Sunday, July 20, 2014

பஞ்சபூத தியானம்

பஞ்சபூத தியானம்
அண்டத்தையும் பிண்டத்தையும் இணைப்பது தொண்டம் என்று ஶ்ரீவித்யையில் குறிப்பிடுவார்கள். அது போல அண்டத்தையும் பிண்டத்தையும் இணைக்கும் தொண்டனாக யோகம் திகழ்கிறது. உச்சியில், கயிலாய மலைமேல் இருக்கும் பரத்தை அடைய மலையைச் சுற்றிலும் பல வழிகள். எல்லாம் மலைக்கு மேலேதான் சென்று சேருகின்றன. அதைப் போலவே யோகங்களும் பலவிதமாக இருந்தாலும் பயன் ஒன்றுதான். ஏன் அப்படி? என்ற கேள்வி கேட்பவர்களுக்கு, ஒன்றைச் சொல்வேன். என்னவென்றால் இறையாற்றலாகிய இயற்கை பலவித பரிமாணங்களில் விரிந்து பரிணமித்திருப்பதால், அதில் எந்த விஷயத்தின் உள்ளே நீங்கள் மனதினால் சங்கமித்தாலும், இறைவனை அடையலாம். எனவேதான் கல்லிலும் கடவுளைக் கண்டு முக்தி அடைந்த ஞானிகளையும் காண்கிறோம். மன ஒருமைப்பாட்டுடன் உலகில் எந்த விஷயத்தைத் தொட்டாலும் இறையாற்றல் உங்களை உறிஞ்சி எடுத்து தன்னோடு ஐக்கியப்படுத்திக் கொள்ளும். வேதாத்ரியத்தில் பஞ்சபூத நவக்கிரக தவம் என்று ஒரு தவமுறையைக் கற்றுத் தருவார்கள். அதை முறையாகத் தவறாமல் கடைபிடித்து சில இக்கட்டான நேரங்களில் நான் சௌகர்யம் அடைந்திருக்கிறேன். இது என் அனுபவம். இதைப்போல நம் முன்னோர்கள் அண்டத்தில் உள்ள பஞ்ச பூதங்களையும், பிண்டத்தில் உள்ள பஞ்சபூதங்களையும் இணைத்து தியானிப்பார்கள். இதை பஞ்சபூத தியானம் (அ) பரந்த தியானம் என்பார்கள். நம் உடலில் உள்ள பஞ்சபூதங்களினால் விளையும் உணர்ச்சிகளை அதன் போக்கில் விடாமல் கட்டுப்படுத்தி வெற்றி கொண்டோமானால், அண்டத்தின் இயற்கை சக்திகளை நம் விருப்பம் போல கையாளலாம். அந்த ஆற்றல் வந்து விடும். அதை அஷ்டமகா சித்தி என்பார்கள். நம் உடலாகிய பிண்டம், அண்டத்தோடு நமது மற்றொரு நுண்ணிய சரீரம் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. அதன் மூலமே அண்டத்தின் சக்திகள் நம் ஏழு ஆதாரங்களையும் தூண்டி செயலாற்றச் செய்கிறது. ஸ்தூல உடலில் உள்ள அந்த ஆதாரங்கள் பரு உடலின் நரம்பு மண்டலம் மூலமாக நம் முதுகெலும்பில் உள்ள ஏழு நரம்பு மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய தேகத்தில் வெளி ஆகாயத்தையும், பிராண வாயுவில் வெளி வாயுவையும், ஜடராக்கினியில் வெளி அக்னியையும், அப்புவின் அம்சத்தில் நீரையும், பிருதிவி அம்சத்தில் பூமியையும் சேர்த்து தியானிக்க வேண்டும். இவற்றிற்கு முறையே அ – ய – ர – வ – ல என்ற மந்திர அட்சரங்களை மனதுக்குள் உச்சரிக்க வேண்டும். அதாவது, பாதம் முதல் முழங்கால் வரை – பிருதிவி ஸ்தானம்.
முழங்காலுக்கு மேல் இடுப்பு வரை – நீர் ஸ்தானம்.
இடுப்புக்கு மேல் இருதயம் வரை – அக்னி ஸ்தானம்.
இருதயத்திலிருந்து புருவ நடு வரை – வாயு ஸ்தானம்.
