Thursday, July 3, 2014

இறைவனின் அன்புக்கும் கருணைக்கும்தான் நிகரேது…!

இறைவனின் அன்புக்கும் கருணைக்கும்தான் நிகரேது…!

சொர்க்கமா…நரகமா…? 

இரண்டு பேர் இறைவனின் முன்னால் நிறுத்தப்பட்டார்கள். உலகத்தில் இருக்கும் போது பாவங்களை அதிகமாகச் செய்தவர்கள் அவர்கள்.
அவர்கள் செய்த நன்மைகளையும் தீமைகளையும் கணக்கிட்டுப் பார்த்த இறைவன் தீர்ப்புச் சொன்னான்.

”நீங்கள் இருவரும் நரகத்துக்குப் போங்கள். உங்களின் பாவங்களுக்கு அதுதான் தண்டனை…!”

அவ்வாறு இறைவன் சொன்னதுதான் தாமதம்…ஒருவன் வெகு வேகமாக ஓடிச் சென்று நரகத்துக்குள் குதித்து விட்டான். மற்றவனோ, நரகத்தை நோக்கி மெதுவாகப் போவதும், இடையில் நின்று திரும்பி இறைவனைப் பார்ப்பதுமாகச் சென்று கொண்டிருந்தான்.

அவனை இறைவன் அழைத்தான்.

”உன்னை நரகத்துக்குப் போகும்படி நான் கூறினேன். ஆனால் நீ இப்படி மெதுவாகப் போகிறாயே…உனக்கு என்ன திமிர்..?” என்று இறைவன் அவனிடம் கேட்டான்.

அவன் சொன்னான்:

” இறைவா…நீ பாவங்களை மன்னிப்பவன்.அத்தோடு, இரக்கமும் கருணையும் உள்ளவன். நரகத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும் என் மீது உனக்கு எந்த நிமிடத்திலும் கருணை பிறந்து விடலாம்..இரக்கம் வந்து விடலாம்…அப்போது நீ என்னைத் திருப்பி அழைத்து ‘சரி..உன் பாவங்களை மன்னித்தேன்..நீ சொர்க்கத்துக்குப் போ..’ என்று சொல்லிவிடுவாய் என்ற எதிர்பார்ப்பில்தான் நான் உன்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்து மெதுவாகச் சென்றேன்…!” என்றான்.

இறைவனுக்கு உணமையிலேயே அவன் மீது இரக்கம் வந்து விட்டது.

”சரி நீ சொர்க்கத்துக்குப் போ..” என்று அவனை சொர்க்கத்துக்கு அனுப்பிவிட்டு, சற்று முன்னர் ஓடோடிச் சென்று நரகத்துக்குள் குதித்தவனைக் கூட்டி வரும்படிக் காவலர்களைப் பணித்தான்.
காவலர்கள் அவனை அழைத்து வந்தனர்.

”அது என்ன..’நரகத்துக்குப் போ..’ என்று நான் சொல்லி முடிக்கும் முன்னமே நீ ஓடிச் சென்று நரகத்தில் குதித்து விட்டாய்…?” என்று இறைவன் கேட்டான்.

அதற்கு அவன், ”இறைவா…நீ சொன்ன எதையுமே நான் கேட்காமல் உலகத்தில் பாவங்கள் செய்து கொண்டிருந்தேன். அங்கேதான் நீ சொன்னதை நான் கேட்கவில்லை. இங்கேயாவது உன் கட்டளைக்கு மாறு செய்யாமல், அதனை ஏற்று நடப்போமே..என்றுதான் ஓடிச் சென்று நரகினுள் குதித்தேன்..” என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டதும் அவன் மீதும் இறைவனுக்குக் கருணை பிறந்து விட்டது. இறைவன் சொன்னான்:

”சரி..சரி…நீயும் சொர்க்கத்துக்குப் போ..!”

No comments:

Post a Comment