Monday, July 14, 2014

மன தூய்மை....


மன தூய்மை....
ஆதிசங்கரர் எழுதிய ஒவ்வொரு துதியும் அற்புதமானது. அவைகளில் மிகவும் வியப்பான விஷயங்களைச் சொல்லும் ஒரு ஸ்தோத்திரம் பிரஸ்ன உத்தர (பிரஸ்னோத்தர= வினா விடை) ரத்ன மாலிகா. இது ஒரு கேள்வி பதில் துதி. மஹா பாரதத்தில் உள்ள யக்ஷப் ப்ரஸ்னம் போல கேள்வி—பதில் பாணியில் அமைந்தது. மொத்தம் 67 ஸ்லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் 3, 4 கேள்விகளும் பதில்களும் இருக்கும். சுமார் 200 கேள்விகளை அவரே எழுப்பி அழகான பதில்களைக் கூறுகிறார். அதில் ஒரு கேள்வியை மட்டும் காண்போம்.
யார் தூய்மையானவர்?
யாருடைய மனம் சுத்தமாக இருக்கிறதோ அவரே சுத்தமானவர்.
ஆதிசங்கரரின் மேற்கண்ட பதில் அருமையான பதில்.. மனம், சொல், உடல் (மனோ வாக் காயம்) மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இந்து மதம் ஒன்றிலேயே தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பொழுதுதான் மந்திர சித்தி உண்டாகும். உடலைத் தூய்மையாக வைப்பது எளிது. யானை முதல் காகம் வரை குளிப்பதைப் படத்தில் காண்கிறோம்..மனதைத் தூய்மையாக வைப்பதுதான கடினத்திலும் கடினம்.
காமம், க்ரோதம் (கோபம்), லோபம் (பேராசை) ஆகிய மூன்று தொடர்பாக நம் மனத்தில் வரும் எண்ணங்களை எல்லாம் ஒரு பேப்பரில் எழுதிவிட்டு, பின்னர் நாம் அதைப் படிக்க முயன்றால் வெட்கப்பட்டு பாதியிலேயே கிழித்து எறிந்து விடுவோம்.அவ்வளவு விகாரமான எண்ணங்கள் வருகின்றன. இதுதான் சந்யாயாசிகளுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம்.
ராம பிரானுக்கு விதிகளை மீற எவ்வளவோ வாய்ப்பு கிடைத்த போதும் அவர் தர்மத்தில் இருந்து இம்மியும் பிறழவில்லை. ஆகையால்தான் ராமாயணம் காலத்தால் அழியாத காவியமாக விளங்குகிறது.
யக்ஷப் ப்ரஸ்நத்தில் இப்படி ஒரு கேள்வி: 
எது ஸ்நானம்?
தருமனின் பதில்: மன அழுக்கைப் போக்குதல்.
பாரதி பாடுகிறான்:
துணி வெளுக்க மண்ணுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல் வெளுக்க சாம்பலுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணி வெளுக்க சாணையுண்டு—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம் வெளுக்க வழியில்லை—எங்கள்
முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
என்று பாடி மாரியம்மாவைச் சரண்புகுந்தோம் என்று முடிக்கிறார். இறைவனின் திருப்பாதங்களை எண்ணிச் சரணடைவதே மனம் வெளுக்க ஒரே வழி!
மனதை தூய்மையாக்க இறை நாமம் மற்றும் இறைவனிடம் அன்பு செலுத்துதல் (பக்தி) ஒன்றே சரியான மருந்து.....

No comments:

Post a Comment