Thursday, July 3, 2014

சுதர்மம்

சுதர்மம்

ஒரு மனிதன் பிறக்கும் போதே அவன் சுதர்மமும் பிறந்து விடுகிறது.
ஒருவன் எதற்காக படைக்கப்பட்டானோ அதைச் செய்வது அவன் சுதர்மம். 
ஒருவனுடைய சுதர்மம் அவன் உண்மையான இயல்பையும், 
மனப்போக்கையும் ஒத்து அமைவது. அந்த சுதர்மத்தை ஒட்டியே அவன் 
திறமைகளைப் பெற்றிருப்பான். அதை செய்வதாலேயே அவன் அமைதி 
அடைய முடியும். இதில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று ஒன்றும் கிடையாது. 
சுலபம், சிரமம் என்றெல்லாம் கணக்கிட்டு எடுத்துக் கொள்வதோ, தள்ளி 
விடுதலோ கூடாது.

பிறரது தர்மம் சில சமயங்களில் சிறந்ததாகத் தோன்றலாம். ஆனால் அதைக் 
கடைபிடிப்பதால் நன்மை உண்டாகாது. வினோபா கூறுவார்: “மீன்களிடம் 
‘நீரை விட பால் அதிக மதிப்புடையது. அதனால் நீங்கள் பாலில் வந்து 
வாழுங்கள்’ என்று எவரேனும் சொல்வாராயின் மீன்கள் அதை ஏற்குமா? 
மீன்கள் நீரில் தான் வாழும். பாலில் அவை இறந்து போகும்”.

அதே போல பிறரது தர்மம் சுலபமாகத் தோன்றலாம். அப்படி தோன்றி அதைக்
கடைபிடித்தாலும் அது ஒருவர் வாழ்வை சிறப்பிக்காது. அர்ஜுனனுக்கு இந்த 
போரைச் செய்வதை விட சன்னியாசம் பெற்றுக் கொண்டு எங்காவது போய் 
விட்டால் நிம்மதி கிடைக்கும் என்று தோன்றினாலும் அவனால் 
உண்மையாக சன்னியாசியாக முடியுமா? 

காட்டுக்கே போனாலும் எல்லாவற்றையும் துறந்து விட அவனால் முடியுமா? அஹிம்சையை அவனால் பின்பற்ற முடியுமா? அவனால் சும்மா இருக்க முடியுமா? ஓரிரு நாட்களுக்கு அவனது இயல்பான தன்மைகளை அவன் அடக்கி வைக்கலாம். 

ஆனால் அத்தன்மைகள் விரைவில் அவனையும் மீறியல்லவா வெளிப்படும்.
இது அவன் பிரச்னை மட்டுமல்ல. நம்மில் பலருடைய பிரச்னையும் தான். 

நமக்கு அடுத்தவர்கள் தொழில் சுலபமாகத் தெரியும். இக்கரைக்கு அக்கரை 
பச்சை என்பது போல், நம்முடைய வேலைகளில் இருக்கும் எல்லா 
கஷ்டங்களும் தெரியும் நமக்கு அடுத்தவர்கள் தொழில் பிரச்னை 
இல்லாததாகத் தெரியும். அவரவர் தொழிலில் உள்ள பிரச்னைகளை 
அவரவரே அறிவார்கள். 

அடுத்தவர் தொழிலை சில நாட்கள் செய்து 
பார்த்தால் தான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும். எனவே பிரச்னைகளைப் 
பார்த்து பின்வாங்கி அடுத்தவர்களுடைய கடமையோ, தொழிலோ 
நம்முடையதை விட சிறந்தது என்று எண்ணுவது உண்மைக்குப் புறம்பானது.

எதற்காகப் பிறந்தோமோ அதைச் செய்யாமல் யாரும் தங்கள் வாழ்வில் 
நிறைவையும், அமைதியையும் பெற முடியாது. இது இந்தக் காலத்திய 
மனிதர்கள் அலட்சியம் செய்யும் ஒரு மாபெரும் உண்மையாகும். இன்று 
தொழிலில் உயர்வு, தாழ்வு என்று பார்க்கிறோம். இலாப நஷ்டங்கள் 
பார்க்கிறோம். 

ஆனால் நம் இயல்புக்கும், திறமைக்கும் ஏற்ற தொழில் தானா, 
இதில் நமக்கு மனநிறைவு கிடைக்குமா என்றெல்லாம் பார்க்க மறந்து 
விடுகிறோம். இன்றைய இளைஞர்களை மூளைச்சலவை செய்து 
டாக்டர்களாக்கவும், இன்ஜீனியர்களாக்கவும் மட்டுமே ஆக்க, 
படாத பாடு படும் 
பெற்றோர்கள் இதை எண்ணிப்பார்க்க மறந்து விடுகிறார்கள்.

எதில் நமக்கு உண்மையான ஈடுபாடு உள்ளதோ அதை ஒட்டியே நம் சுதர்மம் 
அமையும். எது சுதர்மம் என்று அறிந்து கொள்ள அங்குமிங்கும் செல்ல 
வேண்டாம். 

மனதினுள் ஆத்மார்த்தமாகக் கேட்டுக் கொண்டால் போதும். 
அப்போது பதில் கிடைக்கும். சுதர்மத்தின் வழியே நடக்கையில் கிடைக்கும் 
சந்தோஷமே அலாதி. அப்படி நடக்கையில் தான் ஒரு மனிதன் உண்மையாக 
வாழ்கின்றான்.

No comments:

Post a Comment