Monday, November 17, 2014

மன்னித்த அம்மா!

தன் மகன் மும்பைக்கு போய்விட்ட வருத்தத்தில் இருந்தனர் முத்தாத்தாளும் அவளது கணவர் பரமசிவமும். சம்பாதிக்கத்தான் போகிறான் என்றாலும், பெற்றவர்களுக்கு பிள்ளையைப் பிரிந்ததில் ஏக கஷ்டம். இந்தக்காலம் போல் போன் இருந்தால், உடனுக்குடன் பேசிவிடலாம். அப்போதெல்லாம் தபால் தான்.
கடிதங்களில், அவன் பெரிய வேலையில் இருப்பதால் கைநிறைய சம்பாதிப்பதாகவும் எழுதியிருப்பான். இதைப்படித்து அவள் ஆனந்தமடைவாள்.
மகன் அவ்வப்போது அனுப்பும் பணத்தைச் சேர்த்து வைத்தாள். அம்மா கையில் பணத்தைக் கொடுத்தால் அவள் தான் ஆறை நூறாக்கி விடுவாளே! இங்கு வந்த பணத்தை அவள் சிறுதொழில் செய்து பெருக்கி விட்டாள்.
ஒருவழியாய் பெரும் பணம் சேர, 30 பவுனுக்கு இரண்டு செயின் வாங்கி விட்டாள்.
தன் மகனின் வெற்றிக்கு காரணமான மாரியம்மனை ஆடிச்செவ்வாயன்று வணங்குவதற்கு நகையைப் போட்டுக் கொண்டு கோயிலுக்குச் சென்றாள். கூட்ட நெரிசலில் யாரோ நகைளை திருடி விட்டனர். அழுது அரற்றினாள் முத்தாத்தாள்.
""என் மகன் பட்ட பாடெல்லாம் வீணாகி விட்டதே! இதை எடுத்தவர்கள் கை வெந்து புண்ணாகட்டும்,''என சாபமிட்டாள். கவலையில் அவளுக்கு நோயே வந்து விட்டது.
பரமசிவன் மிகவும் வருந்தினான். நகையும் போய் மனைவியும் படுத்து விட்டாளே! மாரியாத்தா! ""அதைத் திருடியவனின் கை, கால் விளங்காமல் போகட்டும். அவன் குடும்பமே அழியட்டும். அம்மா! நீ தான் இதற்கு நல்ல தீர்ப்புசொல்ல வேண்டும்,'' என்று அரற்றினான்.
ஒருமாதம் ஓடி விட்டது.
ஆடி கடைசி செவ்வாயன்று பரமசிவன் கோயி<லுக்குப் போனான். அங்கே, ஒரு இளைஞன் தன் மனைவியுடன் மாரியம்மன் முன்னால் நின்று, ""அம்மா! நான் இனி இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.
என் மனைவி கழுத்து வீங்கி தவிக்கிறாள்.
எனக்கு பக்கவாதம் வந்து ஒரு கை வேலை செய்யவில்லை. நான் யாரிடம் திருடினேன் என்பது நினைவில்லை. அவர்களுக்கு சேர வேண்டியதை உனக்கு தருகிறேன்,'' என்று உண்டியலில் போடப் போனான்.
இதைக் கேட்ட பரமசிவன் ஓடிப்போய் அவனைத் தடுத்தான்.
""தம்பி! நீ திருடியது என் மனைவியிடம் தான். அவள் இதை நினைத்தே படுத்த படுக்கையாகி விட்டாள். என் மகன் உழைப்பில் கிடைத்த பொருள் இது. இந்த மாரியாத்தா மீது சத்தியமா சொல்கிறேன். இது எங்கள் பொருள் தான். இதை என்னிடம் ஒப்படைப்பதே தர்மம்,'' என்றான்.
அந்த முன்னாள் திருடன் மகிழ்ந்தான்.
""அண்ணா! இதை உண்டியலில் மனமின்றி போடவே வந்தேன். ஆத்தா கருணை செய்து விட்டாள். உங்களை நான் நம்புகிறேன். இதோ! பிடியுங்கள்!'' எனச் சொல்லி கொடுத்தான். பொருள் கிடைத்த மகிழ்ச்சியில் வீடு திரும்பினான் பரமசிவன். முத்தாத்தா அதை கண்களில் ஒற்றிக்கொண்டாள்.
""அம்மா! என் மகனுக்கு இன்னும் வளத்தைக் கொடு, அவன் உ<னக்கு தங்க கிரீடமே சூட்டுவான்,'' என்று வேண்டிக்கொண்டாள்.
அதன்படியே அவள் மகனும் மேன்மேலும் உயர்ந்து கோயிலுக்கு தேவையானதைச் செய்தான்.
யாரேனும் வாழ்வில் தவறு செய்திருந்தால், ஆடிமாதம் அம்மனிடம் மன்னிப்பு கேட்டு, பிராயச்சித்தம் செய்தால் போதும். அம்பாள் அவர்களை மன்னித்து ஏற்பாள்.

No comments:

Post a Comment