Tuesday, November 18, 2014

வரப்போவதை நினைத்து கவலைப்படுவதால் பிரச்னை நீங்குவதில்லை

ஒரு நாட்டில் வித்தியாசமான வழக்கம் ஒன்று இருந்தது. பரம்பரையாக, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் அங்கு மன்னராக முடியாது. குடிமக்களில் யார் வேண்டுமானாலும் மன்னர் ஆகலாம். ஆனால், பதவிக்காலம் ஓராண்டு மட்டும் தான்.
அவ்வாறு மன்னர் ஆகிறவர்கள் பட்டம் கட்டிக் கொள்வதோடு சரி... அப்புறம் அரச வாழ்வையே வெறுக்கத் தொடங்கி விடுவார்கள். பட்டு மெத்தையில் படுத்தாலும் தூக்கம் வராது.
அறுசுவை உணவே என்றாலும் சாப்பிடப் பிடிக்காது. ஆட்சி முடிந்து விடுமே என்ற கவலை வந்து விடும்.
இப்படியே ஓராண்டு கழிந்ததும், கடைசிநாளில் அரண்மனைக் காவலர்கள் மன்னரை ஒரு படகில் ஏற்றிச் சென்று ஆளே இல்லாத தீவில் விட்டு விடுவார்கள். வனாந்திரமாக இருப்பதால் மலைப்பாம்பு போன்ற விஷ ஜந்துக்களின் பிடியில் சிக்கி, உயிர் விடுவதைத் தவிர வேறு வழி அங்கில்லை. இப்படியே ஆண்டுதோறும் ஒருவர் மன்னராவதும், கடைசி நாளில் கண்ணீருடன் தீவுக்குச் செல்வதும் வழக்கமாகிப் போனது.
அந்த ஆண்டு இளைஞர் ஒருவர் நாட்டின் மன்னராக இருந்தார். பதவியேற்ற நாளில் மட்டுமில்லாமல் மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியாக எப்போதும் இருந்தார். மக்களுக்குப் பயனுள்ள திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். எதிரி நாட்டினர் படையெடுத்து வந்தபோது, திறமையுடன் போரிட்டு நாட்டைக் காப்பாற்றினார். முன்பை விட வரியைக் குறைத்து சலுகைகளை வழங்கினார். அவருக்கும் பதவிக் காலம் முடியும் நேரம் வந்தது. அன்றும் வழக்கம் போல அறுசுவை பரிமாறப்பட்டது. அதை ரசித்து ருசித்தார்.
இரவு பட்டு மெத்தையில் நிம்மதியாக தூங்கினார். மறுநாள் காலையில் தீவுக்குப் புறப்படவும் தயாரானார்.
மன்னரை அழைத்துச் செல்ல படைத்தளபதி காவலர்களுடன் வந்தார். மன்னரை தீவுக்குக் கொண்டு செல்லப் போகிறோமே என்ற கவலை தளபதிக்குக் கூட இருந்தது. ஆனால், மன்னர் சிறிதும் வருந்தவில்லை. படகில் தீவுக்குச் செல்லும்போது, தளபதி, ""மன்னா! தீவில் நீங்கள் மட்டும் தான் தனியாக இருக்க வேண்டும். உங்கள் உயிருக்கு அங்கே உத்தரவாதம் கிடையாது. அதை சிறிதும் உணராமல் எப்படி சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
""விதியை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் மன்னரானதும் செய்த முதல்பணியே ஆளில்லாத தீவை சீரமைத்து, மக்கள் வாழும் அளவுக்கு வசதிகள் செய்ய வேண்டும் என்பது தான். என் நம்பிக்கைக்குரிய நபர்களை ரகசியமாகத் தீவுக்கு அனுப்பினேன். அவர்கள் காட்டை அழித்து நாடாக மாற்றினர். எனக்கான அரண்மனையும் கூட இப்போது அங்கு தயாராக இருக்கிறது. அவர்கள் என் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்,'' என்றார் மன்னர்.
இதைக் கேட்ட தளபதி ஆச்சர்யம் கொண்டார். அங்கு ஆளில்லாத் தீவு அழகான நாடாக காட்சியளித்தது. மன்னரை பணியாட்கள் மாலை அணிவித்து வரவேற்றனர். உணவும் தயாராக இருந்தது. தளபதிக்கும், உடன் வந்தவர்களுக்கும் தீவில் மன்னர் விருந்தளித்தார்.
வரப்போவதை நினைத்து கவலைப்படுவதால் பிரச்னை நீங்குவதில்லை. அதற்கான தீர்வைத் தேடுபவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

No comments:

Post a Comment