Friday, July 18, 2014

குரு ஏன் அவசியம் ?

குரு ஏன் அவசியம் ?
கோடிக்கணக்கான ஜீவராசிகள் இந்த உலகத்தில் வாழ்கின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்று. மனிதன் பாவமும் செய்கிறான். புண்ணியமும் செய்கிறான். பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி அடுத்தடுத்துப் பிறவி அனுபவங்கள் வந்து வாய்க்கின்றன. ஆறறிவு பெற்ற மனிதன் மனித நிலையைக் கடந்து மேலும் முன்னேறி, பரம் பொருளோடு ஜக்கியமாகிவிட வேண்டும். அதற்குத் தக்கபடித் தெய்வ குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். தெய்வ நிலையை அடைய வேண்டும்.
முக்தி – வீடு பேறு தான் முடிவான லட்சியம்
தெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ. அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி! அதுவே மோட்சம்! அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை!
இந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள்.
நாமோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என மனம் போன போக்கெல்லாம் வாழ்ந்து, பாவ புண்ணியங்களைச் செய்தபடிச் செத்துச் செத்துச் பிறந்து கொண்டே இருக்கிறோம். இப்படியே பிறவிச் சக்கரமும் சுழன்று கொண்டே வருகின்றன.
பாவ புண்ணியத்துக்குத் தக்கபடி உலக அனுபவங்கள்
பக்குவம் பெற்று முன்னேறுவதற்காகப் பூமியில் பிறவி எடுக்கிறோம். பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். முக்திக்கு வேண்டிய கர்மங்களை மேற்கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம். தேவர்களாக முன்னேறிய ஆன்மாக்கள் கூட, மீண்டும் பூமியில் பிறந்து முக்திக்கு முயலவேண்டுமாம். அதனால் தான் இந்தப் பூமியைக் ’கரும பூமி’ என்கிறார்கள்.
ஏதோ ஒரு யுகத்தில் எப்படியாவது இந்த உயிர் மோட்சம் பெற்றே ஆக வேண்டும். அது வரை பிறவிகளும் தொடர்கதை! நமது பயணங்களும் தொடர்கதை. இவற்றையெல்லாம் தெளிந்து அறிந்து செயல்பட வைக்கத்தான். இந்த ஆறாவது அறிவுள்ள இந்த மனிதப் பிறவி.
நாம் கடந்த பிறவிகளில் செய்த பாவங்களில் பலன்கள் நம்மைத் துன்புறுத்தினாலும் இந்தப் பிறவியிலாவது கரையேற வழி தேட
வேண்டும்.
இந்த நுட்பமான ஆன்மிக உண்மைகளையெல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்துக் கரையேற்ற குரு ஒருவர் தேவை. தெய்வத்தை நமக்குக் காட்டிக் கொடுப்பவர் குரு. நம்மைக் கடவுளிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் சக்தி பெற்றவர் குரு. நாம் பரிசுத்தமான ஆன்மாக்களாக ஆனால் மட்டுமே மோட்சம் பெற முடியும் அப்படிப் பரிசுத்தமாகாத நம்மைச் நம்மைச் சுத்தப்படுத்துபவர் ஆன்மிக குரு.
அதனால் தான் குரு மூலமாக ஞானம் பெற்றுப் பரிசுத்தம் அடைந்து, அதன் பிறகு என்னிடம் வா! என்று ஆதிபராசக்தி ஆன்மிக உலகில் ஒரு சட்டம் போட்டு வைத்திருக்கிறாள். குருவருள் இல்லாமல் திருவருள் இல்லை என்று நம் அன்னை ஆதிபராசக்தியே அருள்வாக்கில் சொல்லிக் காட்டியிருக்கிறாள்.
கடவுளுக்கும் நமக்கும் பாலமாக இருப்பவர் குரு. தெய்வமே குருவாக நம்மிடம் வந்திருப்பது நம் அதிர்ஷ்டம்.
