துன்பங்களை அனுபவிக்க அனுபவிக்க பகவானை அடைய நேரம் வந்துவிட்டதாக அர்த்தம். இந்த உண்மையை உணர்ந்துவிட்டால் துன்பம் பற்றிய கலக்கம் வராது. மகான்களும் துன்பப்பட்டிருக்கிறார்கள். இப்போது, ஒரு கேள்விக்கும் இங்கே விடை கிடைக்கிறது. படித்து முனைவர் பட்டம் பெற்று, ஸ்லோகங்களையெல்லாம் சொல்லும் பண்டிதனால் மட்டும் தான், பகவானை அடைய முடியுமா! பாமரனால் முடியாதா என்பது கேள்வி. இதற்கு பதில்... 

"துன்பத்தைக் கண்டு கலங்கி கவலைப்பட்டால் அவன் பாமரன். துன்பத்தை விருப்பத்துடன் அனுபவித்தால் அவன் பண்டிதன். இந்தப் பண்டிதர்களே பகவானை நெருங்க முடியும். தர்மம் நிலைக்க, துஷ்டர்களை அழிக்க பகவான் பிறக்கிறான். நாம் அதற்காக பிறக்கவில்லை. அவனுக்கு பாவ புண்ணியம் கிடையாது. அடியாரை ரட்சிக்கவே அவன் பிறக்கிறான். கோவர்த்தன மலையைத் தூக்குவது, அசுரர்களைக் கொல்வது போன்ற சித்து வேலைகளைச் செய்கிறான்.

சரி...பாவ புண்ணியம் என்கிறீர்களே! அதன் உண்மை நிலை என்ன என்பது பற்றி சொல்லுங்களேன் என்பீர்கள். கர்மம் என்றால் கிரியை. அதாவது செயல்வினை (செயல்பாடு). இதை மூன்று வகையாக வேதம் பிரிக்கிறது. சிலவற்றை செய், சிலவற்றை செய்யாதே என்னும் வேதம், சிலவற்றை செய்யலாம் என்றோ, செய்யக்கூடாது என்றோ சொல்லவில்லை. 

தர்ப்பணம், சிராத்தம், சந்தியாவந்தனம், நாமஸ்மரணை (பகவானின் நாமம் சொல்லுதல்) ஆகியவற்றை செய் என்கிறது. பொய் சொல்லாதே, திருடாதே, சிசுவதை செய்யாதே, பெண்ணை அவமதிக்காதே, பிராணிகளை வதைக்காதே என்று செய்யக்கூடாதது பற்றி கட்டளையிடுகிறது. 

அப்படியானால் செய் என்றோ செய்யாதே என்றும் எந்தெந்த செயல்களை வேதம் சொல்கிறது. அறிய ஆவலாய் இருக்கிறதல்லவா!

No comments:

Post a Comment