Saturday, July 12, 2014

பெண்கள் நமது கண்கள்!

நாட்டில் பெண்கள் மீதான வன்முறை பற்றி ஏராளமான செய்திகள் வருகின்றன. பெண்களைத் துன்புறுத்துபவர்களுக்கு இதோ! இந்தக் கதை தெரிய வேண்டும்.
திருச்சி மன்னர் விஜயரங்க சொக்கநாதரிடம் கணக்கராகப் பணிபுரிந்தவர் தாயுமானவர்.
பெண்களை எல்லாம் அம்பிகையின் அம்சமாக கருதிய தாயுமானவர், தன் முப்பது வயதில் துறவில் ஈடுபட்டார். மன்னர் சொக்கநாதரும், "தன்னிடம் ஊழியம் பார்த்து ஊதியம் பெற்றவர் தானே' என்று எண்ணாமல் தாயுமானவர் மீது அன்பு கொண்டிருந்தார்.
வியாபாரி ஒருவர் மன்னருக்கு காஷ்மீர் கம்பளி ஒன்றைப் பரிசாக அளித்திருந்தார். அதன் அழகும், நேர்த்தியும் கண்ட மன்னர் அதை தாயுமானவருக்கு வழங்க விரும்பினார். ஒருமுறை தாயுமானவர் அரண்மனைக்கு வந்தபோது, அதை தன் அன்பு காணிக்கையாக மன்னர் வழங்கினார்.
கம்பளியுடன் புறப்பட்ட தாயுமானவர், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அன்னையைத் தரிசிக்கும்
ஆவலுடன் நடந்து சென்றார். கண்ணில் காணும் பெண்களை எல்லாம், பராசக்தியாக எண்ணி வணங்கினார்.
ஓரிடத்தில் ஒரு மூதாட்டி உடல்நலம் இல்லாமல் அவதிப்படுவதைக் கண்டார்.
""அம்மா! குளிர் தாங்க முடியலையே!'' என்று அவள் வாய் முனங்கிக் கொண்டு இருந்தது. நைந்து போன
கிழிசல் ஆடை உடுத்தியிருந்த அந்த பெண்ணைக் கண்ட தாயுமானவர், தன்னைப் பெற்ற தாயாக அவளைக் கருதி வருந்தினார். தன்னிடமிருந்த கம்பளியை அவளுக்குப் போர்த்தி விட்டார். இதைக் கண்ட அரண்மனைக் காவலன் ஒருவன், மன்னருக்கு விஷயத்தை தெரியப்படுத்தினான். பரிசாகக் கொடுத்த
கம்பளியை மதிக்காமல், அலட்சியப்படுத்தியதாக கருதிய மன்னர், தாயுமானவரைக் கைது செய்ய உத்தரவிட்டார்.
தாயுமானவர் மன்னரிடம், ""அனைத்து உயிர்களும் அம்பிகையின் அம்சமே! அன்னை அகிலாண்டேஸ்வரிக்கே அந்தக் கம்பளியை வழங்கினேன்,'' என்று சாந்தமாகப் பதில் அளித்தார்.
மன்னனுக்கு கோபம் அதிகமானது.
""நீர் அகிலாண்டேஸ்வரிக்கு கொடுத்தீர் என்றால், இப்போதே திருவானைக்காவல் கோயிலுக்கு செல்வோம். அங்கே, அம்பாளிடம் கம்பளி இருக்கிறதா என பார்க்கலாம்,'' என அவரை இழுத்துச் சென்றான். அங்கு அவன் கண்ட காட்சியால் சிலையாகிப் போனான். ஆம்!
இதழில் புன்னகை ததும்ப, அகிலாண்டேஸ்வரி காஷ்மீர் கம்பளியுடன் காட்சியளித்துக் கொண்டிருந்தாள். தாயுமானவரின் தெய்வீகநிலை அறிந்து, தலை குனிந்தான் தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அப்போது தாயுமானவர், ""எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே'' என அம்பிகையின் அருள் வெள்ளத்தில் கரைந்தபடி நின்றிருந்தார். பெண்கள் நமது கண்கள் என்பது புரிகிறதல்லவா!

No comments:

Post a Comment