குருவை விட குருவின் திருவடிக்கே மதிப்பு அதிகம்.
நம் இஷ்ட தெய்வமே குருவடிவாக வந்திருக்கிறது என்ற நம்பிக்கை ஒருவனுக்கு வரவேண்டும். குருவையும் இஷ்ட தெய்வத்தையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. அப்படிப் பார்ப்பவனுக்கு எளிதில் முக்தி கிடைக்காது. பல பிறவிகள் எடுத்து அலைய வேண்டியது தான். ஆன்மிக உலகில் உள்ள ரகசிய உண்மை இது
குருவின் திருவடிகளை உறுதியாகப் பற்றிக் கொண்டால் சகலமும் கிடைக்கும் காரணம் குருவின் திருவடிச் சிறப்பு அத்தகையது.
குருவடி சரணம்! திருவடி சரணம்!! என்கிறோம். குருவின் திருவடிகளே நம் இஷ்ட தெய்வத்தின் திருவடி.
நம் கண்களுக்குப் புலப்படாத இறைவனின் திருவடிகளை நம்மால் பற்றிக் கொள்ள முடியாது. அவனே மானிடமாக ஆன்மிக குருவாகத் தன்னைஒளித்துக் கொண்டும், பக்தி மிக்கவர்க்கு பக்குவம் கொண்டவர்கட்கு தன்னை வெளிப்படுத்தி கொண்டும் நாடகமாடி வருகிறார்.
திருவடி பெருமை !
ஆதி சங்கரர் அம்மாவின் திருவடிகளை செளந்தர்யலகரியில் புகழ்ந்து போற்றுகிறார்.
“அம்மா! உன் திருவடிகள் எம் போன்ற பக்தர்களைக் காக்கின்றன. பயத்தை அகற்றுகின்றன.உன்னைத் தவிர வேறு யார் எங்களைக் காக்க முடியும்? கேட்பதற்கு அதிகமாகவே வரம் அருளும் தாய் அல்லவா நீ! உன் திருவடியை வணங்குகின்றோம். எம்மைக் காத்து ஆரோக்கியமாக வாழ ஆசிர்வதிப்பாயாக! என்று வேண்டுகிறார்.
குருவடி என்பது அவரவர் இஷ்ட தெய்வத்தின் திருவடி! இது தான் சூட்சமம்! ரகசியம்! புரிந்து கொள்ளுங்கள்.
விடியலில் படுக்கையை விட்டு எழுகிற போதும்… அன்றாடக் கடமைகளை முடித்து இரவு உறங்கச் செல்லும் முன்பும் உங்கள் குருவின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து நிறுத்துங்கள். மூலமந்திரமோ 108 போற்றியோ சொல்லும் போது மானசீகமாகத் திருவடிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
குருவை இறுகப் பற்றிக் கொள்வது இப்படித்தான்…
வேதங்களின் முடிவாக இருப்பது திருவடி
நாலு மறைகாணா அகப்பேய்
நாதனை யார் அறிவார்?
நாலு மறைமுடியும் அகப்பேய்
நற்குரு பாதமடி!
- என்று அகப்பேய்ச் சித்தர் பாடுகிறார். இறைவனை அறிய யாரால் முடியும்? நால் வேத முடிவாக இருப்பது நற்குரு பாதங்களே என்கிறார்.
ஆண்டவனையும், குருவையும் திருவடிகள் என்னும் பாதுகைகள் மூலம் வழிபடுவது ஒரு ஞான மரபு! இது அருவுருவ பூஜை!
குருகீதை சொல்வது
“தியானத்திற்கு மூலம் குருவின் “மூர்த்தி! பூஜைக்கு மூலம் குருவின் பாதம்”. மந்திரத்திற்கு மூலம் குருவின் வாக்கியம் [1-74]
குருவின் பாத பூஜை தீர்த்தம்
‘குருவின் பாத பூஜை தீர்த்தத்தைப் பருகி மிகுதியைத் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்’
“அஞ்ஞானத்தை வேருடன் களைவதும், பிறவியையும், காமத்தையும் போக்குவதுமாகிய குருவின் பாத தீர்த்தத்தை ஞானம் பெற வேண்டியும், வைராக்கியம் வர வேண்டியும் ஒருவன் பருக வேண்டும்” – என்றெல்லாம் குரு கீதை சொல்கின்றது.
குருவின் பெருமையையும் அவரின் திருவடி பெருமையையும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

No comments:

Post a Comment