Monday, September 15, 2014

சங்கஷ்ட ஹர சதுர்த்தி பற்றி தெரியுமா?

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியை, சங்கடஹர சதுர்த்தியாக அனுஷ்டிப்பது உங்களுக்கு தெரியும். விநாயகர் வழிபாட்டிற்கு மிகவும் விசேஷம். ஆனால், சங்கஷ்ட ஹர சதுர்த்தி பற்றி தெரியுமா?
அதன் வரலாறு...
தேய்பிறை சதுர்த்தியின் அதிபதியான சக்தி, விநாயகரை வழிபட்டு, தனக்கும் வளர்பிறை சதுர்த்தியைப் போலவே பேறு வேண்டும் என வேண்டினாள்.
அப்போது விநாயகர், ""தேவி! சந்திர உதய காலத்தில் நீ என்னை வழிபட்டதால் கிருஷ்ணபட்ச சதுர்த்தியும், சந்திரோதயமும் கூடிய காலம் மிகவும் முக்கியமான விரத காலமாகும். அப்போது என்னை வழிபடுபவர்களுக்கு சங்கடங்களை எல்லாம் நீக்கி சர்வ மங்களங்களையும் அருளுவேன். உனக்கு "சங்கஷ்ட ஹரணி' என்ற பெயர் உண்டாகட்டும்!'' என்று அருள்புரிந்தார்.
அதன் காரணமாகவே, சங்கஷ்டஹர சதுர்த்தி என்று சொல்லும் வழக்கம் இருந்தது. காலப்போக்கில் சங்கடஹர சதுர்த்தி ஆகி விட்டது. அதாவது துன்பத்தைப் போக்கும் சதுர்த்தி எனப் பொருள் மாற்றம் பெற்றது.
மாசிமாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தியும், செவ்வாயும் சேர்ந்தநாளில் நவக்கிரகங்களில் ஒருவரான அங்காரகன்(செவ்வாய்) வழிபட்டு பேறு பெற்றான். அன்று முதல் சங்கட ஹர சதுர்த்தி செவ்வாய்க் கிழமையில் வந்தால், "அங்காரக சதுர்த்தி' என அழைக்கப்பட்டது.
அங்காரகனாகிய செவ்வாயே கடன், வியாதி முதலியவற்றுக்கு அதிபதி. ஆகையால், இந்த விரதம் செவ்வாயின் அருளைத் தருவதோடு, விநாயகரின் அருளையும் நமக்கு அளிக்கும்.
சங்கடஹர சதுர்த்தியன்று சந்திரோதயம் ஆகும் போது சதுர்த்தி திதி இருப்பது அவசியம்.
விரதமிருப்பவர்கள் காலை முதல் சந்திர உதயகாலம் வரை தண்ணீர் தவிர வேறெதுவும் அருந்தக் கூடாது.
சந்திரனைப் பார்த்த பின்னர், விநாயகருக்குப் பூஜை செய்து உப்பு, காரம் சேர்க்காத உணவை உண்ண வேண்டும். இந்த முறையில் கிருதவீர்யன் என்பவன், கார்த்தவீர்யன் என்னும் வீரனை மகனாகப் பெற்று பேரரசை அடைந்தான்.
சந்திரனும் இந்த விரதபயனால் தனக்கு ஏற்பட்ட காசநோய் நீங்கி நல்வாழ்வு பெற்றான்.
அனைத்திற்கும் மேலாக புருசுண்டி முனிவர் நரகத்தில் தவித்த தன் முன்னோர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்தார்.
நமது சந்ததியின் நன்மைக்காகவும், நோய் நீங்கவும், முன்னோர்களின் அருளைப் பெறவும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடிப்போம். விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சதுர்த்தி விரதத்தை "மகா சங்கடஹர சதுர்த்தி' என்பர். அன்று விநாயகரை நினைத்து விரதமிருந்து, சங்கடங்களுக்கு எல்லாம் விடை கொடுப்போம்.

No comments:

Post a Comment