Tuesday, November 18, 2014

வரலட்சுமி விரதம்

செல்வம்... அதை யார் தான் விரும்ப மாட்டார்கள்...!
"பொருள் இலார்க்கு இவ்வுலகம் இல்லை' என வள்ளுவர் கூறுகிறார். அவரே....
"சிலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர் நோலாதவர் பலர்'- எனக் கூறுகிறார்.
அதாவது, பலர் வறுமையிலும், சிலர் பணச்செழிப்பிலும் இருக்கக் காரணம்........நோன்பு விரதம் என்பவைகளைப் பலர் செய்வதில்லை. சிலர் மட்டுமே செய்து வளம் பெறுகிறார்கள்.
அப்படிப்பட்ட நோன்பினை, விரதத்தை வரலட்சுமிதேவியே கூறியிருக்கிறாள். அது...
மகத தேசத்தில் குண்டினபுரம் என்ற ஊரில் சாருமதி என்பவள் வாழ்ந்து வந்தாள். சாருமதி என்பதற்கு "அழகான அறிவு வாய்த்தவள்' என்பது பொருள். அறிவுக்கு ஏது அழகு?
சாருமதி பெயருக்குத் தகுந்தாற்போல் கணவரிடம் அன்பு காட்டுவதோடு, மாமனார், மாமியாரையும் பேணி வந்தாள். அனைவரிடமும் இனிமையாகப் பேசும் சுபாவம் கொண்டிருந்தாள்.
அவ்வாறு வாழ்ந்த சாருமதியிடம், வரலட்சுமிக்கு மிகுந்த கருணை உண்டானது. ஒருநாள்....
சாருமதியின் கனவில் காட்சி தந்த வரலட்சுமி தேவி,""சாருமதி! உன் அன்பு என்னை வசப்படுத்தி விட்டது. ஆவணி மாதம் பூர்வபட்ச(வளர்பிறை) பவுர்ணமிக்கு முன்னால் வரும் வெள்ளிக்கிழமையில் விரதம் மேற்கொண்டு என்னைப் பூஜிப்பாயாக. உன் வேண்டுதல்களை எல்லாம் நான் நிறைவேற்றுகிறேன்,'' என்று சொல்லி மறைந்தாள்.
கனவு கலைந்ததும் தான் அவளுக்கு உண்மை புரிந்தது.
கணவர், மாமனார், மாமியார் என அனைவரிடமும் கண்ட கனவைப் பற்றிச் சொன்னாள். லட்சுமித் தாய் வழிகாட்டிய இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானித்தாள்.
லட்சுமிதேவி குறிப்பிட்ட அந்த நன்னாளும் வந்தது. சாருமதியும், அவளைச் சார்ந்தவர்களும் விரதத்தை முறைப்படி செய்து முடித்தனர். வரலட்சுமியின் அருளால் வாழ்வுக்குத் தேவையான செல்வங்களுடன், அமைதி, நிம்மதி,குடும்ப ஒற்றுமை அனைத்தும் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தனர். சாருமதியைப் போலவே, நமக்கும் அழகான நல்லறிவை அளித்து நற்செல்வங்களை அருளும்படி வரலட்சுமியை வேண்டுவோம். வளமான வாழ்வு பெறுவோம்.

No comments:

Post a Comment