Tuesday, November 18, 2014

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு, அந்த அம்பாளே மகளாய் வருவாள்

தேவிசரண் என்ற ஏழை பக்தருக்கு சர்வ மங்களா என்ற மகள் இருந்தாள். சர்வமங்களாவின் அழகைக் கண்ட ஒரு பணக்காரர் தன் வீட்டு மருமகளாக்கிக் கொண்டார். தேவிசரணுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. அந்த மகளோ, திருமணத்துக்குப் பிறகு, பெற்றோரை மறந்து விட்டாள்.
தேவிசரண் மகளைப் பார்க்க அவளது வீட்டுக்குச் சென்றார். மகளின் முகமே அவள் நன்றாக இருக்கிறாள் என்பதைப் புலப்படுத்தியது.
""சர்வமங்களா! உன் அம்மா உன்னைப் பார்க்க ஆசைப் படுகிறாள். நவராத்திரி பண்டிகைக்கு நீ வீட்டுக்கு வர வேண்டும்'' என்றார்.
சர்வமங்களா வீட்டினர், ""மருமகள் இல்லாவிட்டால் எதுவும் நடக்காது. இந்தவீட்டுக்கு எஜமானி, மந்திரி எல்லாம் இவள் தான்!'' என்று சொல்லி அனுப்ப மறுத்தனர்.
வீட்டுக்குச் சென்ற தேவி சரண் மனைவியிடம், சர்வமங்களா பற்றி சொன்னார். அவளுக்கும் மகளைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் தோன்றியது. வருத்தத்தில் உடம்புக்கு முடியாமல் படுத்து விட்டாள். வீட்டு வேலைகள் போட்டது போட்டபடி கிடந்தது.
நவராத்திரி நெருங்கியது. பூஜைக்கு முதல்நாள் சர்வமங்களா தாய்வீட்டுக்கு கிளம்பி வந்து விட்டாள்.
""சர்வமங்களா வந்துவிட்டாள்'' என்று மகிழ்ச்சியுடன் கத்தினாள் அம்மா. மகளைப் பார்த்ததும் அவளது நோய் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. தாயும், மகளும் தேவி பூஜைக்கு ஆயத்தமானார்கள். பூஜையை
சர்வமங்களாவே செய்தாள். அவள் செய்த பட்சணங்கள் சாப்பிட அமிர்தமாக இருந்தது. புகுந்த வீட்டில் பழகிய புதுவிதமான பதார்த்தங்களை எல்லாம் சர்வமங்களா தயாரித்து பிரசாதமாகப் படைத்தாள். பூஜைக்கு வந்த பெண்கள் சர்வமங்களாவின் செயல்பாட்டைக் கண்டு ஆச்சரியப்பட்டனர்.
ஆனால், நவராத்திரி நிறைவு நாளன்று தேவிக்குப் படைக்க வேண்டிய பிரசாதத்தை சர்வ மங்களாவே சாப்பிட்டு விட்டாள்.
""அப்பா! என் வயிறு நிறைந்து விட்டது! பரமதிருப்தி!'' என்று மகிழ்ச்சி பொங்க சொன்னாள்.
""ஏனம்மா இப்படி செய்தாய்? உனக்கு புத்தி பேதலித்து விட்டதா! பூஜைக்கு முன்பே சாப்பிட்டு விரதத்தை பாழாக்கிவிட்டாயே! முதலில் வெளியே போ! '' என்று கோபத்தில் கத்தினார் தேவிசரண்.
தன் மனைவியிடம் புதிதாக பிரசாதம் தயார் செய்யச் சொன்னார். சர்வமங்களா தன் கணவன் வீட்டுக்குக் கிளம்பி விட்டாள்.
அன்று இரவு தேவிசரணுக்கு தூக்கம் வரவில்லை. காலையில் எழுந்தவுடன் தன் மகள் வீட்டுக்குக் போனார்.
""என்மேல் கோபமா அம்மா'' என்று வருத்தத்துடன் கேட்டார்.
""எதற்கு நான் கோபப்பட வேண்டும்'' என்று அப்பாவித்தனமாய் கேட்டாள் மகள். தேவிசரண் ஒன்றும் புரியாமல் விழித்தார். மகளிடம் நவராத்திரி கடைசி நாளில் நடந்ததை சொல்ல, ""நான் அங்கு வரவே இல்லையே,'' என்றாள் அவள்.
அப்போது தான், தன் மகளின் வடிவத்தில் வந்தது சாட்சாத் அம்பாள் என்ற உண்மை தெரிந்து கொண்டார் தேவிசரண். பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோருக்கு, அந்த அம்பாளே மகளாய் வருவாள்

No comments:

Post a Comment