Thursday, July 17, 2014

அம்மன் சிலையும் படிக்கல்லும்

அம்மன் சிலையும் படிக்கல்லும்
ஓரு ஊரில் ஒரு சிற்பி இருந்தான். கோயில் கர்ப்பக்கிரகத்தில் வைப்பதற்கான சிலையை அவன் செதுக்க வேண்டியிருந்தது. கடைசியில் தன் தேவைக்கு ஒத்துவருகிற ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்தான். அந்தக் கல்லைச் சமமாக இரண்டாக்கினான். ஒன்றைச் செதுக்கி அம்மன் சிலையாக்கினான். மற்றொன்று அந்த அம்மன் சிலைக்கு எதிரே படிக்கல்லாகப் போடப்பட்டது. அந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
கோயிலுக்கு பக்தகோடிகளின் கூட்டம் அலைமோதியது. வரும் பக்தர்கள் அனைவரும் அம்மன் சிலைக்கு முன்னேயிருக்கும் படியில் கால் வைத்து அம்மனைப் பரவசத்துடன் வழிபட்டுச் சென்றனர். பக்தர்களின் காலடி பட்டுப்பட்டு உடம்பு ரணமான அந்தப் படிக்கல், ஒரு நாள் தாங்க முடியாமல் அம்மன் சிலையிடம் கேட்டது, “நீயும் நானும் ஒரே கல்லிலிருந்துதானே பிறந்தோம். நானோ மிதிபட்டுக்கொண்டிருக்கிறேன்: நீயோ கடவுளாகிவிட்டாய். இது எப்படி?”
அதற்கு அம்மன் சிலை பதில் சொன்னது, “இருவரும் ஒரே கல்லில் இருந்துதான் பிறந்தோம். ஆனால், சிற்பியின் உளியால் நான் செதுக்கப்பட்டு பக்குவப்பட்டபோது அடைந்த ரணம் சாதாரணமானதல்ல. படாத பாடுபட்டேன். அதனால் இந்த நிலையை அடைந்தேன். நான் செதுக்கப்பட்டபோது என்னைப் பார்த்து நகைத்துக்கொண்டு மணல் மீது நீ படுத்துக்கொண்டிருந்தாய். இன்றைக்கு வெறும் கல்லாய்க் கிடக்கிறாய். வாழ்வில் கஷ்டப்படுகிறவன்தான் மேலே வருவான்” என்றது

No comments:

Post a Comment