அதிலிருந்து சிரசு உச்சி வரை – ஆகாய ஸ்தானம்.
இனி நீங்கள் ஆரம்பிக்கலாம். உங்கள் சுவாசத்தை பிருதிவி ஸ்தானத்தில் நிறத்தி ‘லம்’ என்ற கந்த பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானத்தில் இருக்க வேண்டும். இது நம் பிருதிவி அம்சத்தை பூமியோடு இணைக்கும் மூலாதார தியானமாகும். இதில் வெற்றி பெற்றவர்கள் மண்ணுக்குள் நாட்கணக்கில் இருந்தாலும் மரணம் சம்பவிக்காது. உடலுக்கோ உயிருக்கோ மண்ணால் எந்த சேதாரமும் ஏற்படாது.
சுவாசத்தை நீர் ஸ்தானத்தில் நிறுத்தி ‘வம்’ என்ற பீஜ அக்ஷரத்தை ஜபித்தபடி தினமும் இரண்டு மணி நேரம் தியானித்திட, நீரில் மிதக்கும் சித்தி கிடைக்கும். கடலுக்குள் சஞ்சரிக்கும் சித்தியைத் தரும். இந்தியானத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு நீரால் மரணம் ஏற்படாது.
சுவாசத்தை அக்னி ஸ்தானத்தில் நிறுத்தி ‘ரம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணிநேரம் தியானம் செய்ய வேண்டும். இதில் வெற்றி அடைந்தவர்களை நெருப்பு சுடாது. அக்கினியால் மரணம் ஏற்படாது.
சுவாசத்தை வாயு ஸ்தானத்தில் நிறுத்தி ‘யம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானிக்க வேண்டும். இதில் வெற்றியடைந்தவர்களுக்கு வாயு வேகம், மனோ வேகம் பெற்று எங்கும் சஞ்சாரம் செய்யும் சித்தி கிட்டும். இவர்களுக்கு வாயுவால் மரணம் ஏற்படாது.
அடுத்து சுவாசத்தை ஆகாய ஸ்தானத்தில் நிறுத்தி ‘அம்’ என்ற பீஜ அக்ஷரத்துடன் தினமும் இரண்டு மணி நேரம் தியானத்து, சாதனையில் வெற்றி அடைந்தவர்களுக்கு ககன மார்க்கத்தில் சஞ்சரிக்கும் சித்தி கிட்டும். இவர்களுக்கு ஆகாயத் தத்துவத்தால் மரணம் ஏற்படாது. இந்த பஞ்சபூதத் தியானத்தில், அல்லது பரந்த தியானத்தில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது. அது என்ன வென்றால் மனிதனுக்கு மரணம் பஞ்சபூதங்கள் வாயிலாகவே நடைபெற்றாக வேண்டும். அவற்றை ஒருவர் வென்று விட்டால் அவரை மரணம் தீண்ட முடியாதல்லவா ? இதில் வென்றவர்கள் மரணத்தை வெல்லலாம். தன் சரீரத்தை காற்றில் கரைக்கலாம். மீண்டும் சேர்த்து உருவமாகலாம். நம் சித்தர்கள் இந்த உபாயத்தைக் கைகொண்டுதான் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து இமயத்தில தவத்தில் இருக்கிறார்கள். அவர்களை போகர் இமயத்தில் போய் பார்த்துவிட்டு வந்து சொன்னது. அவரது பாடல்களில் உள்ளது. நம் தமிழகம் செய்த பெரும் பேற்றினால், நமக்குக் கிடைத்த மகா ஞானியும், சன்மார்க்க யோகியுமான அருள் பிரகாச இராமலிங்க அடிகளார் அவர்கள் இந்த முறையைக் கையாண்டுதான் காற்றில் கரைந்து ஒளியாகத் திகழ்கிறார். எனவே வள்ளலாரின் சன்மார்க்க நெறியில் ஒழுகி அவர் வழியில் நாமும் சென்று உலகுக்கு ஒளியாகத் திகழ்வோமாக.

No comments:

Post a Comment