Monday, October 20, 2014

பெரும் ஆரவாரமும், அதைத் தொடர்ந்து வந்த கூச்சலும், அதுவரை அமைதியாக இருந்த அந்த இடத்தை பெரும் களேபர பூமியாக மாற்றியிருந்தது. தொடர் விவாதங்கள், கேள்விகள், பதில்கள் என்று அந்த இடம் சந்தைக் காடாகிப் போயிருந்தது.

அந்த ஆசிரமத்தைச் சேர்ந்த குருவுக்கு அது மிகவும் வினோதமாக தெரிந்தது. நாலா புறங்களிலும் இருந்து வந்த குரல்களில் ஒன்று அவருக்கு மிகவும் தெரிந்த குரல் போன்று இருக்கவே, அந்தக் குரலை உற்றுக்கேட்டார். அது தன் பிரதான சீடர்களுள் ஒருவனின் குரல் என்பதை அவர் கண்டு கொண்டார்.

உடனடியாக அந்த சீடனை தன் அறைக்கு வரும்படி வரவழைத்தார் குரு. பின்னர் கூச்சல், குழப்பத்திற்கான காரணத்தைக் கேட்டார். அதற்கு அந்த சீடன், ‘குருவே! அறிஞர்களின் குழு ஒன்று உங்களைக் காண்பதற்காக வந்துள்ளது. ஆனால் அவர்கள் உங்களைப் பார்ப்பதற்கு நான் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டேன்.

அதனால் ஏற்பட்ட ஆட்சேபக் குரல்கள்தான் அவை’ என்றான் சீடன். அவனது கூற்றை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார் குரு. சீடன் தொடர்ந்தான். ‘உண்மையான ஞானம் இல்லாமல், வெறும் அறிவை மட்டுமே வைத்திருப்பவர்களுடன் எங்கள் குரு பேசி, நேரத்தை வீணாக்கமாட்டார் என்று அடித்துச் சொல்லி விட்டேன்.

குருவே! வந்திருப்பவர்கள் வெறும் தர்க்கவாதிகள். போகும் இடமெல்லாம் பற்பல நியாய வாதங்களையும், தர்க்க ரீதியான கொள்கைகளையும் பேசிப் பேசி மக்களிடையே எண்ணற்ற முரண்பாடுகளை உண்டாக்குபவர்கள்’ என்றான்.

அதுவரை அமைதியாக இருந்த குரு, ‘உண்மை தான். ஆனால் அந்த தர்க்கவாதிகளில் நீயும் ஒருவனாக மாறிப்போய்விட்டாய் என்பதை மறந்து விட்டாயே! உன்னை மிகவும் வித்தியாசமானவன் என்று அவர்களுக்கு காட்ட முற்பட்டு, அதே சச்சரவுக்கும், பிரிவுக்கும் நீயே காரணமாகி விட்டாய்’ என்றார்.

சீடன் வெட்கித் தலை குனிந்தான். மவுனம் தன்னை மவுனம் என்று எப்போதும் சொல்வதில்லை. அதுபோலவே, உண்மையானது பண்பாட்டு விளக்கத்தால் நிறுவப்படுவதில்லை.

No comments:

Post a Comment