Sunday, May 17, 2015

திருநீறு அணிவது எதற்காக?

திருநீறு அணிவது எதற்காக?
நாள் தோறும் எத்தனையோ அதிர்வுகள் (vibrations), வெளியே இருந்து பலவழிகளிலும் நம் உடலையும் மனதையும் வந்து சேர்கின்றன. அவற்றில் நன்மையானவையும், தீமையானவையும் கலந்திருக்கின்றன. அவை நம் உடலின் சூட்சும சக்ராக்கள் வழியாக நிகழ்வதாக நம் முன்னோர் கருதினார்கள்.
அதிலும் மூன்று சக்ராக்கள் அந்த அதிர்வுகளை ஈர்ப்பதிலும் தடுப்பதிலும் பெரும்பங்கு வகிப்பதாக முன்னோர் கண்டிருந்தார்கள். அவை மனிதனின் நெஞ்சுப்பகுதியில் அமைந்துள்ள அனாஹதா சக்ரா, மனிதனின் தொண்டைப் பகுதியில் அமைந்துள்ள விசுத்தி சக்ரா, மற்றும், புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள ஆக்ஞா சக்ரா.
அனாஹதா சக்ரா இதயத்தையும், அன்பு, கருணை, இரக்கம் போன்ற மேலான உணர்வுகளையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். விசுத்தி சக்ரா தைராய்டு சுரப்பியையும், பேச்சுத் திறனையும், எந்த விஷயத்தையும் அடுத்தவருக்குப் புரிய வைக்கும் சக்தியையும் கட்டுப்படுத்துகிறது. ஆக்ஞா சக்ரா கூர்மையான, தெளிவான புறப்பார்வை மற்றும் அகப்பார்வை, ஆழ்மன சக்திகள், ஞானத் தெளிவு ஆகியவற்றை நிர்ணயிக்கிறது.
திருநீறிற்கு அதிர்வுகளை உள்வாங்கும் திறன் உண்டு. இந்தச் சக்ராக்கள் இருக்கும் இடத்தில் திருநீறு பூசிக் கொள்வது நல்ல அதிர்வுகளை உள்ளுக்கு ஈர்த்துக் கொள்ளவும், தீய அதிர்வுகளை தடுத்து விடவும் உதவுகிறதென முன்னோர் நினைத்தார்கள். அதனால் தான் நெற்றியிலும், தொண்டைப் பகுதியிலும், நெஞ்சுப்பகுதியிலும் மட்டுமாவது நல்ல அதிர்வுகளை நம் உடல் ஏற்றுக் கொள்ளும் விதமாக திருநீறு இட்டுக் கொள்ளும் வழக்கம் நம் முன்னோரிடத்தில் இருந்தது. சட்டை அணியும் வழக்கம் ஆரம்பித்து விட்ட பின்னர் நெற்றி மற்றும் தொண்டைப்பகுதியில் மட்டும் திருநீறு இட்டுக் கொள்வதை பிறகாலத்தவர்கள் கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
சில சக்திகளை வசப்படுத்தியவர்கள் அடுத்தவர்களை தன்னிலை இழக்கச் செய்யவும், அவர்களை வசப்படுத்தவும் அவர்களது ஆக்ஞா சக்ரா மூலம் முயலக் கூடும். மனோ தத்துவத்தில் ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றை செயல்படுத்துவது ஆக்ஞா சக்ரா வழியாகத் தான். அது போன்ற ஆட்கொள்ளல்களைத் தடுத்து நிறுத்தவும் புனிதத் திருநீறு நெற்றியில் இடப்படுகிறது.
மேலும் திருநீறுக்கு சிறப்பான மருத்துவ குணங்களும் உண்டு. முறைப்படி தயாரான திருநீறு ஒரு நல்ல கிருமிநாசினியாக கருதப்படுகிறது. திருநீறு நம் உடலில் உருவாகும் வியர்வையை உறிஞ்சும் தன்மையைக் கொண்டதால் சளி, தலைவலி ஆகியவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது. தலைக்குக் குளித்த பின் நெற்றி நிறையத் திருநீறை அணிந்து கொண்டால் சளி பிடிக்காது என்று வயதான பெரியவர்கள் கூறுவதுண்டு. பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பதில் திருநீறு பயன்படுத்தப் படுகிறது.

No comments:

Post a Comment