Friday, January 9, 2015

சகாதேவனின் தர்ம விளக்கம் :

சகாதேவனின் தர்ம விளக்கம் :
பஞ்சபாண்டவர்களில் கடைக்குட்டியான சகாதேவன் பற்றி நாம் அறிவோம்!! அவன் கடைக்குட்டியாக இருந்தாலும் பல விஷயங்களில் முதன்மை பெற்றவனாக இருந்தான்!! அவன் சிறந்த வாள்வீரன்!! பாண்டவர்களில் சிறந்த ஞானியாக விளங்கியவன் சகாதேவன் மட்டுமே!! அதுவுமில்லாமல் ஒரு சிறந்த ஜோதிட நிபுணன் !! அவன் தந்த அற்புதமான தர்ம விளக்கம் பற்றிக் கூற விழைகிறேன் !!
கவுரவரும் பாண்டவரும் யுத்தத்துக்கு தயாராக ஆன நேரம்!! கவுரவர்கள் குருஷேத்திரத்தின் ஒரு புறமும் பாண்டவர்கள் அதன் மறுபுறமும் பெரும்படைகளுடன் முகாமிட்டிருந்தார்கள்!! போருக்கு நாள் குறிக்கப்பட்டு விட்டது!!! அந்தக் கால யுத்த நடைமுறைகளின் படி யாராவது ஒருவர் களப்பலி கொடுக்கப்படவேண்டும்!! அவரும் நல்ல முகூர்த்தத்தில் தரப்பட வேண்டும்!! களப்பலி குறித்தும் களப்பலியிடும் முகூர்த்தம் குறித்தும் துரியோதனன் கவலையில் ஆழ்ந்தவன் மாமன் சகுனியிடம் அது குறித்துப் பேசினான்!! சகுனியோ களப்பலி முகூர்த்தம் குறித்து சொல்லுமளவு தான் பெரிய ஜோதிடன் இல்லை என்றும் வேண்டுமானால் இது குறித்து சகாதேவன் சரியான முகூர்த்தத்தை சொல்லக் கூடும் என்று சொல்ல துரியோதனன் எதிரி முகாமில் உள்ள சகாதேவனைக் கேட்பதா என்று தயங்கிவன் பின் சகுனியின் சமாதானத்துக்குப் பின்னால் சகாதேவனை சந்திக்க விரைந்தான்!!
பாண்டவர்கள் முகாம்!! சூரியனைப் போன்ற தேஜஸுடன் தேக்கு மரம் போன்ற வலுவான உடலுடன் எதிரி அரசன் துரியோதனன் வருவதைக் கண்ட வாயிற்காவலர்கள் விரைந்து சென்று கண்ணனிடமும் தர்மனிடமும் தெரிவிக்க அவர்கள் முகாமின் வெளியில் வந்து பார்த்தனர்!! ஆனால் அவர்களை லட்சியமே செய்யாமல் துரியோதனன் ஒரு வீரனிடம் சகாதேவனின் முகாம் உள்ள இடம் பற்றிக் கேட்டு நேராக அங்கு போனான்!!
வாயிலில் அண்ணன் துரியோதனன் வந்து நிற்பது கண்டு ஆச்சரியமடைந்த சகாதேவன் பாரத நாட்டுக்கே உள்ள பண்பான வீட்டுக்கு வந்து விட்டவன் எதிரி என்றாலும் அவனை வரவேற்க வேண்டும் என்று வாருங்கள் அண்ணா எனக் கூறி அவனை உள்ளே அழைத்துச் சென்று ஆசனத்தில் அமர வைத்து அவன் காலில் விழுந்து வணங்கவும் செய்தான்!! சகாதேவன் பண்பினால் நெகிழ்ந்து போன துரியோதனன் அவனை வாழ்த்தி அமர வைக்க சகாதேவனோ 'அண்ணா இந்த ஏழையின் குடிலுக்கு வந்தது மிக மகிழ்ச்சி நான் தங்களுக்கு என்ன செய்ய வேண்டுமெனக் கட்டளையிடுங்கள்!! ' என்றான்!!
துரியோதனன் மகிழ்ந்து போய் சகாதேவனிடம் தனக்கு களப்பலி முகூர்த்தம் குறித்துத் தருமாறு கேட்க சகாதேவன் ஒரு கணம் தயங்கினான். பின்னர் '' அண்ணா நான் பெற்ற ஜோதிட சாஸ்திர அறிவின் படி களப்பலி கொடுக்க மிகச்சிறந்த முகூர்த்தம் அமாவாசை திதியே ஆகும் !! அமாவாசை திதியன்று களப்பலி கொடுத்துப் போரிடுபவன் தோற்பதில்லை என்றே சாஸ்திரம் சொல்கிறது!! இது சத்தியம்!!'' எனச் சொல்ல துரியோதனன் மிகவும் மகிழ்ந்து சகாதேவனைக் கட்டியணைத்து நன்றி சொல்லிப் புறப்பட்டுப் போனான்!!
துரியோதனன் சென்ற பின்னர் கண்ணனிடம் வந்து சேர்ந்த சகாதேவனிடம் கண்ணனும் தர்மனும் துரியோதனன் வந்து சென்ற விஷயம் பற்றிக் கேட்க அவனும் நடந்ததை விளக்கினான்!! களப்பலி முகூர்த்த நாள் குறித்து சொன்னவுடன் கண்ணன் '' கிழிந்தது போ!! ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது! நீ அமாவாசை என்று அவனிடம் சொல்லி விட்டாயல்லவா இனி அவன்தான் வெல்வான் !! ஏன் சகாதேவா எதிரி வந்து கேட்கிறான் நீ வேறெந்த நாளையோ சொல்லியிருக்கலாம் அல்லது இது குறித்து நான் கற்றதில்லை என்றாவது சொல்லித் தப்பித்திருக்கலாம்!! இப்படி செய்து விட்டாயே'' என்று கடிந்து கொண்டான்!!
அப்போது சகாதேவன் சொன்னான் '' கண்ணா உனக்குத் தெரியாதா? ஒரு கலையில் தேர்ச்சி பெற்ற வித்தகனுக்கு சொல்லப்படும் தர்மம் அவனிடம் அந்தக் கலை குறித்த சந்தேகங்களுடன் வருபவனுக்கு உண்மையையே உரைக்க வேண்டும் என்பதல்லவா?? அதுமட்டுமின்றி தெரிந்த வித்தையை தெரியாது என்று பொய் சொல்லவும் கூடாதல்லவா ?? என்னுடைய ஜோதிடக் கலை எனக்கு சொன்ன உண்மையை நான் துரியோதனனிடம் உரைக்க நேர்ந்தது அவ்வளவுதான்! என் தொழில் தர்மத்தை நான் பின்பற்றினேன் !!''.
இதை சகாதேவன் உரைத்தவுடன் அந்த தர்மாத்மாவை கண்ணன் கட்டியணைத்துப் பாராட்ட தர்மன் நீயல்லவோ எனக்குத் தம்பி என்று அவனைக் கட்டியணைத்து மகிழ்ந்து பாராட்டினான்!! பின் அமாவாசை திதியை கண்ணன் பொய் சொல்லி மாற்றியது குறித்த கதை நாமெல்லாம் அறிந்ததே !!!

No comments:

Post a Comment