Friday, September 19, 2014

பிராமணன் என்றால் யார்?

பிராமணன் என்றால் யார்?
ஹிந்து மதத்தை குறைசாற்றும் குருடர்களுக்கு எப்பவும் தெரிவது இந்த பிராமணன். அவர்களுக்கு தெரிந்தவரை பிராமணன் என்றால் அவர்களுக்கு தனி சலுகைகள் உண்டு அவர்கள்தாம் நம்மை ஆளுகிறார்கள் என்று கற்பனை கோட்டை அவர்களை சூழ்ந்து கொண்டு உள்ளது. ஆனால் பாவம் நாம் என்னதான் பிராமணன் யார் என்று சொன்னாலும் கூட அவர்களுக்கு அது விளங்காது, இருந்தாலும் நம் மதத்தினரே சில பேர் பிராமணர்களை வெறுக்கிறார்கள், காரணம் அவர்கள் உயர்ந்தவர்கள் என்று அவர்கள் நினைத்துகொண்டார்கள். பிராமணன் என்றால் யார் என்று நம் வேதங்கள் சொல்வதை பார்ப்போம்.
சாம வேதம்….….வஜ்ரஸுசிகோபநிஷத்து
ஸ்லோகம்1.இந்த உபநிஷத்து அக்ஞானத்தை அகற்றும் சாஸ்த்திரம்
ஸ்லோகம் 2.பிராம்மணர் சத்திரியர் வைசியர் சூத்திர் என்று நான்கு வர்ணங்கள் உள்ளன.அவற்றுள் பிராம்மணன் என்றால் யார்? ஜீவனா?,தேகமா? ஜாதியா? ஞானமா? கர்மமா? தர்மமா?
ஸ்லோகம் 3.முதலில் ஜீவன் பிராம்மணன் என்றால் அது ஒவ்வாது.சென்றதும் வரப்போவதுமான பல தேகங்களில் ஜீவன் ஒரே வடிவாயிருப்பதாலும்.ஒருவனேயானாலும் கர்ம வசத்தால் பல உடல்கள் ஏற்படுவதாலும்,எல்லா உடல்களிலும் ஜீவன் ஒரே மாதிரி இருப்பதாலும் ஜீவன் பிராம்மணன் இல்லை.
ஸ்லோகம் 4.உடல் பிராம்மணன் என்றால் அதுவும் பொருந்தாது.அனைத்து சாதியினருக்கும் உடல் ஒரே மாதிரி இருக்கிறது.உடலில் வெள்ளை,சிவப்பு,மஞ்சள்,கருப்பு என பல நிறங்கள் இருந்தாலும் உடல் பிராம்மணன் இல்லை.
ஸ்லோகம் 5.பிறப்பின் அடிப்படையில் வரும் ஜாதியினால் ஒருவன் பிராம்மணனா என்றால் அதுவும் இல்லை. ருஷ்யசிருங்கர், கௌசிகர், ஜாம்புகர்,வால்மீகி,வியாசர்,கௌதமர்,வஸிஸ்டர்,அகத்தியர் போன்ற பல ரிஷிகள் பிராம்மண குலத்தில் பிறக்கவில்லை.ஆகையால் பிறப்பின் அடிப்படையில் ஒருவன் பிராம்மணன் இல்லை.
ஸ்லோகம் 6.அறிவால் பிராம்மணன் என்றால் அதுவும் பொருந்தாது,அனைத்து சாதியிலும் அறிவாளிகள் இருக்கிறார்கள்.ஆகையால் அறிவால் பிராம்மணன் என்பதும் இல்லை.
ஸ்லோகம் 7.கர்மத்தால் பிராம்மணன் என்றால் அதுவும் இல்லை.எல்லா உயிர்களுக்கும் பிராரப்தம்,ஸஞ்சிதம்,ஆகாமி என்ற கர்மங்கள் பொதுவாக காணப்படுவதால் பூர்வ கருமத்தின் விளைவால் ஜனங்கள் கிரியைகளைச் செய்கிறார்கள்.ஆகையால் கர்மத்தாலும் பிராம்மணர்கள் இல்லை.
ஸ்லோகம் 8.தானங்கள் வழங்குவதால் பிராம்மணர்கள் என்றால் அதுவும் இல்லை.சத்திரிய முதலான பிற ஜாதியினரும் தானங்கள் செய்கிறார்கள்
ஸ்லோகம் 9.அப்படியானால் யார் தான் பிராம்மணன்.எவனொருவன் இரண்டற்ற சச்சிதானந்த ஸ்வரூபனாகவும் ஜாதி,குணம்,கிரியை அற்றதும்,பிறப்பு முதலான நிலைகள் இல்லாதவனாகவும் ,ஸத்யம் ஞானம் அனந்தம் என்ற ஸ்வரூபமாகவும்,தான் நிர்விகல்பமாகவும்,எல்லா உயிர்களுக்குள்ளும் உள்ளே நின்று இயங்குவதாயும் சமம்,தமம்,உள்ளவன் விருப்பு வெறுப்பு அற்றவன்,ஆசை மோகம் முதலியவை இல்லாமல் அகங்காரம் விட்டவன்.இவனே பிராம்மணன்.இவனே பிராம்மணன் என்பது சுருதி,ஸ்மிருதி,புராண,இதிகாசங்களின் கருத்து.இதற்கு புறம்பாக பிராம்மணத்தன்மை இல்லவே இல்லை.ஸச்சிதானந்தமானதும் இரண்டற்றதுமான பிரம்மமாக ஆத்மாவை உணரவேண்டும். ஸச்சிதானந்தமானதும் இரண்டற்றதுமான பிரம்மமாக ஆத்மாவை உணரவேண்டும். அவனே பிராமணன். இது வேத வாக்கு..
ஹிந்துக்களே நாமும் உண்மை பிராமணனாக இருக்க வேண்டும். அதுதான் நமது லட்சியம். அது தான் சனாதன தர்மத்தின் அறுதி உண்மை

No comments:

Post a Comment