Friday, July 18, 2014

தாகம் தீர்க்கும் தண்ணீர் தீர்த்தமாவது எப்போது தெரியுமா ?


தாகம் தீர்க்கும் தண்ணீர் தீர்த்தமாவது எப்போது தெரியுமா ?
ஜப்பானில் ஒரு விஞ்ஞானி தண்ணீரின் குணத்தினை ஆராய விரும்பினார். ஒரே நீரை பத்து பாத்திரங்களில் ஊற்றினார். கோயில், மருத்துவமனை, குப்பைகள் நிறைந்த இடம், சிறை, மக்கள் வசிக்கும் வீடு என வெவ்வேறு விதமான இடங்களில் வைத்தார். அவருக்கு மிகவும் ஆச்சர்யமான முடிவுகள் கிடைத்தன. கோயில், நன்மக்கள் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்ட நீர் அப்படியே இருந்தது. எதிர்மறை எண்ணங்கள் உள்ள இடங்களில் வைக்கப்பட்டிருந்த அதே நீரில் புழுக்கள் உண்டாகி நாற்றம் வரத் தொடங்கி இருந்ததாம். நீர் மிகவும் சென்சிடிவ் வான குணமுடையது.
அது இருக்கும் இடத்தில் உள்ள மக்களின் நேர்மறை, எதிர்மறை எண்ணங்களால் பாதிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட நீரைக் குடிப்பவர்களுக்கும் அதே போல நல்லதோ, கெட்டதோ ஏற்படுகிறது என்று அறிவித்தார். இதன் காரணமாகத்தான் நமது நாட்டிலும் நீர் புனிதமாகப் போற்றப்படுகிறது. வேத ஆத்மானம் புனிதே என்கிறது தைத்ரிய ஆரண்யகம். கும்பமேளாக்களும் அத்தனை விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. ஒரு பத்துபேரின் காரணமாக நீரின் தன்மை மாறும்போது, பக்திப் பரவசத்தோடு தெய்வ சிந்தனையோடு வரும் லட்சக்கணக்கான மக்கள் அங்கு நீராடும்போது அந்த நீர் எத்தனை சக்தி வாய்ந்ததாக மாறும்?
அதிலும் ஏராளமான சந்நியாசிகள், மடாதிபதிகள், புனிதர்கள் வந்து அச்சமயம் நீராடுகிறார்கள். மடாதிபதிகள் தங்கள் தங்கள் தொன்மையான மடத்தின் விக்ரகங்களைக் கொண்டு வந்து நீரினுள் வைத்துப் பூஜிப்பதும் அச்சமயத்தில் நடைபெறுகிறது. இத்தனை மகத்துவமும் ஒரு சேர நடந்து நீரின் தன்மை மிகச் சக்தி வாய்ந்ததாக மாறுவதால்தான் கும்பமேளாக்கள் இத்தனை போற்றப்படுகின்றன. அதற்குச் சிறப்பு சேர்ப்பது போல இயற்கையும் ஒத்துழைக்கின்றது. குறிப்பிட்ட கிரகங்கள் வானில் சேரும்போது அதன் நேர்மறைத் தாக்கமும், கதிர் வீச்சுக்களும் ஓரிடத்தில் கூடுகின்றன. அப்படித்தான் கும்பகோணத்தில், புஷ்கரில், கங்கையில் அந்தந்த இடத்தின் பூகோள அமைப்பிற்கு ஏற்ப கிரகசக்தி இறங்கும்போது கும்பமேளாக்கள் அமைக்கப்பட்டன.
இமயமலையில் குடி கொண்டிருக்கும் மகான்களும், பாபாஜிகளும், ரிஷிகளும் தங்களின் தவவலிமையை, சக்தியை கங்கையின் மூலமாக கீழே நிலத்திற்குக் கருணையோடு அனுப்புகின்றனர். அதனாலேயே கங்கை இத்தனை புனித நதியாகக் கருதப்படுகிறது. இப்போது நம் உடலில் 70 சதவீதம் நீர்தான் இருக்கிறது. நம்முடைய நேர்மறை எண்ணங்களோ, எதிர்மறை எண்ணங்களோ நம்முள் இருக்கும் நீரை எப்படி மாற்றும் என யோசித்துப் பாருங்கள். நம்முள் ஓடும் நீர் கங்கையாகவோ, கழிவு நீராகவோ இருப்பது நம் சிந்தனையில் தான் இருக்கிறது. நல்ல எண்ணங்கள் நல்ல நீராக ஆக்கி, ஆரோக்கியமான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உடலையும், உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். நீர் மாறினால் பேரும் மாறி விடுகிறது!
இங்கேயும் ஒரு கங்கை: திரிவேணி சங்கமத்தில் பச்சையாக கங்கையும், கருமையாக யமுனையும் ஓடி வந்து இரண்டும் கலந்து பின்னர் பழுப்பு வண்ணமாக கங்கை எனும் பெயருடனே தொடர்ந்து ஓடுகிறது. அதன் பின்னர் யமுனை எனச் சொல்வதில்லை. இந்த சங்கமத்தில் கங்கை தன் நிறத்தை இழக்கிறாள். யமுனை தன் பெயரை இழக்கிறாள். இதுதான் புனிதர்கள் ஒருவருக்கொருவர் தன்னையே கொடுத்து தியாகம் செய்யும் பண்பு எனலாம். இதையே ஒரு மஹா வாக்கியமாக வடமொழியில் த்யாகே நைகேன அம்ரு தத்வாய மான ஸஹா என்று உரக்கச் சொல்லப்படுகிறது. மேலும் உயர்ந்த ப்ரம்ம தத்துவத்தை ஒரு ஜீவன் அடைய வேண்டுமென்பதைக் குறிக்கும்.
நாம ரூப குண தோஷ வர்ஜிதம்...
ப்ரம்ம தத்வமஸி பாவ ஆத்மனி
என்பதும் ஒரு வேத மஹா வாக்யமாகும். நாம் தினமும் குளிக்கும்பொழுது கூட நாம் வைத்திருக்கும் பாத்திரத்தில் உள்ள நீர் மீது நம்முடைய உள்ளங்கையை வைத்து -
கங்கேச யமுனேசைவ கோதாவரி
சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி
ஜலைஸ்மின் சந்நிதிங்குரு
என்று 11 முறை ஜெபித்து குளித்தோமானால் நம் குழாய்த் தண்ணீர் கூட கங்கையை போல் புனித நீராக மாறி நமக்கு பாஸிடிவ் எனர்ஜியைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment