Monday, September 15, 2014

நல்ல வேளை........ ராமர் காலத்தில் நான் பிறக்கவில்லை!

அம்மனுக்குரிய ஆடி மாதத்தில், நமது சிந்தனையைத் தூண்டிவிடும் மகாபெரியவரின் அருளுரையைக் கேட்போமா!
"நான் தான் இதைச் செய்தேன்' "இதை சாதித்துக் காட்டினேன்' என்று கர்வத்தோடு பேசுவது கொஞ்சம் கூட நியாயமானது அல்ல. நாம் எதையும் சாதிப்பதற்கான புத்தியோ, தேகபலமோ எங்கிருந்து வந்தது? இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் அத்தனை காரியமும் எப்படி நடக்கிறது.
நாம் செய்கிற செயல்களுக்குரிய சக்தியெல்லாம் ஒரு மகாசக்தியிடம் இருந்தே வந்திருக்கிறது.
அது இல்லாவிட்டால் நம்மால் மூச்சாவது விட முடியுமா? வாழ்வில் இத்தனை சாதனை புரிந்ததாக எண்ணி கர்வப்படுகிற நம்மை விட்டு சுவாசம் போய் விடுகிறது. அதைப் பிடித்து வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் நமக்கு கொஞ்சமும் கிடையாது. அப்போது, நம் சக்தியெல்லாம் கனவு போல காணாமல் போய் விடும். சக்தி சமுத்திரமாக இருக்கும் அம்பிகையின் ஒரு துளி அனுக்ரஹத்திலேயே நடக்கிற காரியங்களை எல்லாம் நம்முடையதாக எண்ணி அகந்தை கொள்வது அசட்டுத்தனம் தான் என்பது புரியும். எத்தனைக்கெத்தனை இதை அனுபவத்தில் தெரிந்து கொண்டு அம்பிகையின் முன் ஒரு துரும்பு போல அடங்கி கிடக்கிறோமோ அத்தனை அளவுக்கு அவளின் அருளை அதிகம் பெற முடியும்.
அவதார புருஷர்களாக வந்தவர்கள் கூட இந்த அடக்கத்தை நமக்கெல்லாம் போதிப்பதற்காக தாங்களே வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ராமசந்திர மூர்த்தி தர்மத்திற்கும், சத்தியத்திற்கும், சாஸ்திரத் திற்கும் அடங்கி மனிதனாக வாழ்ந்து காட்டி இருக்கிறார். அவருடைய அடக்கத்தை நினைக்கும்போது, எனக்கு தோன்றுகிற எண்ணத்தைச் சொன்னால் விசித்திரமாக இருக்கும். எல்லாரும் ராமர் பிறந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என வருத்தப்படுகிறார்கள் அல்லவா? எனக்கோ நான் அப்படி பிறக்காமல் போனதே நல்லது தான் என்று தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ராமர், தாம் ஒரு க்ஷத்திரியர் என்பதால் அடக்கத்தோடு வேத வித்துக்களையும், ரிஷிகளையும், ஆச்சாரியர்களையும் விழுந்து விழுந்து நமஸ்கரித்தார். அவர் காலத்தில் ஒரு மடாதிபதியாக இருந்தால், என்னையும் அவர் வந்து நமஸ்கரிக்கும்படியாக ஆகி விடும்.
அது எத்தனை தர்மசங்கடமாக இருக்கும்! இப்போதோ, அவரை நான் நமஸ்காரம் செய்து சந்தோஷப்பட முடிகிறது. நாம் நன்றாக எழுதுகிறோம், பேசுகிறோம், பாடுகிறோம், வேறு ஏதோ காரியம் செய்கிறோம் என்று உலகமே புகழ் மாலை போடுகிறது. அந்த சமயத்தில் நமக்குத் தலைக்கனம் ஏறத் தான் தொடங்கும். ஆனால், இந்த புகழ் மாலைக்குப் பாத்திரமாகி அகந்தை கொள்ள, நமக்கு கொஞ்சமும் உரிமை இல்லை என்று உணர வேண்டும். வருகிற பெருமையை எல்லாம் பராசக்தியின் பாதார விந்தங்களில் அர்ப்பணித்து விட வேண்டும். அப்போது நமக்கு ஒரு குறையும் இல்லாமல் அந்த அம்பிகையே அருள் புரிவாள்.

No comments:

Post a Comment